வைகுண்ட ஏகாதிசி என்றதுமே ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும். ரங்கநாதர் அருள்பாலிக்கும் அந்த திருத்தலம் குறித்த புதுமை தகவல்களை அறிவோமா!
ரங்கநாதர் வரலாறு :
ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ரங்கநாதர் திருப்பாற்கடலில் தோன்றியவர். இவரை, பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பின்னர், ரங்கநாதர் சிலை வடிவமாக அயோத்தியில் எழுந்தருளினார். சூரிய குல வழித்தோன்றலான ராமபிரான், இந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். சீதை இலங்கைக்கு கடத்தப்பட்ட போது, ராவணனின் தம்பி விபீஷணன், ராமருக்கு உதவினான். இதற்கு பிரதிபலனாக, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அவனிடம் அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதிஅளித்தார். பின்னர் தர்மவர்மன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். அக்கோயில், வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளிவளவன், தற்போதைய புதிய கோயிலைக் கட்டினான்.
திருச்சி பெயர்க்காரணம்:
ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. "கோயில், திருமலை, பெருமாள்கோயில்' என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் "கோயில்' என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். திருச்சியை ஒரு காலத்தில்,"ஸ்ரீரங்கநாதன்பள்ளி' என்று அழைத்தனர். மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் "ஸ்ரீ" என்னும் எழுத்தை தமிழில் "திரு' ஆக்கி "திருச்சீரங்கநாதன்பள்ளி' என்றனர். பின்னாளில், இது "திருச்சிராப்பள்ளி' என்றாகி, "திருச்சி'யாக சுருங்கி விட்டது.
பெரிய கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேட்டி:
ரங்கநாதர் சந்நிதி எதிரில், 25 அடி உயர கருடாழ்வார், விஸ்வரூப காட்சி தருகிறார். எட்டு நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது. இவரது சந்நிதி முன்பு சுக்ரீவன், அங்கதன் (வாலி மகன்) துவார பாலகர்களாக உள்ளனர், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா நடத்துகின்றனர்.
ஏகாதிசி அறிவியல் காரணம்:
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி வர ஏறத்தாழ இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் "திதி' எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து 15 நாட்கள் சுக்லபட்சம் (வளர்பிறை), பவுர்ணமியிலிருந்து 15 நாட்கள் கிருஷ்ண பட்சம்( தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பின்னால் செல்கிறது. 11வது நாளான ஏகாதசியன்று 132 டிகிரி பின்னால் இருக்கிறது. மேற்கூறிய நாளில் புவிஈர்ப்புசக்தி அதிகமாகிறது. இந்த சமயத்தில் எப்போதும் போல் உணவருந்தினால் சரியாக செரிக்காது. ஆகையால், இந்த நாளில் முன்னோர் விரதம் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.வைகுண்ட ஏகாதசியன்று, வழக்கமான 132 டிகிரியை விட, மேலும் 3 டிகிரி கூடுதலாக, சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று புவிஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் விரதம் இருக்கிறோம். ஏகாதசி விரதமிருந்தால், அதற்கு முன் பத்துநாட்கள் சாப்பிட்ட உணவிலுள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகிறது. வயிறு சுத்தமாகிறது. ஜீரணக்கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதன் பின் நமக்கு வைட்டமின் "ஏ', "சி' தேவைப்படுகிறது. அதனால் தான் மறுநாள் துவாதசியன்று "ஏ' சத்து நிறைந்த அகத்திக்கீரை, "சி' சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்த்துக் கொள்கிறோம். குற்றாலம் பராசக்தி கல்லூரி விஞ்ஞானபிரிவு மாணவிகளின் ஆய்வு இதை தெரிவிக்கிறது.
குறிசொல்ல தெரியுமா!
நாலாயிரதிவ்ய பிரபந்தப் பாசுரங்களை ராகதாளத்தோடு அபிநயித்து ஆடிப் பாடுவது அரையர் சேவை. தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் இச்சேவை முக்கியமாக நடக்கிறது. பகல்பத்து என்னும் பெயரில் பகலில் பத்துநாட்களும், ராப்பத்துவிழா என்னும் பெயரில் இரவில் பத்துநாட்களுமாக வைகுண்ட ஏகாதசி விழாவில் இருவிதமாக இச்சேவை நடத்தப்படும். மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில் தொடங்கும் பகல்பத்து தசமியன்று முடியும். வைகுண்ட ஏகாதசி முதல் பஞ்சமி வரை இராப்பத்துநடக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை நடக்கிறது. கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டையில் அபிநயம் இல்லாமல், வெறும் தாளத்தோடு அரையர் சேவை நடந்து வருகிறது. இதற்கென்று அலங்காரமோ, உடையோ எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ குல்லா தலையில் இருக்கும். பெருமாளுக்கு சூடிக் களைந்த மாலை, பரிவட்டம் அணிந்து கொள்வர். பாசுரங்களைப் பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவத்தைக் காட்டி அரையர் நடிப்பர். இந்த சேவையில் "முத்துக்குறி' என்னும் நிகழ்ச்சிக்காக அரையர் பட்டு உடுத்துவார். "முத்துக்குறி' என்பது குறிசொல்பவளிடம், தனது மகளின் எதிர்காலம் பற்றி தாய் குறி கேட்பதாகும். முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் தாயாகவும், மகளாகவும், குறிசொல்பவளாகவும் மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.