வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், "உங்கள் பணம்... உங்கள் கையில்...' என்ற முழக்கத்துடன், முழுக்க முழுக்க நலத்திட்டங்களை முன்வைத்து, சாதாரண மக்களை கவரும் வகையில், வசீகர பிரசாரத்தை கையாள காங்கிரஸ் கட்சி வியூகம் அமைந்து வருகிறது.
லோக்சபா தேர்தல், 2014ல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன், தேர்தல் வரலாம் என்ற யூகங்கள், நிலவி வருகின்றன. சமாஜ்வாதி கட்சி, வேட்பாளர்களையே முடிவு செய்து விட்டது. ஆனால், ஆளுங்கட்சியாக உள்ள காங்., நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.நேற்று முன்தினம் டில்லியில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரமும், ஜெய்ராம் ரமேசும் இணைந்து, கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, அரசாங்கத்தின் மிக முக்கிய மக்கள் நலத்திட்டங்களின் பலன், நேரடியாக மக்களை சென்றடையும், பணபரிமாற்ற திட்டம் பற்றி அறிவித்தனர்.இதன்படி, 29 முக்கிய மக்கள் நலத்திட்டங்களுக்கான உதவித்தொகை, நேரடியாக, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். "ஆதார்' அடையாள அட்டை திட்டத்தை, அடிப்படையாக கொண்டு, வரும் ஜனவரி, 1ம் தேதி முதல், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.முதற்கட்டமாக, நாடு முழுவதும், 51 மாவட்டங்களில், இந்த திட்டம் துவங்கி, அடுத்தடுத்து எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பலவற்றை, பயனாளிகள், ஏ.டி.எம்., மூலம் பணப் பட்டுவாடா செய்வதே இத் திட்டம் ஆகும்.
மாற்றம்
பொதுவாக அரசு அறிவிப்புகளை, டில்லி சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகையாளர் அரங்கில்தான், வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த திட்டத்தை, அக்பர் சாலையில் உள்ள, அகில இந்திய காங்., கட்சி தலைமை அலுவலகத்தில், இரு அமைச்சர்களும் வெளியிட்டனர்.
நம்பிக்கை
அடுத்த பொதுத்தேர்லை குறி வைத்து, மக்களிடம், கட்சி ரீதியாக செய்தி சொல்வதற்கான ஒரு அறிகுறியாகத்தான் இது பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் சிதம்பரம், "இது ஒரு கேம் சேஞ்சர்' என, குறிப்பிட்டார்.
இதற்கு, "ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியது' என்ற அர்த்தம் இருந்தாலும், தற்போது, ஐ.மு., கூட்டணி சந்தித்து வரும் சவால்களை, முறியடித்து, மீண்டும் அடித்தட்டு மக்களிடம் செல்வாக்கை அதிகரிக்கும் என, காங்கிரஸ் நம்புகிறது. அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ""இது, வெறும் பண பரிமாற்றம் செய்யும் திட்டம் கிடையாது. மக்களின் உரிமை, அவர்களை சென்றடைகிறது. "ஆப்கா பைசா... ஆப்கி ஹாத்' (உங்களின் பணம்; உங்கள் கையில்) அவ்வளவுதான். ஏற்கனவே அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிதான்,'' என்று கூறினார்.
கையே பிரதானம்
கடந்த இரண்டு பொது தேர்தல்களின் போதும், "காங்கிரஸ் கா ஹாத்... ஆம் ஆத்மிகே சாத்' (காங்கிரசின் கை, எப்போதும் சாதாரண மக்களுடனேயே) என்ற முழக்கத்தை, முன்வைத்துதான் தேர்தலை சந்தித்தது; வெற்றியும் பெற்றது. இதற்கு காரணமாக இருந்தவர், ஜெய்ராம் ரமேஷ்தான்.இதன்மூலம், அடுத்த தேர்தலுக்கு உண்டான காங்கிரஸ் கட்சியின் புதிய கோஷம், "உங்கள் பணம்; உங்கள் கையில்' என்பது தெளிவாகியுள்ளது.
அரசின் நலத்திட்டங்களுக்கான, உதவித்தொகை நேரடியாகவே கைகளில் கிடைக்கிறது என்றால், சாதாரண மக்களை வெகுவாக கவரலாம் என்ற நோக்கிலேயே, இந்த யோசனையுடன் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது.
அண்மையில், சூரஜ் குண்ட்டில், கட்சியின் உரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதையொட்டி, ராகுல் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மூன்று துணை குழுக்களும் அமைக்கப்பட்டன. கூட்டணி குறித்த குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பிரசார குழு என்ற அந்த குழுக்கள் மூன்றுமே, துரித கதியில் செயல்பட துவங்கியும் விட்டன.
கூட்டணியில், எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம், என்பது குறித்து ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழு ஆராய்கிறது. தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரண்டும் கூட்டணியில் தொடருவது நிச்சயம் ஆகியுள்ளது.
