"எதிர்பார்த்த' முடிவை தி.மு.க., எடுத்துள்ளதால், சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்த விவகாரத்தில், பார்லிமென்டில், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்த, காங்கிரசுக்கு முழு தெம்பு கிடைத்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, அடுத்த வாரம் லோக்சபாவில் விவாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் நிலவிய முட்டுக்கட்டை, முடிவுக்கு வரவுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியது முதல், சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்த பிரச்னை, பெரிய அளவில், இரு சபைகளையும் ஆட்டிப் படைத்தது. இந்தப் பிரச்னையால், மூன்று நாட்களாக இரு சபைகளிலும் அமளி நிலவி, சபைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
முற்றுகை
லோக்சபாவில், ஓட்டெடுப்பு வகை செய்யும், விதி எண், 184ன் கீழ், அன்னிய முதலீடு பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என, பா.ஜ., - அ.தி.மு.க., மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியதே இதற்கு காரணம்.நான்காவது நாளாக நேற்று, லோக்சபா துவங்கியதும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., - எம்.பி..க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். "சில்லரை வர்த்கத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது; இவ்விஷயத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தினால் மட்டுமே, சபையை நடத்த அனுமதிப்போம்' என, கோஷங்கள் எழுப்பினர்.இது ஒருபுறமிருக்க, தி.மு.க., எம்.பி..க்களும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, "ஸ்பெக்ட்ரம் ஊழலில், உண்மையான நஷ்டம் எவ்வளவு என்பது குறித்து, மாறுபட்ட செய்திகள் வருகின்றன. எனவே, அதுபற்றி விவாதம் நடத்த வேண்டும்' என, கோஷமிட்டனர். இதனால், சபையில் கூச்சல், குழப்பம் அதிகமானது.
பிற எதிர்க்கட்சிகளும், அன்னிய முதலீடு பிரச்னைக்காக, குரல் கொடுத்ததால், அமளி அதிகமாகி, ஒரு மணி நேரத்திற்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.மீண்டும் சபை கூடிய போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யான சவுகதா ராய், பேச அழைக்கப்பட்டார்.
அவர், மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐ.மு.கூட்டணியில் இருந்தும், தங்கள் கட்சி வெளியேற நேர்ந்தது ஏன் என்பது குறித்து விவரித்தார்.இதன் பின், மீண்டும், அன்னிய முதலீடு பிரச்னை குறித்து, எதிர்க்கட்சிகள் ஆவேசம்காட்டவே, சபை அமளிக்காடானது. வேறு வழியின்றி, மதியம், 2:00 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதித்த விவகாரத்தில், இதுவரை ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு, அரசு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான், நேற்று முன் தினம் நடந்த, அனைத்துக் கட்சி கூட்டமும் தோல்வி அடைந்தது.
ஆனால், நேற்று சென்னையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்நதாலும், மத்தியில் ஆட்சி கவிழக் கூடாது; எனவே, சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக, பார்லி மென்டில் ஒட்டெடுப்பு கொண்டு வரப்பட்டால், ஆட்சி கவிழ்வதை தடுக்க, ஐ.மு., கூட்டணி அரசுக்கு அதரவு அளிப்போம்' என, தெரிவித்திருந்தார்.தி.மு.க., வின் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்று என்றாலும், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் நிலவும், முட்டுக் கட்டை நிலையை முடிவுக்கு கொண்டு வர உதவியுள்ளதாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல, காங்கிரசும் மிகுந்த தெம்புடன், "பார்லிமென்டில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு தயார்' என, அறிவித்தது. அதற்கான ஏற்பாடு களிலும் இறங்கியுள்ளது.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று பார்லிமென்டிற்கு விடுமுறை. நாளை கூடும் போது, சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பாக, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்துவது பற்றி, சபாநாயகர் மீரா குமார் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம்.இதையடுத்து, அடுத்த வாரம் ஏதாவது ஒரு நாளில், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நம்பிக்கை
லோக்சபாவில் ஆளும் கூட்டணியின் பலம்
ஆட்சி கவிழ அனுமதிக்க முடியாது : கருணாநிதி
ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், மத்தியில் ஆட்சி கவிழக் கூடாது. எனவே, சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு அனுமதி தொடர்பாக, பார்லிமென்டில், ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டால், ஐ.மு., கூட்டணி அரசுக்கு அதரவு அளிப்போம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார்.
"சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு அனுமதியை, ஆதரிக்க மாட்டோம்' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்தார்.இதையடுத்து, இம்மாதம், 25ம் தேதி, காங்கிரஸ் மேலிட தூதரும், மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத், சென்னை சி.ஐ.டி., காலனி வீட்டில், கருணாநிதியை சந்தித்தார். அப்போது, பார்லிமென்டில் ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டால், மத்திய அரசை தி.மு.க., ஆதரிக்க வேண்டும் என, கருணாநிதியிடம் குலாம்நபி ஆசாத் ஆதரவு திரட்டினார்.அப்போது, "சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு அனுமதி விவகாரம் தொடர்பாக, மீண்டும் ஐ.மு., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை கருணாநிதி முன் வைத்தார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, ஐ.மு., கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. இந்நிலையில், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு அனுமதி தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசு கவிழ்வதை தடுக்க, ஐ.மு., கூட்டணி அரசுக்கு, தி.மு.க., ஆதரவு தர முடிவு செய்கிறது என்ற அறிக்கையை, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
அவரது அறிக்கை:
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும், மத்திய அரசின் முடிவை, தி.மு.க., ஏற்கவில்லை; எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை, ஏற்கனவே அறிவித்திருந்தது. பார்லிமென்டில், 184வது விதியின் கீழ், இப்பிரச்னை தொடர்பாக, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன.அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஓட்டெடுப்பு நடைபெறுமேயானால், இன்று மத்தியிலே உள்ள ஐ.மு., கூட்டணி அரசு, கவிழ்ந்து விடக் கூடும் என்ற நிலை, இருப்பதை மறுப்பதற்கில்லை.மாநிலங்களைப் பொறுத்தவரையில், மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக, எடுத்த முடிவு கட்டாயப்படுத்தப் படமாட்டாது என, அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தை பொறுத்தவரையில், எத்தகைய இடைஞ்சலும் வராது. அன்னிய முதலீடு குறித்து, ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இன்னமும் இருந்தாலும், உடனடியாக இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டால், அதன் காரணமாக, ஏற்படக் கூடிய, எதிர்மறை விளைவுகளை எண்ணிப் பார்த்து, கசப்பான நிலையில், இப்பிரச்னையில், ஐ.மு., கூட்டணி அரசுக்கு, தி.மு.க., ஆதரவு தர முடிவு செய்கிறது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
உள்நோக்கம்: அறிவாலயத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து விட்டு, மதியம் வீட்டிற்கு புறப்படும் முன், நிருபர்களை கருணாநிதி சந்தித்தார்.அப்போது, "மத்திய அரசுக்கு தி.மு.க., திடீரென ஆதரவளிக்க, என்ன நெருக்கடி என்றும், ஆதரவு அளிக்க மாட்டோம் என, ஏற்கனவே பல முறை சொல்லியிருந்தீர்களே? என்ற கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.அதற்கு கருணாநிதி, "ஒட்டெடுப்போடு கூடிய விவாதம் தேவை என, பா.ஜ., போன்ற கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துவது, எப்படியாவது ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது. எனவே, தான், நாங்கள் இந்த முடிவை எடுக்க நேரிட்டது' என்றார்.
வரவேற்பு
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரத்திலும் ஈழம் விவகாரத்திலும் தி.மு.க பல்டி அடித்துவிட்டதாக நண்பர்கள் சிலரும், பத்திரிகைகளும் கூறுகிறார்கள். FDI விவகாரத்தில் தி.மு.க ஆரம்பத்திலேயே எதிர்ப்பதாகத்தான் கூறிவருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. பாராளுமரத்திலும் எதிர்த்துதான் குரல் கொடுத்து வருகிறது. அதில் மாநிலங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே FDI அனுமதிக்கப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள அ.தி.மு.க வும் இதனை அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டதால் தமிழத்தைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினை எழவில்லை. பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை ஓட்டெடுப்பு நடத்தினால் அரசு கவிழ்ந்து அதன்மூலம் மதவாத சக்திகள் தலைதூக்கும் ஆபத்து இருப்பதாலேயே அரசுக்கு ஆதரவாக வாகாளிப்பதாக தி.