புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கி நடந்து வருகிறது. விவாதத்தின் முடிவில் இன்று மாலை ஓட்டெடுப்பு நடக்கிறது. ஓட்டெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பான விவாதம், லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க., முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் என அனைத்து கட்சிகளுமே, "சில்லரை வர்த்கத்தில் அன்னிய முதலீட்டை, அனுமதிக்க வேண்டாம்' என்றே கோருகின்றன. "சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக, அனைத்து தரப்பினருடனும் பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்ட பின்னரே, அன்னிய முதலீட்டை அரசு அனுமதிக்கும்' என்று அளித்த உறுதிமொழியை, தற்போது அரசே மீறுகிறது. அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால், முதலில் விலை குறைக்கப்படும். இதன் மூலம், சிறு வணிகர்கள எல்லாம் ஒழித்துக் கட்டப்படுவர்.அதன்பின், ஒரு சிலர் மட்டுமே, ஏகபோக உரிமை கொண்டாடுவர். இறங்கிய விலைகள் எல்லாம், அப்போது பல மடங்கு உயரும். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு என்பதன் வரலாறு, இப்படித்தான் இருந்து வந்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் பேசுகையில், அன்னிய முதலீட்டை அனுமதித்தால் காங்கிரசுக்கு லோக்சபா தேர்தலில் பின்னடைவு ஏற்படும். மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தாராசிங் சவான் பேசுகையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை அவசர கதியில் நிறைவேற்றக் கூடாது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், மதவாத சக்திகளுடன் ஒன்றிணைந்து, செயல்பட வேண்டுமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இந்த மசோதாவை ஆதரிப்பது குறித்து, இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இளங்கோவன் - தி.மு.க., : சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கிறோம். அதே நேரத்தில், அரசுக்கு எதிராக ஓட்டளிக்க மாட்டோம். அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எதிர்கட்சிகளுடனோ அல்லது பா.ஜ.வுடனோ ஒரு போதும் இணைய மாட்டோம். மத்திய அரசை கண்காணித்து, தகுந்த ஆலோசனைகளை வழங்குவோம். தொடர்ந்து பிற கட்சிகளும் அன்னிய முதலீடு தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இன்றும் தொடர்ந்து விவாதம் நடக்கவுள்ளது. விவாதத்தின் இறுதியில் ஓட்டெடுப்பு நடக்கிறது.
காங்., நம்பிக்கை: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. காங்கிரஸ் இப்போது முழுமையாக நம்பியிருக்கும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் அன்னிய முதலீட்டுக்கு எதிரான கருத்துக்களை லோக்சபாவில் தெரிவித்திருந்தாலும், எப்படியும் ஓட்டெடுப்பில் அரசுக்குஆதரவு அளித்து விடுவார்கள் என நம்பிக்கை காங்கிரசிடம் பலமாக உள்ளது. லோக்சபாவில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற போதிலும், ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு ஒரு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நம்பிக்கையில்லா தீர்மானம், வோட்டெடுப்பு, யாவும் இன்றைய ஊழல் நிறைந்த சூழ்நிலையில் தேவையற்ற ஒரு நிகழ்வு போல் உருவாகி விட்டது. எந்த ஒரு எம்பீயும் தேர்தல் வருவது பிடிப்பதில்லை, டிக்கெட் கிடைக்குமோ இல்லையோ, மக்களை சீக்கிரமே சந்திக்க வேண்டும், சில/பல வருடங்கள் எம் பீ என்ற பவர் வீணாகிறது. ஆதலால் அரசு கவிழும் எனும் நிலை உண்மையிலே வருமானால் எதிர் கட்சி எம் பீகளும் தடுமாற நிறைய வாய்ப்பு உள்ளது. பீ ஜே பி ஆளும் கட்சியாக இருந்தால் இந்த சூழ்நிலை இருக்காது. இருக்கவே இருக்கிறது மதச்சார்பின்மை எனும் துரு பிடித்த துருப்பு சீட்டு.
வேறு ஒரு விஷயத்துக்காக சபை நடக்க விட மாட்டோம், வெளிநடப்பு செய்கிறோம் என்ற பெயரில், ஆளுங்கட்சிக்கு பல்லாக்கும் தூக்க வேண்டும், ஆனால் அதை மறைமுகமாக செய்ய வேண்டும். இது ஒன்றும் காங்கிரஸ் சார்ந்த மதச்சார்பின்மை, சமூக நீதி, தலித் அரசியல் என்ற பெயரில் கொள்ளை கம்பெனி நடத்தும் எல்லா கட்சிகளுக்கும் புதிது அல்ல. மக்களும் முன்னர் போல முட்டாள்கள் அல்லர்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலிடு மூலம் அந்நிய செலவாணி இருப்பு உடனடியா கூட அதிகம் வாய்ப்பு.. மேலும் உள்ளூர் வணிகர்கள் பாதிக்காமல் இருக்க VAT மற்றும் Service Tax முற்றிலும் நீக்கி விட்டால் சில்லறை வர்த்தகர்கள் பயம் போய்விடும். மத்திய அரசு சில்லறை வர்த்தக வணிகர்கள் பயத்தை போக்க வேண்டும்.., அனைவரின் ஆதரவோடு மட்டுமே அன்னிய முதலிடு வரவேற்க படவேண்டும் - பூபதியார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.