கும்மிடிப்பூண்டி : செம்மரக் கட்டை திருட்டை தடுக்க, தமிழக வனப் பகுதிகளில் உள்ள செம்மரக் காடுகளை சுற்றி, மரங்களை வளர்த்து, இயற்கை அரண் ஏற்படுத்த வனத்துறை திட்டமிட்டு உள்ளது. 988 ஏக்கர் ஆந்திர மாநிலம், கடப்பா, சித்தூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ள, தமிழகப் பகுதிகளில் மட்டுமே செம்மரங்கள் விளைகின்றன. கும்மிடிப்பூண்டி வன சரகத்திற்கு உட்பட்ட நேமளூர், சிறுவாடா, இருங்குளம் ஆகிய கிராமங்களில், 988 ஏக்கர் பரப்பளவில், வனத்துறையின் காப்புக் காடுகள் அமைந்து உள்ளன.மேற்கண்ட காப்புக் காடுகளில், 1970-71ம் ஆண்டு நடப்பட்ட செம்மரக் கன்றுகள், தற்போது நன்கு வளர்ந்து, திடமான மரங்களாகி உள்ளன. செம்மரத்தின் உள்ளே இருக்கும் சிவப்பு நிற தண்டானது, சிறப்பு மருத்துவ குணம் கொண்டதாகும். தலைவலி, காய்ச்சல், சரும வியாதி, உடல் வெப்பத்தை தணிப்பது, தீப்புண், ஆறாத ரணம், கண் மற்றும் ரத்த சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. மேலும், அணுக்கதிர் ஊடுருவாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாகும்.கடத்தல் அதிகரிப்புஇதனால், செம்மரத்திற்கு அதிக கிராக்கியும், விலையும் உள்ளது. வெளிநாடுகளில் செம்மரக் கட்டைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், ஆந்திரா மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழகப் பகுதிகளில் இருந்து, அதிக அளவில் செம்மரக் கட்டைகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன.சில ஆண்டுகளாக, செம்மரக் கடத்தல் அதிகரித்து வருகிறது. பல்வேறு சம்பவங்களில், கடத்தப்பட இருந்த செம்மரக் கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். பலர் கைதும் செய்யப் பட்டு உள்ளனர். இருப்பினும், செம்மரக் கட்டை கடத்தல் தொடர்கிறது.உஷாரான ஆந்திரா...இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில், செம்மரங்களை பாதுகாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளன. இதனால், கடத்தல்காரர்களின் பார்வை தமிழகப் பகுதி செம்மரக் காடுகள் மீது திரும்ப வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக வனத்துறை காப்புக் காடுகளில் வளர்க்கப்பட்டு வரும், செம்மரங்களை பாதுகாக்கும் பணிகளை வனத்துறையினர் எடுத்து உள்ளனர்.கும்மிடிப்பூண்டி வன சரகர் வேலாயுதம் மேற்பார்வையில், நான்கு வனவர்கள் தலைமையிலான சிறப்பு படைகள், துப்பாக்கி ஏந்தி சுழற்சி முறையில், இரவு பகலாக செம்மரக் காடுகளில் அன்னியர் நடமாட்டம் இல்லாதபடி கண்காணித்து வருகின்றனர்.இயற்கை அரண்இயற்கை வழியில், செம்மரக் காடுகளுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தும் திட்டத்தை வனத்துறையினர் தற்போது செயல்படுத்தி வருகின்றனர். செம்மரங்கள் உள்ள காப்புக் காடுகளை சுற்றி, அடர்த்தியாக வளரக் கூடிய மழை மரம் எனப்படும் தூங்குமுஞ்சி, முட்கள் கொண்ட மூங்கில், பரம்பை ஆகிய மூன்று வகை மரங்களின் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் செம்மரக் காடுகளுக்குள் அன்னியர் மற்றும் வாகனங்கள் நுழைவது தடுக்கப்படும். ஒரு மீட்டர் இடைவெளியில் ஒவ்வொரு மர கன்றும் நடப்பட்டு வருகிறது.இதுகுறித்து, வன சரக அலுவலர் ஒருவர் கூறுகையில், ""இந்த திட்டத்தின் மூலம் செம்மரக் காடுகளை பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கூடுதல் நோக்கமும் நிறைவேறும்'' என, தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.