புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் இன்று மாலை ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அன்னிய முதலீடு(காங்.,க்கு) ஆதரவாக 253 ஓட்டுக்களும், எதிராக 218 ஓட்டுக்களும் கிடைத்தன.
சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பான விவாதம், லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க., முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் என அனைத்து கட்சிகளுமே, "சில்லரை வர்த்கத்தில் அன்னிய முதலீட்டை, அனுமதிக்க வேண்டாம்' என்றே கோருகின்றன. "சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக, அனைத்து தரப்பினருடனும் பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்ட பின்னரே, அன்னிய முதலீட்டை அரசு அனுமதிக்கும்' என்று அரசு அளித்த உறுதிமொழியை, தற்போது அரசே மீறுகிறது. அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால், முதலில் விலை குறைக்கப்படும். இதன் மூலம், சிறு வணிகர்களை எல்லாம் ஒழித்துக் கட்டப்படுவர். அதன்பின், ஒரு சிலர் மட்டுமே, ஏகபோக உரிமை கொண்டாடுவர். இறங்கிய விலைகள் எல்லாம், அப்போது பல மடங்கு உயரும். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு என்பதன் வரலாறு, இப்படித்தான் இருந்து வந்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் பேசுகையில், அன்னிய முதலீட்டை அனுமதித்தால் காங்கிரசுக்கு லோக்சபா தேர்தலில் பின்னடைவு ஏற்படும். மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தாரா சிங் சவான் பேசுகையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை அவசரகதியில் நிறைவேற்றக் கூடாது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், மதவாத சக்திகளுடன் ஒன்றிணைந்து, செயல்பட வேண்டுமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இந்த மசோதாவை ஆதரிப்பது குறித்து, இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இளங்கோவன் - தி.மு.க., : சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கிறோம். அதே நேரத்தில், அரசுக்கு எதிராக ஓட்டளிக்க மாட்டோம். அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எதிர்கட்சிகளுடனோ அல்லது பா.ஜ.வுடனோ ஒரு போதும் இணைய மாட்டோம். மத்திய அரசை கண்காணித்து, தகுந்த ஆலோசனைகளை வழங்குவோம். இத்துடன் முதல்நாள் விவாதம் முடிந்தது.
இன்று மீண்டும் விவாதம் துவங்கிய போது பேசிய மா.கம்யூ., கட்சி உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா, விவசாய பொருட்களின் உற்பத்தி விலைக்கும், விற்பனை விலைக்கும் அதிக வித்தியாசம் காணப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சிகளே
காரணம். அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கோ, நுகர்வோருக்கோ எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதே உலக நாடுகள் கண்ட அனுபவம் என்று தெரிவித்தார்.தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்தலைவர் சரத் யாதவ் பேசுகையில், சில்லரை
வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு நாட்டை பிளவுபடுத்தி விடும். ஆளும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டைப்பற்றி கவலைப்படாமல் மார்க்கெட்டைப்
பற்றியே கவலைப்படுவதாகவும், வால் மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள்
இந்தியாவுக்கு வருவதால் நாட்டிற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று
தெரிவித்தார். தொடர்ந்து அன்னிய முதலீட்டை ஆதரித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
பிரபுல் படேல், அன்னிய முதலீட்டால் உள்ளூர் மார்க்கெட்
பாதிக்கப்படப்போவதில்லை. தற்போது மெக் டொனால்டு கடைகளில் விற்கப்படும்
உருளைக்கிழங்கு டிக்கி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியா செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான
விவசாயப்பொருட்கள் அழுகி வீணாகின்றன. இதற்காக அன்னிய முதலீடு தேவை என்று
கூறினார்.
தொடர்ந்து அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பி துரை
பேசுகையில், மக்கள் ஏற்றுக்கொள்ளாத அன்னிய முதலீட்டை மத்திய அரசு
அமல்படுத்த முயல்கிறது. கடந்த 2004ம் ஆண்டு பா.ஜ., தேர்தல் அறிக்கையில்
அன்னிய முதலீடு குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் நிலையை
எண்ணி பாருங்கள். சுதேசியை விரும்புவதாக கூறிக்கொண்டு வதேசியை ஆதரிக்கிறது
காங்கிரஸ். நாங்கள் விதேசியை புறக்கணிக்கிறோம். அன்னிய முதலீட்டை தி.மு.க.,
டில்லியில் ஆதரிக்கிறது.ஆனால் தமிழ்நாட்டில் எதிர்க்கிறது. தமிழ்நாடு என்ன இலங்கையிலா இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய கம்யூ., கட்சியின் குருதாஸ் தாஸ் குப்தா, அன்னிய முதலீட்டுக்காக ஆட்சியை விட்டுக்கொடுக்க பிரதமர் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதே போல், அகாலிதளம் சார்பில் பேசிய ஹர்சிம்ரத் கவுர், அன்னிய முதலீட்டை எதிர்த்து பேசினார்.
