அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தும்முசின்னம்பட்டியில், கிட்னி பாதிப்பால் தொடர் உயரிழப்பு ஏற்படுகிறது. இதில் பாதிக்கபட்டோர்,வீட்டிலே முடங்கி கிடக்கின்றனர். ஆனால் இதுவரை,சுகாதார துறையால் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என,இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி. இங்கு விவசாயமே முக்கியத் தொழிலில். கமுதி விலக்கு மற்றும் சாயல் குடி ரோடு பகுதியிலிருந்து வரும் குடிநீர், மேல்நிலை தொட்டிகளில் தேக்கி, வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ளோர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் 30 க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பாதித்த பலர்,வீட்டிலே முடங்கி கிடக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ராமர், 35, தங்கம், 45, மாரியப்பன், 42, பாலு, 57, பாண்டியன், ஊமைத்துரை, 47, என பலர், சிறுநீரகம் செயல் இழந்து இறந்துள்ளனர். தற்போதைய திருச்சுழி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அமலபாஸ்கர், 35, சகாதேவன், 50, சந்திரன்,45, இருளப்பன், 62, சுப்பையன், 45, முத்துலிங்கம்,55, உட்பட 15 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். முதலில், கைகால் வீங்கி,உடலில் வலி, மூச்சு திணறல் ஏற்படுகிறது. பாதிப்பு அடைந்தவர்கள் அருப்புக்கோட்டை மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பணம் வசதி உடையர்கள் "டயாலிசிஸ்' செய்து கொள்கின்றனர். முடியாதவர்கள் வீட்டிற்குள் முடங்கி, ஒரு சில நாட்களிலே இறந்து விடுகின்றனர்.
பாதிப்புக்குள்ளான விவசாயி சகாதேவன்,""சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு, இரு ஆண்டாகிறது. மதுரை தனியார் மருத்துவமனையில், வாரத்திற்கு இரு முறை, இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்து, "டயாலிசிஸ்' சிகிச்சை செய்து கொள்கிறேன். ஓரளவிற்கு தான் செலவழிக்க முடியும். அதன் பின் என்ன செய்வது என தெரியவில்லை,'' என்றார்.
முத்துலிங்கம்,"" கால்கள் வீக்கமடைந்து, மூச்சு திணறல் ஏற்பட்டது. அதிக உப்புசத்து உள்ளதாக டாக்டர் கூறினார். சிறுநீரக பாதிப்பு இருக்கலாம்,என கூறி, "டெஸ்ட்' எடுத்து பார்க்கலாம் என்கிறார். என்னால் வேலைக்கு கூட போக முடியவில்லை. செலவு செய்தாலும் பிழைப்பேனா என்பது சந்தேகமே,''என்றார்.
இருளப்பன்,"" அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை செய்தேன். ஒன்றும் பலன் இல்லை. வீட்டோடு இருந்து விட்டேன். அதிக செலவு செய்து, என்னால் சிகிச்சை பெற இயலாது,''என்றார்.
சந்திரன்,"" வேலையை விட்டு விட்டேன். உப்பு சத்து கூடி,கிட்னி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால், சுகாதார துறையால் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை,''என்றார்.
ஊராட்சி தலைவர் செல்வராஜ்,"" 6 ஆண்டில் மட்டும், கிட்னி பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. குடிநீரில் தான் உப்பு தன்மை அதிகம் என்கின்றனர்.
இரு மாதங்களுக்கு முன்பு , விருதுநகரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய குடிநீர் டெஸ்ட் லேப்பிற்கு , குடிநீரை அனுப்பி வைத்தேன். குடிக்க உகந்தது என, "ரிசல்ட்' வந்துள்ளது. பாதிப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை,''என்றார்.
ஒன்றிய முன்னாள்தலைவர் பொன்னுதம்பி,"" ஊரில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, உடல் பரிசோதனை செய்து, எதனால் பாதிப்பு என்பதை கண்டறிய வேண்டும்,''என்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடிநீர் ஆய்வாளர் ராஜ்குமார்,"" ஒரு லிட்டர் குடிநீரில் உப்புசத்து சுவை 500 மி.லி.,கிராம் முதல் 2000 மி.லி., கிராம் வரை இருக்கலாம். கடின தன்மை 200 மி,லி., கிராம் முதல் 600 கிராம் வரை இருக்கலாம். இதன்படிதான் தும்முசின்னம்பட்டி குடிநீரை கடந்த 8 மாதம் முன், டெஸ்ட் செய்து பார்த்ததில் , குடிக்க உகந்தது என, தெரிவித்துள்ளோம்,''என்றார்.
திருச்சுழி ஒன்றியகுழு தலைவர் இந்திரா,"" குடிநீர் பிரச்னையால் சிறுநீரக பாதிப்பு இல்லை என்பதை, குடிநீரை டெஸ்ட் செய்து பார்த்ததில் தெரிந்தது. மேலும் குடிநீரை, மருத்துவ ரீதியாக டெஸ்ட் செய்து பார்க்க உள்ளோம். அதில் குறைபாடு தெரிந்தால், மாற்று ஏற்பாடு செய்யப்படும் ,''என்றார்.
விருதுநகர் சுகாதார துணை இயக்குனர் வரதராஜன்,"" மாவட்டத்தில் தண்ணீர் கடினத்தன்மையாக உள்ளது. குடி நீரினால் இது போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஒன்றிய அளவில் பொது சுகாதார முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், கிராம பாதிப்பு குறித்து கவனம் செலுத்தப்படும். இந்த கிராமத்தில் தண்ணீர் மாதிரி எடுத்து, ஆய்வுக்கு அனுப்பப்படும்,'' என்றார்.
தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,: தும்சின்னம்பட்டி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து,கிராம மக்கள் ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து, பாதிப்பு எதனால் வருகிறது என ஆராய வேண்டும். மக்கள் உட்கொள்ளும் உணவு, காற்று மற்றும் அவர்கள் நோய் பாதிப்பிற்கு எடுத்து கொள்ளும் மருந்துகள் போன்றவற்றை ஆராய வேண்டும். அரசும் இக்கிராமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.