புதுடில்லி: டில்லியில் நடந்த போராட்டத்தின்போது இறந்த, போலீஸ்காரரின் மரணம் குறித்து, சர்ச்சை எழுந்துள்ளது. "போலீஸ்காரர், தோமர், மருத்தவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவருக்கு பெரிய அளவிலான, வெளிக் காயங்கள் எதுவம் இல்லை' என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், டில்லி போலீஸ் கமிஷனரோ, "தோமரின், கழுத்து, மார்பு, வயிற்றுப் பகுதிகளில், பெரிய அளவிலான, உள் காயங்கள் இருந்தன' என, கூறியுள்ளார்.டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, போராட்டம் நடத்தப்பட்டபோது, பணியில் ஈடுபட்டிருந்த, சுபாஷ் சந்த் தோமர், 47, என்ற போலீஸ்காரருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர் இறந்தார்.இது தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் உட்பட, எட்டு பேர் மீது, போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், போலீஸ்காரர் தோமர், மாரடைப்பு காரணமாகவே இறந்தார் என்றும், கல்வீச்சில், அவர் இறக்கவில்லை என்றும், ஒரு தரப்பினர் கூறத் துவங்கி உள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு, வலு சேர்க்கும் வகையில், தோமருக்கு சிகிச்சை அளித்த, மருத்துவர்களும், கருத்து தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர் சிந்து கூறியதாவது:போலீஸ்காரர் தோமர், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, முற்றிலும் சுய நினைவை இழந்திருந்தார். அவரது உடலில், பெரிய அளவிலான, வெளிக் காயங்கள் எதுவும் இல்லை. உடல் நிலை, கவலைக்கிடமாக இருந்ததால், அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து, தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளித்தோம்.வெளிக் காயங்கள் பெரிய அளவில் இல்லாததால், திடீர் மாரடைப்பால், அவர் இறந்தாரா என்பது பற்றி, நான் எதுவும் தெரிவிக்க முடியாது. எங்களிடம் உள்ள, அனைத்து ஆவணங்களிலுமே, தோமருக்கு, வெளிக் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.இவ்வாறு, சிந்து கூறினார். டில்லி போலீஸ் கமிஷனர், நீரஜ் குமார், இதை மறுத்துள்ளார்.அவர் கூறியதாவது:போராட்டக்காரர்களின் தாக்குதலால் தான், தோமர் இறந்துள்ளார். அவரின், கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில், பலமான, உள் காயங்கள் இருந்தன. இதனால் தான், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு, நீரஜ் குமார் கூறினார்.போராட்டத்தின் போது நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த, யோகேந்திரா என்ற மாணவர் கூறுகையில், ""தோமரை, யாரும் தாக்கவில்லை. அவராகவே, திடீரென மயங்கி விழுந்தார்,'' என்றார்.தோமர் கீழே விழுந்ததும், அவருக்கு உதவிய, மற்றொரு பெண்ணும், நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:போலீஸ்காரர் தோமர், மயங்கி விழுந்தார். உடனடியாக, அவருக்கு உதவச் சென்றோம். அவருக்கு, காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் உடல் முழுவதும் வியர்த்திருந்தது. அருகில் உள்ள, மற்ற போலீஸ்காரர்களை அழைத்து, அவரை ஆம்புலன்சில் ஏற்றினோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தோமரின் மகன், ஆதித்யா கூறுகையில், ""என் தந்தைக்கு, இருதய கோளாறு எதுவும் இல்லை. போராட்டக்காரர்கள் தாக்கியதால் தான், அவர் இறந்தார்,'' என்றார். தோமரின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, இந்த வழக்கு, டில்லி குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.