இதன் பின்னர் பேசவந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தலைவர் லாலு பிரசாத், பா.ஜ., கட்சியினர் கடந்த 2002, 2004ம் ஆண்டு அன்னிய முதலீடு வேண்டும் என்றார்கள். ஆனால் இப்போது எதிர்க்கிறார்கள். அன்னிய முதலீடு வந்தால் விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களுக்கு நேரடியாக பணத்தை பெறுவர். இடைத்தரகர்கள் முறை ஒழிக்கப்படும். மாநிலங்களில் அன்னிய முதலீட்டை அமல்படுத்த கட்டாயம் கிடையாது என்று கூறினார். தொடர்ந்து பா.ஜ., குறித்தும், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி குறித்தும் பேசிய கருத்துக்கள் தொடர்பாக அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மதியம் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா பின்னர் தொடர்ந்து நடந்தது. இதில் பேசிய பா.ஜ.,வின் முரளி மனோகர் ஜோஷி, தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த வரை, நேரடி அன்னிய முதலீடு விவகாரம் குறித்து பெரிதாக பேசப்படவில்லை என்றும், புதிய நிதியமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் இவ்விவகாரம் சூப்பர் பாஸ்ட்
Advertisement
வேகத்தில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பேசிய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பது ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நமது நாட்டின்
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பாதுகாக்க போதுமான உள்கட்டமைப்பு வசதிகள்
இல்லை. இவ்வசதிகள் இல்லாமல் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அன்னிய முதலீட்டை எதிர்த்த
நாங்கள் தற்போது மாறி விட்டதாக பா.ஜ., குற்றம் சாட்டுகிறது. அவர்களை
கேட்கிறேன். அன்னிய முதலீட்டை ஆதரித்த நீங்கள் ஏன் மாறி விட்டீர்கள்.
அன்னிய முதலீடு தொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறது.
இதுகுறித்து பல ஆண்டுகளாக விவாதித்து, தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளை
கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்தார்.
வெளிநடப்பு : அன்னிய முதலீடு தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்து கொண்டிருந்த போது, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும்,பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் 21 பேரும் அவையிலிருந்து
வெளிநடப்பு செய்தனர். அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் மூலம்
அவர்கள் மத்திய அரசுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்தோணியும் எதிர்ப்பு சுஷ்மா : அன்னிய முதலீடு தொடர்பாகபேசிய லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ஆனந்த் சர்மா முதல்வர்களின் விருப்பம் குறித்து பேசினார். ஆனால் எத்தனை முதல்வர்கள் என்பது பற்றி கூறவில்லை. டில்லியில் வால்மார்ட் வர முடியாது என டில்லியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., கூறினார். மோட்டார் சைக்கிளில் சென்று வால்மார்ட் கடைகளில் வாங்க முடியாது எனவும் கூறியுள்ளார். யாருக்காக வால்மார்ட் திறக்கப்பட்டுள்ளது. கார்களில் சென்று ஆடம்பரமாக செலவு செய்பவர்களுக்காக அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறதா. கபில் சிபலின் விளக்கம் குழப்பமளிக்கிறது. அன்னிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவையில் உள்ள அந்தோணியும் எதிர்க்கிறார். கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சி.பி.ஐ., விசாரணைக்கு பயந்தே சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் வெளிநடப்பு செய்துள்ளன. முலாயம் ஆதரவு தெரிவித்திருந்தால் அன்னிய முதலீடு வெற்றி பெற்றிருக்கும் என கூறினார்.
மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பதிலுக்குப்பிறது தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. முதலில் குரல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் எதிர்கட்சிகள் தீர்மானத்துக்கு எதிராகவும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். இதன் பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அன்னிய முதலீடு(காங்.,க்கு) ஆதரவாக 253 ஓட்டுக்களும், எதிராக 218 ஓட்டுக்களும் கிடைத்தன.
இதன் பின்னர் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் பெமா சட்டம் மீது கொண்டு வரப்பட்ட ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்து. தீர்மானத்துக்கு ஆதரவாக 224 ஓட்டுக்களும், எதிராக 254 ஓட்டுக்களும் கிடைத்தன.