உலகத் தமிழரின் ஒரே தலைவர் அவர்களுக்கு...கவிதை நூல் ஒன்றை எழுதுவதற்கு முன், அந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துக் கவிதை எழுதுவது, தமிழ்ப் புலவர்களின் வழக்கம். திருக்குறளுக்கு, வள்ளுவர் பெருமகன் கடவுள் வாழ்த்துப் பாடியது போல. தாங்கள் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் ஆகையால், இக்கட்டுரைக்கு தங்களையே கடவுளாக்கி மகிழ்ந்துள்ளேன்.
நான் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லை. இருப்பினும், தங்களிடம் நான் சில கேள்விகளை கேட்க ஆசைப்படுகிறேன். அவை நியாயமான கேள்விகளாக எனக்கு தோன்றுகின்றன. தங்களைக் கேள்விகள் கேட்க எனக்குத் தைரியம் இருக்கிறதோ, இல்லையோ தார்மீகக் கடமை என்ற ஒன்று இருக்கிறது.
காரணம், நான் சாமானியனாக இருந்து, கோடீஸ்வரன் ஆன பின்பும், என்னை ஒரு சாமானியன் என்று சொல்லிக் கொண்டிருப்பவன் அல்ல. சாமானியர்களோõடு, சாமானியனாக வாழ்பவன்; உங்களை கேள்விகள் கேட்கப் பயப்படுவதற்கு, நான் உங்கள் எதிரியோ அல்லது நான் உங்கள் புகழ்பாடும் சீடனோ அல்ல; உங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரும் அல்ல.
ஏதோ, நானும், மற்ற தமிழர்களும் பெயரே இல்லாத ஓர் ஊரில் பிறந்தவர்கள் போலவும், எங்களுக்குத் தமிழன் எனும் முகவரி இல்லாதது போலவும், தாங்கள் நினைத்துக் கொண்டுள்ளீர்கள். ஒன்றை தயவு செய்து மறந்து விடாதீர்கள். நாங்களும், நீங்கள் பிறந்த அதே தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தான்; நீங்கள் கற்ற அதே தமிழ் தான் நாங்களும் கற்றிருக்கிறோம்.
நீங்கள் சுத்த தமிழன் என்றும், உலகத் தமிழர்களின் ஒரே நிகரற்ற தலைவர் என்றும், உங்களை பாராட்டும் போது, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறீர்களே, உங்கள் மீது அபரிமித நம்பிக்கையும், தெரிந்தோ, தெரியாமலோ அளவற்ற பற்றும், பாசமும் கொண்டுள்ள தமிழர்களுக்குத் தாங்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அரும்பணிதான் என்னவென்று தெரிந்து கொள்ள, கோடிக்கணக்கான தமிழ் மக்கள் ஆசைப்படுகின்றனர்.
மூச்சுக்கு மூச்சு முன்னூறு முறை தமிழா, தமிழா என்றும் தமிழே, தமிழே என்றும் வெறும் முழக்கமிட்டு விட்டால் மட்டும் போதுமா? தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும் நிரந்தர நன்மை பயக்கும் வகையில் உருப்படியாக ஏதேனும் செய்துள்ளீர்களா?
தமிழ் மக்களுக்கு செய்துள்ள மகத்தான பணிகளில் முன்னிலை வகிப்பது, ஒவ்வொரு தமிழனையும் குடிகாரனாக ஆக்கியதும், அவன் குடும்பத்தை தெருவில் நிறுத்தியதும் தானே...?
தொலைக்காட்சி பெட்டிகளை, மக்கள் வரிப்பணத்தில் வாங்கி, அதற்கு உங்கள் பெயரிட்டு, வீடுதோறும் வினியோகித்து பாமரத் தமிழர்கள் தங்களை மறந்து, தங்கள் நிலையை மறந்து; தங்கள் எதிர்கால முன்னேற்றத்தை மறந்து; சோம்பேறிகளாக இருக்கச் செய்ததோடு, அரை குறை ஆடை அணிந்து, ஆட்டம் போடும் பெண்களை பார்த்து ரசிக்கவும், தமிழச்சிகள், வக்கிர புத்தியுள்ள மெகா சீரியல்களில் வரும் பெண்களை பார்த்து தங்களையும், அவர்களை போல் நினைக்கவும், செயல்படவும் வைத்துள்ளீர்களே, அது எந்த வகையில் நியாயம்? இதுதான் சுத்த தமிழனுக்குரிய பண்பாடா? இது என் கேள்வி.
