திருப்புத்தூர்: தமிழகத்தின் பல இடங்களில் குடவரைக் கோயில்களைப் காணலாம். முன்னர் களப்பிரர், சமண மதம் தழுவிய பல்லவ,சோழர்களாலும், பின்னர் சைவம் தழுவிய முற்காலப் பாண்டியர்களாலும் குடைவரை குகைக்கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அனைவரும் அறிந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில். திருக்கோளக்குடி, குன்றக்குடி, பிரான்மலை, அரளிப்பாறை, மகிபாலன்பட்டி... என்று வரிசையாக பல குடவரைக் கோயில்கள் உள்ளன. இதில் குன்றக்குடி குகைக் கோயில்கள் வரலாற்று சிறப்புமிக்கது. இங்குள்ள கல்வெட்டில் சிந்துசமவெளி எழுத்துக்களின் எச்சமாகக் 'தமிழி' எனப்படும் கி.மு.3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் எழுத்துக்கள் கல்வெட்டுக்களாக உள்ளன.
கீழக்கோயில்: குன்றக்குடியின் நடுவில், 40 மீ., உயரத்தில், 56 ஏக்கர் பரப்பில் சிறுமலை உள்ளதும், அதன் உச்சியில் ராஜ கோபுரத்துடன் சண்முகநாதர் என்றழைக்கப்படும் முருகன் கோயில் உள்ளதும் பலருக்கும் தெரியும். இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க குடவரைக் கோயில்களை யாரும் பார்ப்பதில்லை.இங்குள்ள கோயில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றுமலைக்கோயில்; மற்றொன்று கீழக்கோயில். அனைவருக்கும் தெரிந்தது மலைக்கோயில் மட்டும் தான். இது மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது. கீழக்கோயிலில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்து நாதர், சண்டேஸ்வரர் ஆகிய நான்கு குடவரைக் கோயில்கள் உள்ளன. இவை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
கல்வெட்டுக்கள்,சிற்பங்கள்:இக்குடைவரைக் கோயில்கள், சிற்பக் களஞ்சியமாகவும், புராதனக் கல்வெட்டுகளுடனும், காணப்படுகின்றன. மலைக் கொழுந்து நாதர் கோயிலில் மட்டும் 13 புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. வண்ண வேலைப்பாடுடைய புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.சுமார் 350 ஆண்டு பழமையான, அழகிய தூண்கள் நிறைந்த முன் மண்டபம் இக்கோயில்களுக்கு அழகு சேர்க்கிறது.
மன்னர்கள், கல்வெட்டுக்கள்: குமாரப்பேட்டை ஜமீன்தார் வெங்களப்பநாயக்கரால் இம்மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.முதலாம் ராஜராஜசோழன்,(கி.பி.,9 ம் நூற்றாண்டு) முதல் குலோத்துங்க சோழன் ( கி.பி.,10ம் நாற்றாண்டு) பாண்டியன் சடையவர்மன் ஸ்ரீ வல்லபதேவன் (கி.பி.11 ம் நூற்றாண்டு), ஸ்ரீவிக்கிரபாண்டிய தேவர்(கி.பி.1180-90) மூன்றாம் குலோத்துங்கன்(கி.பி.1178-1218), மாறவர்மன் சுந்தரபாண்டிய (கி.பி.1216-1237) மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.
சமணர் படுகைகள்: மேலும், குகைக் கோயில்களின் மேலே மலையின் இடைப்பட்ட பகுதியில் சூரிய ஒளி படாத பாறையின் கீழ் சமணர் படுகைகள் ஐந்து உள்ளன. அங்கே, கல்வெட்டிலான உருவங்களையும்,எழுத்துக்களையும் பார்க்க முடியும்.ஞானியார் கோயில், சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் பாம்பை விடும் நாகக் கோயில்,வற்றாத சுனை போன்றவையும் உள்ளன. பார்க்க அரிதான,தொன்மைச் சின்னங்கள் நிறைந்த, இக்குடைவரைக் கோயில்களை நீங்களும் பார்க்க வேண்டுமா?திருப்புத்தூரிலிருந்து 12 கி.மீ., காரைக்குடியிலிருந்து 9 கி.மீ., திருமயத்திலிருந்து 23 கி.மீ., தூரத்திலும்தான் குன்றக்குடி உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.