இந்த சம்பவம் நடந்தது, கடந்த 2003ம்ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியாகும்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜிக்கு அன்று ஒரு கருப்பு தினம், வாழ்க்கை சிதைந்து போய் சோகமான திசைக்கு மாறிப்போன மோசமான தினம்.
மகளை நன்கு படிக்க வைத்து பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட பெற்றோரின் கனவை நனவாக்க, நன்கு படித்தார். கூடுதலாக அழகும் கொண்டிருந்தார், அது ஒன்றும் தப்பில்லையே.
ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த பிரம்மதேவ், தபாஸ்மித்ரா, சஞ்சய் பஸ்வானுக்கு அது தப்பான எண்ணத்தை வளர்த்துவிட்டது, விரட்டி, விரட்டி தொந்திரவு செய்தார்கள்.
என்சிசி மாணவியான சோனாலி அவர்களை துணிச்சலுடன் விரட்டியதுடன், இனியும் தொந்திரவு தொடர்ந்தால் போலீசிடம் புகார் செய்வேன் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மூவரும், "அழகாய் இருக்கிறோம் என்ற ஆணவத்தில்தானே எங்களை எடுத்தெறிந்து பேசுகிறாய், உன்னை என்ன செய்கிறோம் பார்'' என்று எச்சரித்தவர்கள், அன்று இரவு மொட்டை மாடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சோனாலியின் முகத்தில், கப்பலின் இரும்புத் துருவை அகற்றுவதற்கு பயன்படும் பயங்கரமான ஆசிட்டை ஊற்றி விட்டனர்.
துடித்துப்போனார் சோனாலி. தூக்கிக்கொண்டு ஒடினர் ஆஸ்பத்திரிக்கு.
ஒரு பிரயோசனமும் இல்லை, ஆசிட்டின் வேகத்தில் முகம் உருக்குலைந்து விகாரமாகிப் போனது, இரண்டு கண்களின் பார்வையும் போனது. காதின் நரம்புகளும் பாதிக்கப்பட்டதில் வலது காதும் கேட்கும் தன்மையை இழந்தது.
கிட்டத்தட்ட 22 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன, ஆனாலும் இழந்த எதையுமே மீட்க முடியவில்லை. இரவெல்லாம், "ஐயோ எரிகிறதே...எரிகிறதே...''என்ற சோனாலியின் குரலை நிறுத்த செய்த செலவில் பெற்றோர் ஏழையாகிப் போனார்கள், நகை நிலம் வீடு என்று அனைத்தையும் விற்றும், இன்னும் 17 லட்சம் ரூபாய் செலவாகும் என்றதும் மிச்சமிருந்த உறவுகளும், நண்பர்களும் கூட காணாமல் போனார்கள்.
ஜார்கண்ட் மாநிலத்தினை ஆட்சி செய்த சிபுசோரான், அர்ஜீன் முன்டா, மது கோடா ஆகிய மூன்று முதல்வர்களையும் பார்த்து, "நான் வாழ கருணை காட்டுங்கள் அல்லது என்னை கருணை கொலை செய்யுங்கள்' என்று மனு கொடுத்திருக்கிறார். வழக்கம் போல மனு கூடைக்கு போனது போலும், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக எதற்குமே பதில் இல்லை.
இதற்கிடையில் ஆசிட் வீசியவர்களில் பிரம்மதேவ் மைனர் என்ற காரணத்தினால் கோர்ட் விடுதலை செய்தது, (மைனரின் முகத்தில் ஆசிட் வீசினால், அது மைனர் என்பதால் வேலை செய்யாது போலும்). மற்ற இருவரும் ஜாமீனில் விடப்பட்டனர்.
ஜாமீனில் வந்தவர்கள் செய்த குற்றத்திற்கு கொஞ்சம் கூட வருந்தவில்லை மாறாக, நேராக சோனாலியின் வீட்டிற்கு வந்து புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டியவர்கள் அப்படிச் செய்யாவிட்டால், குடும்பத்தினர் மீது ஆசிட் வீசுவோம் என்று சொல்லவும் பயந்து போய் நடமாட முடியாத சோனாலியின் தாய் உள்பட அனைவரும் ஊரை காலி செய்து கொண்டு, டில்லியின் ஒரு ஓதுக்குப் புறத்தில் தற்போது தஞ்சமடைந்து பஞ்சம் பிழைத்து வருகின்றனர்.