ஆனால், விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்கின்றனர், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்த திறமை தங்களையே சேரும் என்று. ஒன்று உங்கள் சொந்தப் பணத்தில் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்காமல், உடன்பிறப்புகளின் பணத்திலேயே அதை வாங்கி, அவனுக்கே அதை இலவசமாக வழங்குவது போல் வழங்கி, அவனது தலையில் மிளகாய் அரைத்து, உங்கள் சேனல்களை பார்த்து அவனை ரசிக்கும்படி செய்த கில்லாடித்தனம் உங்களை தவிர்த்து வேறு யாருக்கு வரும்?உங்களை கொள்கைப் பித்தன் என்று அடிக்கடி சொல்லி மகிழ்கிறீர்கள்!
"அடைந்தால் திராவிட நாடு; இல்லாவிட்டால் சுடுகாடு' என்று, ஒரு காலத்தில் பட்டி தொட்டிகள், மூலை முடுக்குகளில் எல்லாம் மார்தட்டியவர் தானே நீங்கள்? இப்படி வீர வசனம் பேசிவிட்டீர்களே தவிர, உங்கள் கட்சியை, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரன், இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டியதும், அதற்கு பயந்துபோன நீங்களும், உங்கள் தலைமையும், சீனப் படையெடுப்பைக் காரணம் காட்டி, "எங்களுக்கு தேச ஒருமைப்பாடுதான் முக்கியம், தனித் திராவிட நாடு இரண்டாம் பட்சம் தான், அது வெறும் திண்ணைப் பேச்சுதான்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு தனித் திராவிட நாடு கொள்கையை குழிதோண்டி நீங்கள் புதைத்து விட்டதை நீங்கள் மறந்தாலும், இல்லை மறந்தவர் போல் நடித்தாலும், எங்களைப் போல் உங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்களும், புரிந்து கொண்டவர்களும் மறக்கவில்லையே.
தமிழ், ஆங்கிலத்தோடு விருப்ப பாடமாக என்னைப் போன்றவர்கள், மூன்றாம் மொழியாக இந்தி மொழியை பள்ளியில் பயின்றதுபோல், எங்களுக்கு பின்னால் கல்வி கற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல், இந்திய மொழியான இந்தியை கற்கவிடாமல், தமிழையும், ஆங்கிலத்தையும் மட்டுமே கற்க வைத்தீர்களே, அதனால், தமிழை உங்களால் வளர்க்க முடிந்ததா அல்லது இந்தி மொழி இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோய்விட்டதா? ஆங்கிலம் என்ன நமது முப்பாட்டான் பேசிய மொழியா?
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள், இந்தியாவின் பொது மொழியான இந்தியை, நம் சந்ததியினரைப் படிக்க விடாமல் செய்துவிட்டீர்களே... அது எந்த வகையில் நியாயம்?
உங்களால் வேலை கொடுக்கப்படாமல் போன பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் சேர்ந்து, தங்கள் இன்னுயுரைத் தந்து வருகிறார்களே, அவர்கள் ராணுவத்தில் கற்பதும், பேசுவதும் இந்தி மொழிதானே?மற்ற தமிழ் குழந்தைகளை, இந்தி படிக்காதே என்று சொல்லிவிட்டு, உங்கள் பேரக் குழந்தைகளை கான்வென்டுகளில் படிக்க வைத்து, இந்தியை கற்க வைக்கிறீர்களே.
தமிழர்கள் முட்டாள்கள் அல்ல; திறமைசாலிகள்! எத்தனை மொழிகளையும் அவர்களால் கற்க முடியும். தயவுசெய்து அவர்களை முட்டாள்களாகவும், நாதியற்றவர்களாகவும் இனிமேல் ஆக்க நினைக்காதீர்கள்.
சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருந்தாலும், தமிழர்கள் கோடீஸ்வரர்களாகவோ, லட்சாதிபதிகளாகவும் இல்லை. நீங்கள் தீட்டிய மகத்தான திட்டங்களால், நீங்கள் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிற போது, அவர்கள் இன்னும் வறியவர்களாகவே நீடிக்கிறார்கள்! அது ஏன்?இந்திரா அம்மையாருக்குப் பயந்து, அவருடன் சேர்ந்து நீங்களும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததினால் தானே இன்று, நம் மீனவர் சமுதாயம், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் இன்னுயிரையும் பறிகொடுத்த வண்ணம் உள்ளனர்.
