கடலூர்:பலமணி நேரம் மின் வெட்டு நிலவி வரும் இன்றைய சூழ்நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அலட்சியத்தால் பகலிலும் தெருவிளக்குகள் எரியவிட்டு மின்சாரத்தை விரயமாக்கப்பட்டு வருகிறது.தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக மின்வெட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நகரப் பகுதிகளில் 12 முதல் 14 மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 14 முதல் 18 மணி நேரம் மின் வெட்டு நிலவி வருகிறது.
நிலைமையை சமாளிக்கும் பொருட்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதே நேரத்தில் வெப்பத்தை வெளியிடாத "சி.எப்.எல்.,' பல்புகளை பயன்படுத்த அறிவித்து வருகிறது.ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தங்கள் பகுதியில் தன் செல்வாக்கை நிலை நாட்டுவதற்காக தேவையற்ற இடங்களில் ஹைமாஸ் விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்குகளை அதிக அளவில் அமைத்துள்ளனர். இந்த தெரு விளக்குகளை தினசரி மாலை நேரத்தில் எரிய வைக்கவும், மறுநாள் காலை 6 மணிக்கு நிறுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர் தனது பணியை சரியாக செய்வதில்லை.
இதன் காரணமாக பெரும்பாலான தெருவிளக்குகள் பகல் நேரங்களில் எரிந்து கொண்டுள்ளது தொடர் கதையாக உள்ளது.குறிப்பாக கடலூர் நகராட்சியில் பகலில் தெரு விளக்குள் எரிவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தெரு விளக்குகளை நகராட்சி ஊழியர்கள் கவனிப்பது இல்லை. மேலும், விடியற்காலை நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவதால், தெருவிளக்குகளை நிறுத்துவது கிடையாது. இதனால், மின்சாரம் வரும் நேரங்களில் தெரு விளக்குகள் வீணாக எரிந்து மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது.உள்ளாட்சி பிரதிநிதிகளும் தினசரி காலை நேரத்தில் தங்கள் பகுதிகளில் வலம் வந்தாலே பகலில் தெருவிளக்குகள் எரிவதை தவிர்க்கலாம்.
இதன் மூலம் விலை மதிப்பற்ற மின்சாரத்தை சேமிக்க முடியும்.மின் சேமிப்பு என்பது, மின் உற்பத்திக்கு சமமானது. இதனை உணர்ந்து இனியேனும் தெரு விளக்குகளை இரவு நேரத்தில் மட்டும் எரிய வைக்கவும், காலை 6 மணிக்கு அனைத்து தெரு விளக்குகளையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதனை மீறி பகலில் தேவையின்றி தெருவிளக்குகள் எரிந்தால் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.