இவ்வளவு கொடுமைக்கு நடுவிலும் கேள்வி ஞானத்தின் மூலம் பொது அறிவை சோனாலி பிரமாதமாக வளர்த்துக்கொண்டு இருக்கிறார். தனது பொது அறிவை முன்வைத்து சமீபத்தில் நடந்த கோன் பனேகா குரோர்பதியில் 25 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றார்.
பாலைவன வாழ்க்கையில் ஒரு சின்ன சோலைவனமாக கிடைத்த இந்த பரிசு தொகையை, எனது மருத்துவ செலவிற்கும், மீதியை என்னைப் போல பாதிக்கப்பட்டு மீடியா வெளிச்சத்திற்கு வராத பெண்களுக்கும் உதவுவேன் என்று சோனாலி சொன்னதுதான் பெரிய விஷயம்.
ஏனெனில் டில்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்ற கொடிய சம்பவத்தை காட்டிலும் கொடூரமானது இந்த ஆசிட் வீசும் சம்பவம். ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி இதே போல கண் பார்வையையும், முகத்தையும் இழந்த காரைக்கால் பெண் பொறியாளர் விநோதினியின் நிலமையும் இது போலத்தான்.
செய்யாத குற்றத்திற்கு ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் உடலாலும் மனதாலும் தாங்க முடியாத வேதனையை நித்தமும் அனுபவிப்பவர்கள். இந்த சித்ரவதையில் சிறுபங்கைக்கூட ஆசிட் வீசிய ஆண்கள் அனுபவிப்பது இல்லை என்பதுதான் கொடுமை.
இப்பொழுது டில்லி மாணவி பற்ற வைத்துள்ள பெண் கொடுமைகளுக்கு எதிரான தீயானது, இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தையும் எடுத்துக்கொள்ளட்டும். பாலியியல் கொடுமைக்கு நிகரானதாக அல்லது அதற்கும் மேலானதாக ஆசிட் வீசும் சம்பவங்கள் கருதப்பட்டு அதற்கான தண்டனை தரப்பட வேண்டும். அல்லது இதற்கென தனி சட்டம் உருவாக்க வேண்டும்.
ஏனெனில் சோனாலி, விநோதினி போன்றோர் மீது வீசப்பட்டது அமிலம் அல்ல, அது கடந்த பல ஆண்டுகளாக வீசப்பட்டுவரும் வன்மம் மிகுந்த ஆணாதிக்க மனதிற்குள் புரையோடிப் போயிருக்கும் விஷம். இந்த விஷத்தை வேரோடு களையவேண்டும்.அதற்கு இதுதான் சரியான நேரம்.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முன்பே சொன்னேன் ஆசிட் விற்பனை கண்டிப்பாக தடை செய்யப்படவேண்டும், வெடி பொருள்கள் கட்டுப்பாடு நிர்வாகத்திற்கு இணையான கட்டுப்பாடு வேண்டும். இப்படி பட்ட கடும் குற்றங்களுக்கு ஜாமீன் வழங்குவதை கோர்ட் நிறுதிகொள்வது நல்லது. குற்றம் தடையா கொற்றவன் கோன் குப்பையில் எரிந்து, உளர் தடியேந்தி வழி நடந்து பெற்று உண்பதே மெல். இது அணைத்து மாநில, மத்திய அரசுக்கு பொருந்தும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் வேண்டும்,மனிதன் எவ்வளவோ மாறிவிட்டான். ஆனால் பழைய சட்டத்தை கட்டி கொண்டு அழுகிறோம்.அரசு அதிகாரிகளுக்கு ஓய்வு வயது இருபதுபோல் அரசியல்வாதிகளுக்கும் வயது நிர்னயிக்க வேண்டும்.நிற்ககூட முடியாமல் அரசியல் தலை வலிகளை நம் நாட்டில் சரளமாக காணலாம்.மக்கள் நலம் என்ற கொள்கையோடு எந்த கட்சியும் நாட்டில் இல்லை.சுய நலம் மிக்க அரசியல் கட்சிகளும் அரசியல் வியாதிகளும் தான் நாட்டில் அதிகம்.
