புதுடில்லி:குஜராத் சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடி அபார வெற்றி பெற்றுள்ளதால், அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, அவர் முன் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அடுத்த லோக்சபா தேர்தல், வரும், 2014ல், நடக்கவுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை, தற்போதைய பிரதமர், மன்மோகன் சிங், அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் வேட்பாளராக, முன்னிறுத்தப்படுவாரா என்ற, சந்தேகம் உள்ளது.
ராகுல்:
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கான, ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருவதாக, காங்கிரஸ் வட்டாரங்களே ஒப்புக்கொள்கின்றன.இதன் எதிரொலியாகவே, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, ஒருங்கிணைப்பு குழு தலைவராக, ராகுல் நியமிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில், ராகுல், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஐ.மு.,கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், அதை ஏற்றுக்கொள்ளும்.
எதிர்முகமான, பா.ஜ., தலைமை யிலான, தே.ஜ., கூட்டணியை பொறுத்தவரை, பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், குழப்பமான சூழல் காணப்படுகிறது. பா.ஜ., மூத்த தலைவரான அத்வானி, பிரதமர் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து, பெரும்பாலும், விலகி விட்டார் என்றே கூறலாம்.இதற்கு அடுத்தபடியாக, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், பா.ஜ.,வில் உள்ள, அடிமட்ட தொண்டர்கள், இவர்களை பிரதமர் வேட்பாளராக ஏற்பதில், அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
நரேந்திர மோடி:
"குஜராத் முதல்வரான, நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, அவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், தே.ஜ.,கூட்டணியில் உள்ள, மற்றொரு முக்கிய கட்சியான, ஐக்கிய ஜனதா தளம், இதற்கு, பெரும், முட்டுக்கட்டையாக உள்ளது."நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவித்தால்,பீகாரில், சிறுபான்மையினர் ஓட்டு, எங்களுக்கு கிடைக்காது. எனவே, நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்' என, அந்த கட்சியின் மூத்த தலைவர்களான, நிதிஷ் குமாரும், சரத் யாதவும், வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.ஆனாலும், அதையும் மீறி,"நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும்' என்ற குரல், பா.ஜ.,வில் வலுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த, குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளதால், நரேந்திர மோடிக்கு ஆதரவான கோஷம், மேலும் வலுத்துள்ளது.
வளர்ச்சி பணிகள்:
இதுகுறித்து மோடி ஆதரவாளர்கள் கூறுவதாவது:நரேந்திர மோடி ஆட்சி காலத்தில், குஜராத் மாநிலத்தில், ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலவரம், இயற்கை சீற்றம் போன்ற, பெரும் துயர சம்பவங்களையும் மீறி, மாநிலத்தை, வளர்ச்சிப் பாதையில், வழி நடத்தி வருகிறார்.வெளிநாட்டு முதலீடுகளும், குஜராத்தில் குவிந்துள்ளதுடன், தொழில் வளர்ச்சியிலும், நாட்டில் உள்ள, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, குஜராத் விளங்குகிறது. பா.ஜ.,வின் பெரும்பாலான தொண்டர்கள், நரேந்திர மோடி, பிரதமராக வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். இந்த விஷயத்தில், நரேந்திர மோடிக்கு போட்டியாக கருதப்படும், சுஷ்மா, அருண்ஜெட்லி போன்றவர்களும், "பிரதமர்பதவிக்கு, நரேந்திர மோடி தகுதியானவர்' என, கூறி விட்டனர்.தேர்தல் வெற்றிக்கு பின் பேசிய நரேந்திர மோடி, "இந்த வெற்றி, குஜராத் மக்களுக்குமட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள, வளர்ச்சி பணிகளைவிரும்பும், ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி' என, கூறியதுடன், "கடந்த காலங்களில், ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக, ஆறு கோடி குஜராத் மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்' என்றும் கூறினார். இந்த பேச்சின் மூலம், மோடியின் இமேஜ், மேலும் உயர்ந்துள்ளது.இவ்வாறு, ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
செல்வாக்கு:
நரேந்திர மோடியின் எதிர்ப்பாளர்கள் கூறுவதாவது:நரேந்திர மோடிக்கு, குஜராத்தில் உள்ள செல்வாக்கை வைத்து, நாடு முழுவதும், அவருக்கு செல்வாக்கு இருக்கும் என, கருதக் கூடாது.பா.ஜ., ஆதரவாளர்கள் அதிகம் உள்ள, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ம.பி., கர்நாடகா போன்ற மாநிலங்களில் வேண்டுமானால், நரேந்திர மோடிக்குஆதரவு இருக்கலாம். பா.ஜ.,வுக்கென ஓட்டு வங்கியே இல்லாத, மேற்கு வங்கம்,தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலத்தவர்கள், மோடியை, விரும்புவர் என, கூற முடியாது.தே.ஜ., கூட்டணியில் உள்ள, அரசியல் தலைவர்களே, மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அடுத்த தேர்தலுக்கு, அவர், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் படுவதற்கு வாய்ப்பு குறைவு தான்.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுகூறுகையில், ""அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, இப்போது அறிவிக்க வேண்டிய
அவசியமில்லை. தேர்தலின்போது, அதுகுறித்து பரிசீலிப்போம்''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ராகுல் காந்தி போன்ற அரசியல் தற்குறிகள் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கும்போது, மண்ணின் மைந்தர் மோடி பிரதமராக வர விரும்புவதில் தவறில்லை. மேலும், ராகுலை முன்னிறுத்தி மிக பெரிய அளவில் பிரிட்டிஷ் காரர்கள் போல இந்தியாவை சூறையாட ஒரு கும்பல் காத்திருக்கிறது. அதற்கு இந்தியர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்று இறைவனிடம் இறைஞ்சுவோம். ஜெய் ஹிந்த்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.