பொன்னேரி: பைப் வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்ததாகக் கூறி, போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளி வந்தவர், வெட்டி கொலை செய்யப்பட்டார். சோழவரம் அடுத்த, எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோயில்ராஜ், 43. கோயில்ராஜ் முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட திண்பண்டங்களை தயாரித்து, கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன், 48, என்பவருடன் சேர்ந்து, நில விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், சந்திரனுக்கும், கோயில்ராஜுக்கும் பிரச்னை உருவானது. 2010 ஆண்டு, சந்திரன், கோயில்ராஜை கொலை செய்ய முயற்சித்து உள்ளார். இது தொடர்பாக, சந்திரன் உட்பட, எட்டு பேர் மீது, சோழவரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
பைப் வெடிகுண்டு : கடந்த, பிப்ரவரி 15ம் தேதி, கோயில்ராஜ் வீட்டில் பைப் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் அதை கைப்பற்றினர். இது தொடர்பாக கோயில்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளி வந்தவர், சந்திரனின் தூண்டுதல் பேரில் சோழவரம் போலீசார் தன்மீது பொய்வழக்கு போட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதல்வரின் தனிப்பிரிவு புகார் அனுப்பினார். தலைமை செயலகத்திற்கு சென்று போலீசாரை கண்டித்து போஸ்டரும் ஒட்டினார். போலீசாரை கண்டித்து உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார். இருதரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் முன்விரோதத்தில் இருந்து வந்தனர்.
கோயில்ராஜ் கொலை : இந்நிலையில், நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, கோயில்ராஜ், பிரச்னைக்கு உரிய நிலத்தை சீர்படுத்தியபடி இருந்தார். அப்போது டாடா இண்டிகா காரில் வந்த மர்ம நபர்கள், ஐந்து பேர், வீச்சரிவாள்களுடன் இறங்கினர்.
வீட்டின் வாயில் அருகே நின்றிருந்த கோயில்ராஜின் கழுத்து, கால், தலை என, சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். தகவல் அறிந்த பொன்னேரி, டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை கைப்பற்றி, சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். மாவட்ட குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கெண்டார். கொலையாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தலைமறைவான சந்திரனை, போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.