பெண்களுக்கு கொடுமைகள் எங்கு எப்படி நிகழ்த்தப் பட்டாலும் அதற்கும் பெண்கள்மீதே பழியைப் போட்டு கருத்து சொல்லி தப்பித்துக்கொள்ளும் கேவலமான ஆணாதிக்க புத்தி உடையவர்கள் இங்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். இந்த பெண் சோனாலி செய்த தவறு என்ன? அவளுக்கு ஏன் இந்த கொடுமை? அவள்மீது இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியவர்கல்மீது என்ன நடவடிக்கை? என்ன தண்டனை? கூறுவீரோ ஆணாதிக்க குரூர எண்ணம் கொண்ட ____களே?
உங்களை போன்று உள்ளவர்களால் யார் குற்றவாளி என்று கூட கூற முடியாது. முதலில் நிதானம் வேண்டும். உங்கள் தந்தை தவறானவறா ? உங்கள் சகோதரன் தவறானவனா? ஆண்கள் என்று பொதுவாக சொல்லுவதே தவறு. ஆணிலும் , பெணிலும் தவறு செய்யும் மிருகங்கள் உள்ளன அவற்றைத்தான் நாம் வேட்டையாட வேண்டுமே தவிர பாலின கூச்சல் சரியல்ல? இந்தியாவில் நீதிமான்கள் மிகக் குறைவு. கொலை செய்தவன் ஒருவனாக இருக்கும் குற்றத்தை பணத்திற்கு ஒப்பு கொள்பவன் ஒருவனாக இருக்கும் . இதையெல்லாம் நீதிபதி வேடிக்கை மட்டுமே பார்ப்பார். தாயே முதலில் ஊழலை ஒழியுங்கள், நேர்மை வரும் போது பெண்கள் நிச்சயமாக பாதுகாக்க படுவார்கள்.......... ........ குற்ற செயலில் ஆண் பெண் பாகுபாடு கூடாது....
அது என்ன சட்டம். மைனர் என்றால் செய்த தப்புகள் மறைந்துவிடுமா. சே இந்த மாதிரி செய்திகளை படிக்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒரு சிறு மத்தாப்பு பொறி கையில் பட்டாலே துடித்து போய் விடுகிறோம். இந்த பெண்ணின் நிலை குறித்து மனம் மிகவும் கலங்குகிறது. முதலில் நமது நாட்டின் சட்டம் பழுது பார்க்கப்படவேண்டிய நிலையில் உள்ளது. சட்டத்தின் ஓட்டைகள் அடைக்க பட வேண்டும். தண்டனைகள் கடுமை ஆக்க பட வேண்டும். 2003 இல் நடந்த ஒரு கொடுரம். அந்த குற்றவாளி மிருகம்கள் வெளியில் வந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். டெல்லி சம்பவத்திலும் தொடர்புடைய குற்றவாளிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அரசு இவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுகிறது. இந்த பன்றிகளை வேட்டையாட வேண்டாமா?
பாலா உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். இது போன்று நீதி மறுக்கப்ப்படும்போதுதான் பாதிக்கப்படும் மனிதன் வெகுண்டு எழுகின்றான். அது அவனை தவறு செய்ய தூண்டுகிறது. எந்த தவறாக இருந்தாலும் கடுமையான தண்டனை கிடைக்காத வரை இது தொடரத்தானே செய்யும். மனிதன் இயற்றிய சட்டங்கள் அன்றன்றைய காலகட்டத்திற்கு தான் பொருந்தும். இறைவனின் (இஸ்லாமிய)சட்டங்கள் அமலாக்கப்படும் போதுதான் இது போன்ற குற்றங்கள் நடைபெறாது.
குறிப்பு : இஸ்லாமிய தண்டனை சட்டங்களை இப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இன்னும் பிறர் விரும்புவதை கொண்டே இந்த கருத்தை பதிவு செய்கிறேன்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.