சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, அடுத்த, 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் தெற்கு மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்த, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுவிழுந்து, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரம் வரை பரவி உள்ளது.
இடி, மின்னலுடன் மழை : இதனால், புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. பலமான கடற் காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் வீசக்கூடும் என, மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை நகரில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும்.