பீகாரில் லாலு, பஸ்வான் போன்றவர்களை கூட்டணிக்குள் சேர்ப்பது, மற்றும் தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில், யாரோடு கூட்டணி வைப்பது என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
கவர்ச்சி அறிவிப்புகள்
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளனர். எனவே, தற்போதுள்ள ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றோடு சேர்ந்து, மக்களை கவரும் வசீகர திட்டங்களை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளனர். அதன் விளைவுதான், இந்த திட்டம்.அரசின் பணத்தை, நேரடியாக, தாங்களே கைகளில் பெற வைப்பதன் மூலம், சாதாரண மக்களின் ஓட்டுக்களை, காங்கிரஸ் பக்கம் திருப்பலாம் என்பதே இதன் நோக்கம். இது மட்டுமல்லாது, வரும் பட்ஜெட்டிலும் கூட, சாதாரண மக்களை கவரும் வகையில், பல வசீகர அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
-நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இங்கே மனவேதனையுடனும் வெறுப்புடனும் கருத்து சொல்வதை விட்டு விட்டு எல்லோரும் வாருங்கள் வெளிநாட்டினரை போல், அரசியல் சார்பில்லாத அனைவரும் ஒன்றிணைவோம் ஒரு இயக்கமாக. நாம்தான் சக்தி நாம் தான் ஆதாரம் என இந்த அரசியல்வாதிகளுக்கு புரிய வைப்போம். நம்மை நாமே ஆள முடியும், சகாயம் போன்ற ஆயிரம் அதிகாரிகள் நம்மிடம் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நம் தேசத்தை வாழ வைப்போம். இன்னும் நம்மிடம் உள்ள சக்தியும் அறிவும் தீர்ந்து போய்விடவில்லை.இந்த அரசியல்வாதிகள் நமக்கு தேவையுமில்லை.இவர்களால் நமக்கு ஆனதும் ஆகப்போவதும் எதுவுமில்லை என்பதை உணர்வோம்.முதல் தீக்குச்சியாக நானே பற்றி எரிகிறேன்,என்னுடன் எரிய விழைவோர் கருத்துக்களை பகிருங்கள் இவர்களை நாம் புறக்கணிப்போம் நம் தேசத்தை மீட்போம்.........
/// "உங்கள் பணம்... உங்கள் கையில்..." என்ற முழக்கத்துடன், முழுக்க முழுக்க நலத்திட்டங்களை முன்வைத்து, சாதாரண மக்களை கவரும் வகையில்/// அது சரி.. எங்க பணத்தை எங்களிடம்.. அதாவது.. எங்கள் பாக்கெட்டிலிருந்து.. எடுத்து.. மீண்டும்.. ( உங்களுக்கு தேவையானதை... எடுத்து கொண்டு ).. அதை மீண்டும் எங்களிடமே... கொடுக்கபோகிறீர்கள் ....இதில் என்ன..புதுமை.... உங்களுக்கு வேண்டுமானால். இது வசதியாக இருக்கும்... அவ்வளவுதான்... இதில் அரசியல் ஆதாயம் தேட போகிறீர்கள்...எவ்வளவு வோட்டு கிடைக்கும் என்று கணக்கு போடுகிறீர்கள்....வேறென்ன நன்மை... மக்களுக்கு....?
நடிகர் வடிவேல் சொல்வதை போல ரூம் போட்டு யோசிப்பானுங்க போல. எப்படியெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கலாம் என்று.... இவனுங்க கொண்டுவந்த MGNREGA திட்டத்தால் இப்போது ஒருவரும் வயல் வேலைக்கு வருவதில்லை, இவனுகளை இப்படியே விட்டு வைத்தால் விவசாய தொழில், சிறு வணிகம், போன்ற இந்திய மக்களுக்கு 60% வேலைவாய்ப்பை தந்துக்கொண்டிருக்கும் தொழில்களை அழித்து அனைத்துக்கும் இவனுங்ககிட்ட கை ஏந்தவேண்டியதுதான்..... இந்திய நாட்டுக்கு இப்போதைய தேவை நாட்டுப்பற்று உள்ள ஒரு சர்வதிகாரி. அப்போதுதான் இந்திய மக்கள் நிம்மதியாக வாழமுடியும்....
நம் நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் இரண்டு, காங்கிரஸ் மற்றும் பிஜேபி. இந்த இரண்டையும் தவிர வேறு கட்சிகள் ஆட்சிக்கு வருவது சாத்தியம் இல்லை. ஆனால் இந்த இரு கட்சிகளுக்கும் ஒரு (பெரிய) குறை உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைவர் இல்லாதது, பிஜேபி க்கு அது மதவாத கட்சி என்ற முத்திரை. மதவாதம் என்ற முத்திரையை பிஜேபி கொஞ்சம் கொஞ்சமாக விலக்க வேண்டும், RSS இயக்கத்தோடு உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டும். சங் பரிவார் போன்ற மதவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். மோடி ஒரு நல்ல நிர்வாகி. அவரை பிரதம வேட்பாளராக நிறுத்தி, இனிமேல் பிஜேபி க்கும் RSS சங் பரிவார் போன்ற மதவாத அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று (திராணி இருந்தால்) அறிவித்து விட்டு வரும் தேர்தலை சந்திக்கட்டும், காங்கிரஸ் மக்கள் முன் வைக்கும் எல்லா வாக்குறுதிகளையும் உடைத்து பிஜேபி வெற்றி பெரும். இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி சுலபமாக வெற்றி பெரும். மக்கள் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுவார்கள், மதம் என்பது இரண்டாம் பட்சம்தான்.
தேர்தலில் வெற்றி பெற என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் அவர்கள். இது தெரிந்தது தான். எனவே என்ன செய்தாலும் அவர்கள் தோற்கடிக்க பட வேண்டும். 100 தொகுதிக்கும் கீழாக தான் அந்த கட்சி வெற்றி பெறும். இது தான் இன்றைய நிலை. பிஜேபி கட்சியும் 150 தொகுதி தான் ஜெய்க்கும. அதற்க்கு மேல் வாய்ப்பே இல்லை. இந்த மாநில கட்சிகள் மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து 300 தொகுதி வரை வெற்றி பெரும் நிலை உள்ளது. இது தான் நடக்கும். நாட்டிற்கு இது பெரிய கேடுதான். எனவே சிதம்பரத்தின் தில்லாலங்கடி வேலை எல்லாம் இந்த முறை எடுபடாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.