புதுடில்லி : ""என்னையும், என் தலைமையிலான அரசாங்கத்தையும், தேவையின்றி விமர்சிப்பவர்கள், குரைக்கும் நாயை போன்றவர்கள்,''என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, ஆவேசமாக பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; அவர் பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான, மம்தா பானர்ஜி, அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்றவர். சமீப காலமாக, அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால், விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாதவர் என்ற குற்றச்சாட்டும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.மம்தாவை விமர்சித்து, கார்ட்டூன் வரைந்த பேராசிரியரும், மம்தாவின் கொள்கைகளை விமர்சித்த விவசாயி ஒருவரும், சமீபத்தில் போலீஸ் நடவடிக்கைகளுக்கு ஆளாகினர்.இதையடுத்து, அரசியல் விமர் சகர்களும், எதிர்க்கட்சியினரும், சட்ட நிபுணர்களும், மம்தாவை குறை கூறி வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதியும், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' தலைவருமான, மார்க்கண்டேய கட்ஜு, சமீபத்தில், மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:நாம் அனைவருமே, தவறு செய்யக் கூடியவர்கள் தான். ஆனால், தவறுகளை உணர்ந்து, அதற்காக வருத்தம் தெரிவிப்பவர்களே, சிறந்த மனிதர்கள். மம்தா, தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளா விட்டால், அதிகாரத்தை இழக்க நேரிடும்.இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் மீது, மம்தா எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்து, இந்த கடிதத்தை, அவர் எழுதியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த, ஒரு அரசு விழாவில், தன்னை விமர்சிப்பவர்களை, மம்தா பானர்ஜி, கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் பேசியதாவது:என்னையும், என் தலைமையிலான அரசாங்கத்தையும், தேவையின்றி விமர்சிப்பவர்கள், குரைக்கும் நாயை போன்றவர்கள். குரைக்கும் நாய் கடிக்காது. அதேபோல், இவர்களால் விமர்சிக்க முடியுமே தவிர, வேறு எதையும் செய்ய முடியாது.எந்த ஒரு தனி நபரைப் பற்றியும், நான் குறிப்பிடவில்லை; பொதுவாகத் தான் கூறுகிறேன். என் தலைமையிலான அரசு, சட்டப்படி நடக்கிறதா என்பதைப் பற்றித் தான், கவலைப்படுகிறேன். என் அரசாங்கம், கருணையுடன் செயல்படுகிறது; மூர்க்கத்தனத்துடன் செயல்படவில்லை. குறிப்பிட்ட சில நபர்களின் விருப்பத்துக்கு ஏற்பவோ, கட்டுப்பாட்டிற்கு ஏற்பவோ நான் செயல்பட முடியாது.இவ்வாறு மம்தா பேசினார்.
மம்தாவின் இந்த பேச்சுக்கு, அனைத்து மட்டத்திலும், கடும் எதிர்ப்பும், கண்டனமும் எழுந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், எஸ்.கே.மிஸ்ரா கூறியதாவது:தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான வார்த்தைகளால், மம்தா அவர்களை தாக்கி பேசுகிறார். அவரின் இந்த நடவடிக்கை பற்றி கண்டனம் தெரிவிப்பதற்கு, என்னிடம் வார்த்தைகளே இல்லை. இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.