"விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்' என்ற முதல்வரின் அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, மன ஆறுதலை தந்துள்ள நிலையில், பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரித்து, பண ஆறுதல் வழங்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி தண்ணீர் தராமல், கர்நாடகா ஏமாற்றியதால், டெல்டா மாவட்டங்களில், 11.20 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.நிலம், நகை உள்ளிட்டவற்றை அடகு வைத்து விவசாயம் செய்த நிலையில், கண்முன்னே பயிர்கள் கருகுவதால், மனம் உடைந்த விவசாயிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர்.இப்பிரச்னையை கையில் எடுத்துள்ள அரசியல்கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "சம்பா பயிர் இழப்பு ஏற்பட்டால், அரசு உரிய நிவாரணம் வழங்கும். பயிர் இழப்பீடாக ஏக்கருக்கு, 13.7 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். எனவே, விவசாயிகள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.பயிர் கருகுவதால் என்ன செய்வது என தெரியாமல், மன உளைச்சல் அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முதல்வரின் அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், முதல்வர் அறிவித்துள்ள நிவாரணத்தொகை, பயிர் இழப்பை சரி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என, விவசாயிகள் கருதுகின்றனர். எனவே, பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியதாவது:முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு உண்மையிலேயே விவசாயிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மன ஆறுதலை தருகிறது. இந்த அறிவிப்பை, 20 நாட்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தால், உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும். 13.7 ஆயிரம் ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு, 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். அதனால், அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை. இந்த பணத்தால், அடகு வைத்த பொருட்களை மீட்கவோ, குடும்பத்தை காப்பாற்றவோ முடியாது.எனவே, பயிர் இழப்பீட்டு தொகையை, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வழங்கினால் மட்டுமே, வரும் காலங்களில், விவசாயிகளையும், விவசாயத்தையும் அரசால் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அறிவிப்பே இப்போதுதான் வந்துள்ளது....அது விரைவில் செயலாக மாற இன்னும் சில நாட்கள் ஆகும்...எனவே போர்கால அடிப்படையில் அரசு செயல் பட்டு நிவாரண தொகையை விரைந்து கிடைக்க ஆவன செய்யவேண்டும்...தொகையை குறைந்தபட்சம் ஏக்கருக்கு 25000 என்றாவது கொடுக்க வேண்டும்...ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டதாக இங்கே ஓரிருவர் கருத்துக்களை பதித்திருந்தனர்..அது தவறு....
ஆட்சில இருக்கறவங்க வாயாலேயே வடை சுடறதும், இட்லி கதை சொல்லியே பசிச்ச பிள்ளையை தூங்க வச்சுடலாம்னு நெனைக்குறதுமா இருந்தா பசி தீர்க்க முடியுமா.......தண்ணி தான் வாங்கி கொடுக்க முடியலே...விவசாயத்துக்கும் வழியில்லாம பண்ணியாச்சு...... எல்லாத்தையும் இழந்த நிலையில் தற்கொலை முடிவுக்கு போறவங்களை தடுக்கனுமுன்னா பசியாத்தனும். பசிக்காம சாப்பிடறவங்களுக்கு இதல்லாம் புரிய நேரமாகும்.
சவப்பெட்டி ஊழல் போன்று என்ன மாதிரியான ஊழல் வேணும்னாலும் செய்துகொள்ளுங்கள் ... ஆனால் நம்முடைய பசியை போக்கிவிட்டு , இவர்கள் பசியால் வாடும்போது நம்முடைய நெஞ்சம் உடைகிறதே .. அய்யகோ உலகில் வேறெங்கும் நடக்காத கொடுமை . எல்லா வளமும் உள்ள நம் திருநாட்டிலா..? விவசாயத்திற்கு பேர் போன தமிழ்நாட்டில் இந்த சோகமா..? ஏன் விவசாயிகளுக்கு மட்டும் இந்த நிலை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.