இன்று, ஒவ்வொரு தமிழனும் தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும், தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுவதற்கு நீங்களும் காரணம் என்பதை, உங்களால் மறுக்க முடியுமா? தமிழரின் உரிமையான காவிரி, முல்லைப் பெரியாறு நீரை பெற நீங்கள் உங்கள் அமைச்சர் பதவிகளை, தியாகம் செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. குறைந்த பட்சம் உரத்த குரலையாவது, என்றைக்காவது பார்லிமென்டில் எழுப்பியிருக்கிறீர்களா?
சமச்சீர் கல்வியை மாணவர்கள் அனைவர்க்கும் வழங்குவதில், தவறேதும் இல்லை. ஆனால், சமச்சீர் கல்வியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமானால், ஆரம்ப நிலையிலிருந்தே அக்குழந்தைகளுக்கு, நகர்ப்புற மாணவர் களுக்கு அளிக்கப்படும் அதே தரமான கல்வியை வழங்கி, அதற்கான தகுதியுள்ள ஆசிரியர் களை நியமித்து கற்பிப்பதுதானே முறை? அதை விடுத்து தரமற்ற கல்வியை எல்லா மாணவர் களையும் படிக்க வைப்பது, இருக்கிற நல்ல அம்சங்களையும் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கி யது ஏன்?
மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, அலைவரிசை கொள்ளை என்று கொள்ளை களுக்கு, மேல் கொள்ளைகளை நாட்டில் அரங்கேற்றி, நாட்டு வளத்தை கெடுத்து, வீட்டு வளத்தை பெருக்கி கொண்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுருக்கின்றனவே? மனசாட்சி என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து நீக்கி விட்டீர்களா?
இந்திய தமிழர்கள் ஒருபுறம் இருக்க, இலங்கை தமிழர்களுக்காக காலம் கடந்து, இப்போது வக்காலத்து வாங்குகிறீர்களே? இதை உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை. பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றாகவும் அல்லவா இருக்கின்றன உங்கள் செயல்பாடுகள். ஒன்று நன்றாக புரிகிறது... தமிழகம் உங்களை போன்றவர்களுக்கு நல்ல விளைச்சல் நிலம். இங்கே பரம்பரை பரம்பரையாக நல்ல விளைச்சலை பெறமுடியும் என்பதுதான் அந்த உண்மை. வாழ்க உங்கள் பற்று; வளர்க தமிழகம் உங்கள் புண்ணியத்தில்...!
ஜி.கிருஷ்ணசாமி,கூடுதல் காவல்துறைகண்காணிப்பாளர் (பணிநிறைவு), எழுத்தாளர், சிந்தனையாளர்
email: krishna_samy2010@yahoo.com
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு தமிழ் எக்கேடு கேட்டால் என்ன? ,தமிழன் எக்கேடு கேட்டால் அவர்களுக்கு என்ன ?தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை எல்லாம் இந்தி ,ஆங்கிலம் படிக்க வைத்து விட்டு மக்களை நல்ல முட்டாள் ஆக்கி விட்டு தமிழை மட்டும் "அம்போ" வென விட்டுவிட்டனர் .அவர்களுக்கு தமிழி பிழைப்பை கொடுத்தது ,ஆனால் தமிழை நம்பிப் படித்தவர்களுக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை,அது வெறுப்பைத்தான் அளித்தது ,சரிதானே
ஜி.எஸ்.ராஜன்
இந்த கட்டுரை கருணாநிதியை வசைபாடவேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது .என்னுடைய அனுபவத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மட்டுமே போதுமானது .இன்றைய உலகமயமாக்களில் ஆங்கிலம் மிக அவசியமானது .இந்தி படித்த வட மாநில மக்கள் வேலை பார்க்க தமிழ் நாடு வருகிறார்கள் .இந்தி மிகவும் எளிய மொழி
தேவையெனில் நாம் பணிபுரியும் அலுவலகத்திலேயே கற்றுகொள்ளலாம் .
