மதுரை: திருச்சியில் பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், காதல் தம்பதிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருச்சியை சேர்ந்தவர்கள் வெங்கடேஷன், வசந்தி. இவர்கள், பெற்றோருக்குத் தெரியாமல், ரகசிய திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். வசந்தியின் கல்லூரித்தோழி நித்யா.
திருச்சியில், பூட்டிய வீட்டில் 2008 டிச., 26 ல் ஒரு பெண்ணின் உடல் எரிந்து கிடந்தது. வசந்தி தான் இறந்துவிட்டார் எனக் கருதி, அவரது பெற்றோர் இறுதிச் சடங்குகள் செய்தனர். பின்பு, இறந்தது வசந்தி இல்லை, நித்யா என உறுதி செய்தனர்.
"ரகசியமாக திருமணம் செய்து கொண்டதை, பெற்றோருக்குத் தெரிவித்து விடுவேன்,' என நித்யா மிரட்டியதாகவும், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் வசந்தி, வெங்கடேஷனை திருச்சி "கன்டோன் மென்ட்' போலீசார் கைது செய்தனர். இருவருக்கும், திருச்சி முதன்மை செஷன்ஸ் கோர்ட் ஆயுள் தண்டனை, தலா 1000 ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் இருவரும் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து கொண்ட பெஞ்ச் உத்தரவு: சம்பவம் நடந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், எப்படி 2 பேர் புகுந்து, கொலை செய்திருக்க முடியும்? இந்த அடிப்படை கேள்வியை, கீழ் கோர்ட் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். முதலில் இறந்தது, வசந்தி என போலீசார் நம்பியுள்ளனர். பின், இறந்தவர் நித்யா என தெரியவந்தது, என்கின்றனர். நித்யாவின் உடலை, அவரது குடும்பத்தினர் பார்க்கவில்லை. உடல் எரிக்கப்பட்டு விட்டது. பின், நித்யா தான் இறந்தவர் என எப் படி உறுதி செய்ய முடியும்?டி.என்.ஏ.,சோதனைக்குரிய உறுப்புகள் கிடைக்கவில்லை. பெண்ணின் தலை ஓட்டை பாதுகாக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில், மூச்சுத்திணறி இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தார், என்பதை உறுதி செய்யவில்லை.
வசந்தியும், வெங்கடேஷனும் 2008 டிச., முதல் 2009 ஜன.,10 வரை மாயமானதால், இவர்கள் தான் சம்பவத்திற்கு காரணம், என்கின்றனர். இதை ஒரு அடிப்படை வாதமாக ஏற்க முடியாது. அவர்கள், 2009 ஜன.,10 ல் திருச்சி போலீஸ் உதவிக் கமிஷனரிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். அப்போது, அவர்கள் கொலை செய்ததாக கூறவில்லை.
ஜன.,12 ல் அவர்களிடமிருந்து நித்யாவின் நோட்டு, புத்தகங்களை கைப்பற்றியதாக கூறுவது, நம்பும்படியாக இல்லை. கீழ் கோர்ட்டின் கருத்துக்கள், சஞ்சலப்படுத்துகிறது. போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், கீழ் கோர்ட் முடிவுக்கு வந்துள்ளது. இது சட்டவிரோதம். முதலில் சட்டக்கொள்கை மற்றும் சட்டம் என்ன சொல்கிறது? என்பதை கீழ் கோர்ட் கருத்தில் கொள்ளவேண்டும். அனைத்துச் சாட்சிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இறந்தவர் நித்யா தான்; அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை, சந்தேகத்திற்கு இடமின்றி, போலீசார் நிரூபிக்கவில்லை. மனுதாரர்களுக்கு கீழ் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது கவலையளிப்பதாக உள்ளது. கீழ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.