டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி, கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரிக்க, ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சம்பவம் மட்டுமல்லாது, பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், இக்கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்க உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
இதன்பின், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், நிருபர்களிடம் கூறியதாவது:ஓடும் பஸ்சில், இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லி ஐகோர்ட்டின், ஓய்வுபெற்ற நீதிபதி, உஷா மெகரா தலைமையிலான, விசாரணை கமிஷன், ஒட்டுமொத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும். இவற்றுடன், டில்லி போலீசாரின் அலட்சியம், கவனக்குறைவு ஆகியவை குறித்தும் கவனத்தில் எடுத்து கொள்ளும்.டில்லி சம்பவம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த பெண்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை அரசுக்கு தெரிவிக்க கோரப்பட்டுள்ளது. இக்கமிஷன் விசாரணை அறிக்கையை, மூன்று மாதத்திற்குள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், முதற்கட்டமாக இடைக்கால அறிக்கையையும் தாக்கல் செய்யும்.நாடு முழுவதும், பெண்களுக்கான பாதுகாப்பை, உறுதி செய்ய வேண்டுமென்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
டில்லி சம்பவம் மூலம், பல்வேறு பாடங்கள் கிடைத்துள்ளன. வருங்காலத்தில், இந்த தவறுகள் நிகழாத வண்ணம், அரசு உறுதியுடன் செயலாற்றும். பாதிக்கப்பட்ட பெண்ணிடம், இரண்டு முறை, வாக்குமூலம் பெறப்பட்டது குறித்து, சந்தேகம் கிளப்பப்படுகிறது. போலீசாரின் தலையீடு இருப்பதாக, குற்றம்சாட்டப்படுகிறது.இவை பற்றியெல்லாம், இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது தேவை, அமைதி மட்டுமே. உயர் அதிகாரிகள், உரிய முறையில், விசாரணை நடத்தி, அதன் முடிவில், அனைத்து விமர்சனங்களுக்கும் தீர்வு காணப்படும்.மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ், டில்லி போலீசை, சேர்ப்பது குறித்து, ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். ஒரு நாட்டின் தலைநகரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சரி. பெரும்பாலான நாடுகளில், தலைநகரின் சட்டம் ஒழுங்கு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.
ஏற்கனவே, நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, என்னிடமும், இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து, விரிவான விவாதம் நடத்திய பிறகே, முடிவுக்கு வர வேண்டும். இப்போதைக்கு, டில்லியில் தேவை, அமைதி மட்டுமே. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென, பெண்கள் போராடுவதை பார்த்து, ஒரு ஆணாக நான் வெட்கப்படுகிறேன்; சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஆணுமே, வெட்கப்பட வேண்டும்.கற்பழிப்பு வழக்குளை, விரைந்து முடிப்பதற்கு, கோர்ட்டுகள்தான் உதவ வேண்டும். டில்லி கற்பழிப்பு சம்பவம் குறித்த விசாரணை வரும், 3ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இதுமட்டுமல்லாது, பாலியல் பலாத்கார வழக்குகள் அனைத்துமே, விரைந்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும்.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.
டிஜிட்டல் கோரிக்கை "டிராய்'க்கு பரிந்துரை:
""தமிழக அரசின் கேபிள் நிறுவனத்திற்கு, டிஜிட்டல் உரிமம் வழங்குவது குறித்து, விரைவில் முடிவு எடுக்க, தொலை தொடர்பு ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்று மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர், மணீஷ் திவாரி கூறினார்.
நிருபர்களை, அமைச்சர் சிதம்பரம் சந்தித்தபோது, உடனிருந்த, மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரியிடம், தமிழக அரசின் கேபிள் நிறுவனத்திற்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க, மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மணீஷ் திவாரி கூறியதாவது:நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின், இதுகுறித்த கோரிக்கை, என்னிடம் வந்தது. டிஜிட்டல் உரிமம் அளிப்பது தொடர்பாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், சில விதிமுறைகளை வகுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கை குறித்து, பல எம்.பி.,க்களும், என்னை சந்தித்துப் பேசினர். இவ்விஷயம் குறித்து, விரைந்து முடிவெடுக்கும்படி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆணையத்தின் முடிவு வந்தவுடன், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு, மணீஷ் திவாரி கூறினார்.
நமது டில்லி நிருபர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர் நிதித்துறையை நித்திரை துறையாக்கியது போதாதா... உள்துரையிலும் இவரின் ஒட்டக மூக்கை நுழைப்பது ஏனோ... யாரை ஏமாற்ற அல்லது காப்பாற்ற இந்த விசாரணை கமிஷன் நாடகம்... முதலில் குற்றவாளிகளுக்கு விரைவு நீதி மன்றத்தில் விசாரித்து உயர்ந்த பட்ச தண்டனையை கொடுத்துவிட்டு.... இதனை முன்னோடியாக வைத்து புதிய சட்ட சீர்திருத்தம் செய்வது ... பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கை என ஆலோசனை செய்யலாம்...
"மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ், டில்லி போலீசை, சேர்ப்பது குறித்து, ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். ஒரு நாட்டின் தலைநகரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சரி" என்று இவர் சொல்வதில் இருந்தே இந்த அசம்பாவிதத்தை தடுகாத, வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது, திரு முகவின் ஆதரவில், நடக்கும் மதிய அரசு தான் என்பது தெளிவாகிறது. இதற்க்கு முழுபொறுப்பு அவர்கள் தான். குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு எங்களை தூக்கிலிடுங்கள் என்கிறார்கள். இனியும் யாருக்காக, கண்துடைபிற்கு விசாரணை. முதலில் டெல்லியில் உள்ள நூறு காவல்துறை அதிகாரிகளில் எழுவது பேர் அரசியல்வாதியின் பாதுகாப்பு வேலை செய்கிறார்கள், ஆயிரம் பொது ஜனத்திற்கு ஒரு காவல்துறை அதிகாரி இருக்கிறார். இதை முதலில் மாற்றவேண்டும். பாலியல் கொடுமைகளுக்கு மரணதண்டனை கொடுக்க சட்டம் எப்பொழுது வரும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.