பெயர் குறிப்பிடப் படாமல் இருந்தாலும் யாரைப்பற்றியது இக்கட்டுரை என்பது எல்லோர்க்கும் புரியும். அவர் நல்லது சில செய்திருக்கிறார் என்பதையும் மறந்து விடாதீர்கள். ஏதோ காரணத்துக்காக அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அங்கு வருவதற்கு அவரல்லவா காரணம். வள்ளுவனுக்கு சிலையெடுத்து மண்ணுக்கு பெருமை சேர்த்த மனிதரல்லவா மனிதன் ரிக்ஷா இழுப்பதை நிறுத்தி சைக்கிள் ரிக்ஷாவை கொண்டுவந்தார். ஆனால் தமிழ் மக்களின் வாழ்வை அவர் மேம்படுத்தாமல் தன் மக்களின் வாழ்வை மட்டுமே மேம்படுத்தினார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திராவிட நாடு கொள்கையை கைவிட்டதில் நியாயம் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழி பேசாத திராவிடர்கள் இக்கொள்கையை ஏற்காத போது இக்கொள்கையை கெட்டியாக பிடித்துக் கொள்வதில் நியாயம் என்ன இருக்கிறது? இந்தியை எதிர்த்து நம் வாழ்வை வாய்ப்பை கெடுத்ததுபோல் சித்தரிக்கப் படும் கருத்துக்கள் துளிகூட ஏற்புடையதல்ல. தாய் மொழியை நசுக்கி பிற மொழியை கற்பது அருவருப்பான செயல். இந்தி பேசும் மாநிலங்களைவிட இந்தியை தன்னிலத்தில் நுழைய விடாமல் எதிர்த்த தமிழகம் பல துறைகளில் சாதித்திருக்கிறது. இந்தியை நுழையவிட்ட சில மாநிலங்கள் அவரவர்கள் தங்களது தாய்மொழியை இருந்த இடம் இல்லாமல் செய்துவிட்டனர். நம்மொழியை அடையாளத்தை அழித்த பின்புதான் வயிறு நிறையும் என்றால் அந்த பிழைப்பு அர்த்தமற்றது என்பதை என் மனமும் என் அறிவும் எப்போதும் எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. தாய் மொழியில் கறக்கப் படும் போதே அறிவு வலப் படும். நம் ரத்தத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் பண்பாடும், அன்பு பற்று அறிவு எல்லாவற்றுக்கும் தாய்மொழிதான் உயிரூட்டும் நீர். நான் என்னிலை கண்டு பெருமையடைகிறேன்... காரணம் என்னருமை தாய் மொழியாம் தமிழில் கற்றதே. தாயும் தந்தையும் தாய்மொழியும் தாய்மண்ணும் எக்காலத்திலும் எச்சூழ்நிலையிலும் முதல் மரியாதையோடு விட்டுக்கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச்செய்யும் போது உலகத்தில் எவர் முன்னும் நாம் தலை நிரிர்ந்து நிற்க முடியும்.
நீங்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்றது இல்லை என் எண்ணுகிறேன், கேரளாவில் இந்தியை இன்று வரை எதிர்க்க வில்லை படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் மலையாளம் அழிந்து விடவில்லை, அது போலவே கர்நாடகம், ஆந்திரா,மகாராஷ்டிரம் ,குஜராத், ஒரிசா ,வங்காளம்,பீகார் (ஹிந்தி பேசும் மாநிலம் அல்ல, போஜ்புரி, மாஹி போன்ற மொழி பேசுபவர்கள் ஹிந்தி மட்டும் பேசுபவர்களுக்கு அது புரியாது) உத்திரபிரதேசத்தில் உருது பேசுபவர்கள் அதிகம், அஸ்ஸாம், அதைசுற்றி யுள்ள மாநிலங்களில் ஹிந்தி படிபிக்கபடுகிறது, ஹரியான மொழி வேறு, பஞ்சாபி வேறு மொழி, ராஜாச்தானியும் ஹிந்தி அல்லாத மொழி, காஷ்மிரி வேற்று மொழி அங்கு எல்லாம் ஹிந்தியும் படிப்பிக்க படுகின்றன. அவர்கள் வீட்டில் தன் இன மக்களோடு பேசும்போது அவரவர் சொந்த மொழியில் தான் பேசுவார்கள் பள்ளியில் படிப்பது வேறு. தேவநாகரிக் ஹிந்தி என்பது அரசுக்காக உருவாக்கப்பட்டது இதை அவர்கள் எல்லோரும் தன் தாய் மொழியோடு சேர்த்து படிக்கிறார்கள் அலுவலகங்கள் படித்தவர்கள் எல்லோரும் எழுத படிக்க பேச இதையே பொதுமொழியாக பயன் படுத்துகிறார்கள். ஆனாலும் அவர்கள் தாய்மொழி அழிந்து விடவில்லையே. உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாததால் ஹிந்தி