மதுரை:மதுரை மாநகராட்சி 89வது வார்டு(ஜெய்ஹிந்த்புரம்), சுப்புராம் முதல்தெருவில் இருந்த தார் ரோடு தொலைந்து போனதால், தேங்கி நிற்கும் சாக்கடையில் நடந்து செல்லும் அவல நிலைக்கு அப்பகுதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வார்டில், 10 ஆயிரத்து 329 வாக்காளர்கள் வசிக்கின்றனர். கவுன்சிலராக அ.தி.மு.க.,வின் பூமிபாலன் உள்ளார். இங்குள்ள சுப்புராம் முதல் தெருவில் இருந்த தார் ரோடு, மாயமாய் மறைந்து போனது. தேடினாலும் கிடைக்காத ரோட்டில், தேங்கி நிற்கும் சாக்கடை நீரில்தான், மக்கள் நடந்து செல்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பழுதான பாதாளச் சாக்கடை குழாயை, அப்பகுதியினரே சரி செய்தனர். அதுவும் நீடிக்காமல், மீண்டும் சாக்கடை நீர் வெளியேறுகிறது. உவர்ப்பு நீர் வரும் குழாயின் அடியிலிருந்து, பொங்கி வரும் சாக்கடை நீர், தெரு முழுவதும் பாய்கிறது.
மூன்று மாதமாக தொடரும் இந்நிலை குறித்து, பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தேங்கிய கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால், அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். ரோடு மோசமாக இருந்ததால், தற்காலிகமாக அங்குள்ள தொழிற்கூடங்கள் மணலை நிரப்பி சமாளிக்கின்றன.
தார் ரோடு, மணல் ரோடாய் அவதாரம் எடுத்தும், அப்பகுதியினரின் அவதி குறைந்தபாடில்லை. பல்வேறு வகையில் சிரமத்தை சந்திக்கும் பொதுமக்களின் குமுறல் இதோ:
ராஜேஸ்வரி: எந்நேரமும் பாதாளச் சாக்கடை நீர், வீதியில் பாய்கிறது. யாரும் வசிக்க முடியவில்லை. உவர்ப்பு நீர் குழாயின் அடியில், மலத்துடன் கழிவுகள் பொங்கிக் வருகிறது. அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை.
பாட்ஷா: நடந்து செல்லக்கூட ரோட்டில் இடமில்லை. கழிவுநீர் தான் ஆக்கிரமித்துள்ளது. எங்கள் செலவில், பாதாளச் சாக்கடை பழுதை சரிசெய்தோம். மீண்டும் பழுதாகிவிட்டது. அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டோம்; வருவதாகக் கூறியவர்கள், வரவில்லை.
தையநாயகி: இங்கு தார் ரோடு இருந்த விபரத்தை, நாங்கள் கூறினால் தான் உண்டு. இப்படி ஒரு மோசமான ரோட்டை, கிராமத்தில் கூட பார்க்க முடியாது. எங்கள் பகுதியை, அதிகாரிகள் புறக்கணித்துவிட்டனர். கொசுத் தொல்லையால் சிரமப்படுகிறோம். குப்பை தொட்டி இல்லை; குப்பை சேகரிப்பதும் இல்லை.
கவுன்சிலர் பூமிபாலன்: சுப்புராம் தெருவில்,"பேவர் பிளாக்' ரோடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் பழுதால், பம்பிங் ஸ்டேஷன்கள் செயல்பாடு முடங்கியுள்ளது. சாக்கடை நீர் வெளியேறாததற்கு அதுவே காரணம். பம்பிங் பணி தொடங்கியதும், பிரச்னை இருக்காது. சொந்த செலவில் பல பணிகள் செய்துள்ளேன். வார்டு தேவையானதை, போராடி பெறுவேன். குறைகள் குறித்து 98438 39330ல் தெரிவிக்கலாம், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.