சென்னை:"வேளாண்மை, கல்வி, சுகாதாரத்தில் அக்கறை செலுத்தி, வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும்' என்று கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் பங்கேற்கும், மூன்று நாட்கள் மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், துறை செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாடு நடந்தது.
நேற்று, கலெக்டர்கள், துறை செயலர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: வளர்ச்சித் திட்டங்களின் மூலம், தமிழகத்தையும் மக்களையும் வளம் பெறச் செய்வது தான், இம்மாநாட்டின் நோக்கம். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்களை, இதில் விவாதிக்க வேண்டும்.அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு, வளர்ச்சிக்கான திட்டத்தை மேற்கொண்டால், தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றலாம்.நிலைத்த வளர்ச்சி மற்றும் பரவலாக்கல் இவை இரண்டும், நிலைத்த மேம்பாட்டை நிச்சயமாக்கும் என, பொருளாதார நிபுணர்கள் உறுதி படுத்துகின்றனர்.எனவே, வேளாண்மை, தொழில், சேவைப் பிரிவு மற்றும் கல்வி, சுகாதரம், கட்டமைப்பு வளர்ச்சியில் பலமான அடித்தளம் அமைத்தல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும்.
இந்த நோக்கம் பயன்பாட்டிற்கு வந்தால், அரசின் கொள்கை திட்டங்கள் யாவும், அந்தந்த களங்களில், நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன். மாவட்ட கலெக்டர்கள் தங்கள் அதிகாரங்கள் மூலம், இதற்கான பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, இன்று, போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ். பி.,க்கள் மாநாடு நடக்கிறது.இன்று மாலை, 5:00 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.
மின்கசிவால் பரபரப்பு!
கலெக்டர்கள் மாநாடு நடந்து கொண்டிருக்கும் போது, நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஒன்பதாவது தளத்தில், ஓரிடத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, புகை வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட பராமரிப்பு பிரிவினருக்கு தகவல் தரப்பட்டு, சீரமைக்கப்பட்டது.இதனால், சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் கவிஞர் மாளிகை அருகில், தீயணைப்புத் துறையின், "ஸ்கைலிப்ட்' வாகனம் பாதுகாப்புக்காக கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
விவசாயிகள் பிரச்னை குறித்து கலெக்டர்களிடம் கருத்து கேட்பு :
கலெக்டர்கள் மாநாட்டில், விவசாயிகள் பிரச்னை மற்றும், 12 துறைகளில் திட்டங்களை செயல்படுத்துதல் குறித்த விவரங்களை, முதல்வர் ஜெயலலிதா கேட்டறிந்தார்.சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், கலெக்டர்கள் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை, முதல்வர் துவக்கி வைத்த நிலையில், கலெக்டர்கள் தங்கள் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, வேளாண்மை, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, தொழில்பிரிவு, வருவாய், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட, 12 துறைகளின் கீழ், கலெக்டர்கள் கருத்துக்கள் கூற அழைக்கப்பட்டனர்.
முதலில், தஞ்சை கலெக்டர், பாஸ்கரன், வேளாண்மை குறித்து பேச அழைக்கப்பட்டார். இதே போல், மற்ற மாவட்ட கலெக்டர்களும், அந்தந்த மாவட்டங்களின் தேவைகள் குறித்து, தங்கள் கோரிக்கைகள், திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள முட்டுக் கட்டைகள், அவற்றை களைவது குறித்தும், தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.மேலும், சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்டங்களில், காவிரி நீர் பிரச்னை அடிப்படையில் அறிவிக்கப்பட்ட, 10 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது, அதில் உள்ள பிரச்னைகள் குறித்தும், மாவட்ட கலெக்டர்களிடம் கருத்துக்களை கேட்டார்.கலெக்டர்களின் கருத்துக்கள் அனைத்தும், பதிவு செய்யப்பட்டு, முதல்வரின் தனிக் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, இவற்றின் அடிப்படையிலான அறிவிப்புகள், இன்று மாலை நிறைவுரையில் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
// வேளாண்மை குறித்து கலெக்டர்களும், அந்தந்த மாவட்டங்களின் தேவைகள் குறித்து, தங்கள் கோரிக்கைகள், திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள முட்டுக் கட்டைகள், அவற்றை களைவது குறித்தும், தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர். // ஒருவர்கூட மின் வேட்டைப் பற்றி யோ அல்லது அதனால் வேளாண்மை பாதிக்கப்படுவது பற்றியோ கூறியதாக தெரியவில்லை (ஒருசமயம் பிரசுரம் ஆகவில்லையோ) ... மின்வெட்டினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அம்மாவிற்கு தெரிவிக்கவில்லை என்றால்...... அவருக்கு எப்படி தமிழகத்தின் நிலவரம் தெரிய வரும் ? அம்மா ...........இந்த கலக்டரை எல்லாம் மாத்துங்க ...
தமிழ்நாடு ஜனநாயகத்தை இழந்து விட்டதா... சர்வாதிகார ஆட்சியில் தான் அதிகாரிகளை மக்கள் நல பணிகளை செய்ய சொல்வதும் , அவர்களிடம் ஆலோசனை பெறுவதும் நடக்கும்... அதற்குதான் ஜனநாயகத்தில் , மந்திரி , எம் எல் எ , கவுன்சிலர், உள்ளாட்சி தலைவர் ஆகியோர்களை மக்கள் மூலம் தேர்ந்தெடுத்து , மக்கள் அவர்களை அணுகி , அல்லது இவர்கள் மக்களை அணுகி மக்களின் குறை தீர்பதுதான் ஒரு ஜனநாயக் பண்பாடு... அம்மாவுக்கு அவர்கள் கட்சிகாரர்களிடம் நம்பிக்கை இல்லை ... எனவே தான் அதிகாரிகள் மூலம் நிர்வாகத்தை நடத்துகிறார்... மந்திரிகள் , இவர்கள் எல்லாம் , எந்த வகையிலும் ஓட்டை வாங்கி கட்சியை ஜெயிக்க வைக்கத்தான் ... அதற்க்கு அவர்களுக்கு அரசாங்க பதவி , அரசாங்க சம்பளம் ... பின் என் கோடிகணக்கான ரூபாய் செலவழித்து தேர்தல் நடத்த வேண்டும்... காசி அடித்து கட்சி வளர்க்காவா ....இனி அதற்க்கு கூட கலெக்டர்களையும் போலிஸ் அதிகாரிகளையும் அந்த வேலையையும் செய்ய சொன்னாலும் ஆச்சரியம் இல்லை ... இதெல்லாம் , கொள்கைக்காகவோ , நிர்வாகதிர்காகவோ , நேர்மைக்காகவோ , இல்லாமல் ஒரு தனி மனிதருக்காக எந்த ஒரு கட்சியானாலும் மக்கள் போடும் ஓட்டினால் விளைவது....அது முதலில் மாற்றப்பட்டு , கட்சி வேட்பாளர் தகுதிக்கு ஓட்டளிக்கும் தன்மை மக்களுக்கு வர வேண்டும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.