படித்தால் உங்கள் தாய்மொழி அழிந்துவிடும் என்று பயமுறித்தி ஒரு இனத்தையே திசை திருப்பியவர்கள் இந்த அரசியல்வாதிகள் . நான் பிறப்பால் ஆதி தமிழன் (இலமுரியா கண்டத்தில் இருந்து வந்தவன், திராவிடன் அல்ல ) எனக்கு ஹிந்தி நன்றாக படிக்க , எழுத, பேசத்தெரியும். நானும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் என்ன வென்று தெரியாமல் கலந்து கொண்டவன் தான், அறியாமையால் அநேகர் உயிர் நீத்தனர். ராணுவத்தில் சேர்ந்த பின் ஹிந்தி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வசதியான மொழியாக இருந்தது. ஆறு மாதத்தில் ஓரளவு பேச கற்றுக்கொண்டேன், பின் தனிப்பட்ட முயற்சியால் எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டேன். இந்த மொழி திறமையால் ஓய்வு பெற்றபின் இங்கு வந்தபின் அகில இந்திய அளவில் வியாபாரம் செய்யும் ஒரு கம்பனியில் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் உடனே வேலை கிடைத்தது. தற்போது வயதாகிவிட்டதால் அதில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். இந்தியாவில் வசித்துக்கொண்டு ஹிந்தி தெரிய வில்லையென்றால் அதைவிட நானக்கேடு வேறு ஏதாவது உண்டா? ஏன் நமது ஊரில் வசிக்கும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சௌராஸ்டிரம், பஞ்சாபி, வங்காளம் பேசிக்கொண்டு தமிழ் படிப்பவர்கள் இல்லையா? அவர்கள் தாய்மொழி அழிந்தாவிட்டது ?...
முன்னேறா கழகங்கள் - இவைதான் இந்த நாட்டை உலுக்கும் தீவிரவாதிகள். இவர்களே எல்லாம் மக்கள் இன்னும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதே ஒரு பெரிய ஆச்சரியம். 214 கோடியை காற்றில் கரைத்துவிட்டு ஒருவர் கவலையே இல்லாமல் நாற்காலியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்றொருவரோ கூட்டத்துடன் கேள்வி பதில் எழுதிக்கொண்டிருக்கிறார் - அதுவும் தப்பும் தவறுமாக அடுத்த மாநிலத்துக்கு சென்று. யாராவது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அந்த கேள்வி பதில்களை பெற்று நாளிதழ்களில் பிரசுரிக்க வேண்டும். நாடு அப்படியாவது இவர்களின் உண்மை சாயத்தை அறியும்.
தானைத் தலைவரால் மக்களுக்குக் கொடுப்பதைக் கெடுக்க முடியும். மத்திய அரசிடம் சொல்லி முட்டுக் கட்டை போடமுடியும்.உரத்த சிந்தனையில் கூறப்பட்டவை எல்லாம் உண்மைதானே? குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியது ,
கச்சத்தீவை தாரைவார்க்கும்போது எதிர்க்காமல் இருந்தது ,குடும்ப அரசியல் நடத்தியது, குடும்பத் தொலைகாட்சி
வளம்பெற இலவச t v கொடுத்தது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்....
தமிழகம் நல்ல விளைச்சல் நிலம்.... ஒவ்வொரு தமிழனும் தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும், தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுவதற்கு நீங்களும் காரணம் என்பதை, உங்களால் மறுக்க முடியுமா? இதே கேள்வியினை இப்போதைய முதல்வரிடமும் கேட்க உங்கள் குரல் கொஞ்சம் உயர்ந்தால் நன்றாக இருக்கும். இலவசத்தை இப்போது விலையில்லா அப்படினு பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டதே...வழக்கம் போல சட்டம் தனது கடமையை செய்யும் என முடித்தது போல இருக்கிறது. எப்படியோ மனசில இருந்தத கொஞ்சம் வெளியில சொல்லீடீங்க சரி. விதி என்று ஒன்றும் இல்லை..விதைக்கப்பட்டது அத்தனையுமே முளைக்க தகுதியில்லாத விதைகள்..சாணியினை கரைத்து தரையில் ஊற்ற பழகி கொள்ளுங்கள் மேலே அல்ல...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.