மு.க அறிவித்துள்ளது. அதுபோல 1989 ல் டெசோ ஆரம்பித்ததிலிருந்தே இலங்கையிலுள்ள போராளிகளுக்குள் சகோதர யுத்தம் கூடாது என்று தி.மு.க வலியுறுத்தி வந்துள்ளது. அதைக் கேட்காமல், மற்ற போராளிக் குழுக்களைஎல்லாம் அழித்த, LTTE இயக்கத்தின் சர்வாதிகாரப் போக்கினால்தான் இன்று இலங்கையில் தமிழர்களுக்காகப் போராட ஒரு குழுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்கத்தான் பேரம் பேசி இந்த ஆதரவை கருணாநிதி மத்திய அரசுக்கு வழங்கியிருக்கிறார் என்று பலரும் அபத்தமாகக் கூறுவது உண்மையல்ல. அப்படி பேரம் பேசுவதாக இருந்தால் 2 ஜி வழக்கு ஆரம்பத்திலேயே அதைச் செய்திருக்க முடியும். 2 ஜி வழக்கைப் பொருத்தவரை சட்டத்தின்படியே நடைபெற்று வருகிறது. இல்லையெனில் ராஜா ஜெயிலுக்கப் போயிருக்க மாட்டார். இந்த வழக்குக்கே தொடர்பில்லாத கனிமொழி சிறை சென்றிருக்க நேர்ந்திருக்காது. ஏன் அப்போது பேரம் பற்றி யாரும் பேசவில்லை? அப்படியானால் எப்போதோ மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றிருக்கலாமே? இன்று அதே 2 ஜி வழக்கில் CAG அதிகாரியின் கூற்று இவ்வழக்கில் சதி உள்ளது என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளதே? "மாமியார் உடைத்தால் மண்சட்டி" ஜெயலலிதா எதைச் செய்தாலும் போற்றுவதும், கருணாநிதி குடும்பத்தைத் தூற்றுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள் பிதற்றுவது மக்களுக்குப் புரியும். வாஜ்பாய் அரசை அவசரப்பட்டு கவிழ்த்ததைப் போல கருணாநிதியும் அவசரப்படவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். மதவாத அரசு வந்துவிடக்கூடாது, மதவாதம் தலைதூக்கிவிடக்கூடாது என்பதற்காக கருணாநிதி எடுத்த இந்த முடிவு உண்மையிலேயே ராஜதந்திரம் மிக்க, போற்றத்தகுந்த முடிவாகும்.
இந்த சில்லறை வணிகத்தில்.... அந்நிய முதலீடு என்பதில் தவறில்லை... ஆனால்... கருணா அடித்த பல்டிதான் பெருங்கொடுமை... இதை முன்னமே... காங்கிரஸ் கட்சியோடு கலந்து பேசி.. முடிவை அறிவித்திருக்கலாம்..தேவையானவற்றை..முன்கூட்டியே பெற்றிருக்கலாம் ( ப சி வந்தபோதே )..இது அவர் முரண்பாட்டின் மொத்த உருவாமாக இருக்கிறார்.(எப்போதும் போல ).. இதில் FDI வேண்டாமென்பவர்கள்... எத்தனை பேர்... இந்திய பொருட்களை மட்டுமே உபயோகிபவர்கள்.... அதாவது... colgate , sulsilk .... clinic plus . LUX , Hamam , horlicks , suzuki , honda நோக்கியா , சாம்சுங், LG உள்ளிட்ட எந்த வெளிநாட்டு நிறுவனத்தின் பொருட்களையும் உபயோகிக்காதவர்கள் ...ஏன் இந்த நிறுவனத்தின் லாபம் மட்டும் வெளி நாடுகளுக்கு செல்வதில்லையா...? ஏன் இங்கே எதிர் குரல் கொடுப்பவர்களில் ஒருவருமே... எந்த வெளிநாட்டு நிறுவனத்தின்.. சம்பளத்தை... வாங்கிய..வாங்குபவர்கள் இல்லையா...? சரி... ஒரு பொருள்... ஒரே பொருள்... ஒரு இடத்தில ரூ 10 இக்கும், அதே பொருள் அருகில் வேறு ஒரு கடையில்... ரூ 8 விற்றால்.... எங்கே வாங்குவீர்கள்... என்னை கேட்டால்... நான் குறைவான ரூ 8 விற்கும் கடையில்தான் வாங்குவேன்.... அப்படியிருக்கும் பொது.... நீங்கள்...அப்புறம் எப்படி..இந்த FDI எதிர்க்க முடியும்... இங்கேயே.. சென்னை... ஸ்பென்சர் பல காலமாக... இயங்கிதானே வருகிறது... அங்கே எல்லா பொருட்களும் கிடைக்கிறதே.. ஏன்....அதை எதிர்க்கவில்லை.?. சரி.. பின்னர்.. nilgiris ..More ... சந்திரபாபு நாயுடுவின் வின் heritage இப்போதும் உள்ளதே.. அது இந்த ரிலையன்ஸ் வந்தபோது.. இதே வணிகர்கள் சிகப்பு கம்பள வரவேற்ப்பா கொடுத்தனர்...இவர்கள் .. செய்யாத ஆர்ப்பாட்டமா... கடையடைப்பா...மறியலா...அது அந்த கடைகளை. அடித்தும் உடைத்தனரே... ? ஏன் அந்த பகுதி கடைகாரர்கலேல்லாம் .. தொழிலை விட்டா போய்விட்டனர்.( அரசியல்வாதிகளில் திருமா மட்டுமே ஆதரித்தார்... ராமதாஸ் கண்டபடி எதிர்த்தார் ).. இது வீண்பயம்... அதுவும்.... இவர்கள்... நகரம்.. பெருனகத்தில் மட்டுமே.... தொழில் நடத்த முடியும்...மேலும் வால்மார்ட் போன்றவர்களால்... பல நாடுகளில் வெற்றிகரமாக தொழில் நடத்த முடியவில்லை... தென்கொரியாவில்... பத்தாண்டுகளில்..மூடிவிட்டு ஓடிவிட்டனர்... ஆகா..இது வீண் பயம்... இதுவும் கடந்து போகும்....மொத்தத்தில்" survival of the fittest " எனபது இதற்கும் பொருந்தும்... மற்றபடி..வீன்கூச்ச்சல் மட்டுமே மிஞ்சும்...
