சென்னை: "ரயிலில் பயணம் செய்யும், ஏழை, எளியவர்களுக்கு, பிரச்னையில்லாமல் இருக்கும் வகையில், எளிய வழிமுறைகளை, ஏன் கண்டறியக் கூடாது' என, ரயில்வே துறை விளக்கம் அளிக்கும்படி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர், லோகு என்பவர், தாக்கல் செய்த மனு: முன்பதிவு செய்து, ரயிலில் பயணம் செய்பவர்கள், அசல் அடையாள அட்டை, வைத்திருக்க வேண்டும் என, சமீபத்தில், ரயில்வே துறை, புதிய நிபந்தனையை விதித்துள்ளது. டிச., 1ம் தேதி முதல், இது அமலுக்கு வந்தது. அடையாள அட்டை கொண்டு வராதவர்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய நிபந்தனை நியாயமற்றது. பயணிகளுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. பயணிகள் பலருக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லை. இதனால், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள், ரயிலில் பயணம் செய்ய முடியாமல் தடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. புதிதாக அடையாள அட்டை பெற வேண்டும் என்றால், அதிக பணம், நேரம், செலவாகும். அசல் அடையாள அட்டையை தொலைத்து விட வாய்ப்பு உள்ளது. அதற்குப் பதில், நோட்டரி அல்லது அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட, நகல் அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதிக்கலாம். எனவே, அசல் அடையாள அட்டை வேண்டும் என, பயணிகளிடம் வற்புறுத்தக் கூடாது என, உத்தரவிட வேண்டும். நோட்டரி அல்லது அரசு அதிகாரிகளால் சான்றிதழிக்கப்பட்ட அடையாள அட்டையை ஏற்கும் வகையில், புதிய அறிவிப்பை வெளியிட, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எட்வின் பிரபாகர் ஆஜரானார். ரயில்வே சார்பில், வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், "இந்தியா முழுவதும், இந்த உத்தரவு பொருந்தும். வடமாநிலங்களில், தீவிரவாதிகளை அடையாளம் காண, இது உதவும். விபத்து சம்பவங்களிலும், அடையாள அட்டை உதவியாக இருக்கும். ஏஜண்ட், இடைத்தரகர்களை தவிக்க முடியும்' என்றார்.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
அடையாள அட்டை திட்டமானது, இடைத்தரகர்களை தடுக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல முறை. கிராமப்புறங்களில் இருந்து வரும், அடித்தட்டு, நடுத்தர மக்களைப் பற்றி, நாங்கள் கவலைப்படுகிறோம். அடையாள அட்டை பெற, அவர்கள் கஷ்டப்படுவர். எனவே, ரயில்வே துறையிடம் இருந்து, அதன் வழக்கறிஞர், விளக்கம் பெற வேண்டும். ஏழை, எளியவர்கள் தேவையின்றி கஷ்டப்படாத வகையில், எளிய நடைமுறையை, ஏன் கண்டறியக் கூடாது என, ரயில்வேயிடம், விளக்கம் பெற வேண்டும். ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கைக்கு, நாங்கள் தடை விதிக்கவில்லை. விசாரணை, இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்னத்தை கூறி இவர்களுக்குப் புரிய வைப்பது? இரயில்வே கூறுவது தீவிரவாதிகளை அடையாளம் காண்பது? இதற்க்கு ஒரே வழி, உங்கள் TTR OR TTE இவர்களிடம் ஒரு காமெர கொடுங்கள், ஒவ்வொரு பயணியையும் இவர் புகைப்படம் எடுக்கட்டும், அதை அந்த டிக்க்கேட்டுக்களுடன் பதிவு செய்து கொண்டால்? பல விதத்தில் பயனுள்ளதாக இருக்கும். இதனால் திருட்டு தடுக்கப்படும், கள்ளக் காதல் தெரிய வரும், தற்கொலை நபர்கள் அடையாளம் காணலாம், தீவிரவாதிகள் அடையாளம் காணமுடியும், விபத்தில் சிக்கினால் அடையாளம் காணலாம், இப்படி பல நல்ல கருத்துக்களை தினமலர் வாசகர்களாகிய நாங்கள் தர தயாராக இருக்கிறோம், அனால் யார் கேட்க்கிறார்கள். அதிகாலை எழுந்ததும், கணினி முன் அமர்ந்து நேரத்தை செலவிடும் பலரின் அறிய பல கருத்துக்களை ஏற்றால் நம் நாடு நிச்சயமாக வளரும், வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.