அரசியல்னு பார்த்தோம்னா இப்போதைக்கு யாரும் பொது தேர்தலுக்கு தயாராக இல்லை... காங் வெளியேற்றுவதில் மாற்று கருத்தில்லை. அதே நேரத்தில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை.. இவர்கள் செய்யும் குழப்பம் மேலும் காங் ஆதவாகவே செல்லும்.... ஒரு நல்ல அரசியல் கட்சி இல்லாமல் போவது நாட்டுக்கு நல்லதில்லை.... அந்நிய முதலீடு அண்ணாச்சிக்கு தான் ஆப்பு.. மக்களுக்கு அல்ல... தரமானதை யார்கொடுத்தலும் மக்கள் ஆதரிப்பார்கள்.... என்ன விலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நல்ல சட்டம் வேண்டும்... பெட்ரோலை போல விட்டுவிட கூடாது...
திரு சேகரன் திரு என்னுயிர் தமிழகம் ஆகிய இருவருக்கும் என் கனிவான வேண்டுகோள் : உங்களுக்கு என்னையா பிரச்சனை, கலைஞர் ஆதரித்தாலும் அதரிக்காவிட்டலும் காசு வாங்கின காங்கிரஸ் அந்நிய முதலிடை அனுமதித்தே தீரும், இது புரியாம நீங்க என் இப்படி பக்கம் பக்கமா வசனம் பேசுறிங்க.இது 1992 காங்கிரஸ் ஆட்சியின் போதே பேசப்பட்ட ஒரு விசயம் என்பதை இங்கே மறக்க கூடாது.கருத்து செய்தியை பற்றி மட்டும் இருக்க வேண்டும் அதை விடுத்தது தனி மனித விமர்சனம் எழுதும் நீங்கள் மட்டும் நல்ல பிறவியா? திரு தமிழகம் அவர்களே
அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் பொது மக்கள் எதிர்க்கிறார்களா அல்லது ஆதரிக்கிறார்களா என யாரும் கண்டுகொண்டதாகத் தெரிய வில்லை. இதை எதிர்ப்பவர்கள் சிறு வியாபாரிகள் மட்டுமே. அது கூட தேவையற்ற பீதி தான். ரிலையன்ஸ், மோர், ஹெரிட்டேஜ், நீல்கிரிஸ் ஆகிய அங்காடிகள் ஆங்காங்கே திறக்கப்பட்டதால் எந்த சிறு, பெறு வியாபாரியும் பாதிக்கப்படவில்லை. பொதுமக்களை பொறுத்த வரையில் நல்ல தரமான பொருட்கள் சகாய விலையில் வணிகத்தில் போட்டியின் மூலமே பெற முடியும் என்பதால் நிச்சயம் பொது மக்கள் அந்நிய நேரடி முதலீட்டினை வரவேற்பார்கள். இதை தடுக்க முயலும் அரசியல் கட்சிகள் மக்களின் வெறுப்பை நிச்சயம் சம்பாதித்துக்கொள்வர். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்படும், அதுவும் விருப்பப்பட்ட மாநிலங்கள் மட்டுமே இதை அனுமதித்துக்கொள்ளலாம் என்ற நிலையில் ஏன் மத்திய அரசை எதிர்க்க வேண்டும்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.