காவிரி நதி நீர் பிரச்னையில், தமிழக விவசாயிகளின் நலன்களை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு பின், வேறு வழியின்றி, நாளை காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டத்தை கூட்டுகிறது.
காவிரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில், தமிழகம் - கர்நாடகா இடையே பிரச்னை முற்றியுள்ளதால், கண்காணிப்பு குழுவின் கூட்டத்தை, ஜனவரி முதல் வாரத்திலேயே, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் கூட்டியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், 12 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள, நெற்பயிர்கள் கருகும் நிலையிலும், மத்திய அரசு, இந்த விஷயத்தில் பாராமுகம் காட்டி வந்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி...
அதனால், மத்திய அரசின் அலட்சிய போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க, சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுகியது. தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்த, நீதிபதிகள், ஜெயின் மற்றும் லோகூர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் டிவிஷன், "பெஞ்ச்' "வரும், 11ம் தேதிக்குள், கண்காணிப்பு குழு கூட்டத்தை, மத்திய அரசு கூட்ட வேண்டும். அத்துடன், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, வரும், 31ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்' என, உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை அடுத்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டத்தை, நாளை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்திற்கு, மத்திய நீர்வளத் துறை செயலர், துருவிஜய் சிங் தலைமை வகிக்கிறார். தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை செயலர்கள், பொதுப்பணித் துறை செயலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
20 டி.எம்.சி.,க்கு வலியுறுத்தல்?
கடந்த டிசம்பர், 7ம் தேதி நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், "தமிழகத்திற்கு, 12 டி.எம்.சி., காவிரி நீரை, டிசம்பர் மாதத்திற்கு, கர்நாடகா திறந்து விட வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக, டில்லியிலுள்ள தமிழக அரசு அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகா, 12 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்திற்கு வழங்கி விட்டது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி, இன்னும், 18 டி.எம்.சி., தண்ணீரை, கடந்த ஆண்டு கணக்கில் தமிழகத்திற்கு கர்நாடகா தர வேண்டும். அத்துடன், ஜனவரி முதல், மே மாதம் வரை, மாதம் ஒன்றுக்கு, 3 டி.எம்.சி., தர வேண்டும் என்று, நடுவர் மன்றம், தன் இறுதித் தீர்ப்பில் முடிவு செய்துள்ளது. இந்த தண்ணீரை கொடுக்கும்படியும், தமிழக அரசின் சார்பில், காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.
குறைந்தபட்சம், 20 டி.எம்.சி., தண்ணீராவது தர வேண்டும் என, கர்நாடகாவிடம் தமிழக அரசு கோர வாய்ப்புள்ளது. தமிழக அரசின் குழுவிற்கு, புதிய தலைமை செயலர், ஷீலா பாலகிருஷ்ணன் தலைமை தாங்குவார். இவ்வாறு தமிழக அரசு அதிகாரிகள் கூறினர். அதேநேரத்தில், "எங்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லை; ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது' என, வழக்கமான பல்லவியை கர்நாடக தெரிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
"மழை பெய்தால் தான்...'
தமிழகத்தின் காவிரி - டெல்டா பகுதிகளில், சம்பா பயிர் நிலைமை குறித்து, டெல்டா விவசாய சங்கத் தலைவர், மன்னார்குடியில் இருக்கும் ரங்கநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் கூறியதாவது: தமிழகத்திற்கு, குறைந்த பட்சம், 10 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா தந்தால் தான், சம்பா பயிரை காப்பாற்ற முடியும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், சில தினங்களில் மழை பெய்தால் தான், அங்கே உள்ள நெற்பயிரை காப்பாற்ற முடியும். கடந்த, 15 நாட்களாக, தமிழக அரசு, மின் வினியோகத்தை சீர் செய்து, தினந்தோறும், 12 மணி நேரம் மின்சாரம் வழங்கி வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மூலமாக, ஒரு லட்சம் ஏக்கரில் உள்ள நெற்பயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். -நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசு பேச்சு வார்த்தையில் ஈடுபட கூடாது. எல்லாம் முடிந்து உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை கூறி விட்டது. இதற்கு மேலும் என்ன பேச்சு வார்த்தை வேண்டி இருக்கிறது. கர்நாடகமாகட்டும் கேரளமாகட்டும் இவர்கள் பேச்சு வார்த்தை என்று கூறி நம்மை ஏமாற்றுவர். அவர்களுக்கு மத்திய அரசு பலம் உள்ளது. நமக்கு உச்ச நீதி மன்றம் மட்டும் தான். மார்கண்டேயர் சிவனை கட்டிக்கொண்டு உயிருக்கு போராடியது போல நாம் உச்சநீதிமன்றத்தை கட்டி கொண்டு கர்நாடக கேரளா எமன்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும்.
அட போங்கையா... பயிர் எல்லாம் மாடு மேய்ந்து விட்டது. தென் கிழக்கு பருவ மழையும் சரி , வடகிழக்கு பருவ மழையும் சரி. காலை வாரி விட்டுவிட்டது. தமிழ்நாட்டில் குடிக்க தண்ணீர் பஞ்சம் வரும்- ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில். அதையாவது சரி செய்ய முற்படுங்கள். கர்நாடகாவில் அணைத்து கட்சிகளும் சேர்ந்து பிரதமரிடம் மனு கொடுக்கிறது ,ஆனால் தமிழ்நாட்டில் ??? கடைசி வரை அதிமுக அரசு ஈகோ பார்த்து பார்த்து தமிழனை நாடு தெருவில் தான் நிறுத்த போகிறது என்பதே உண்மை. இப்போதும் சொல்கிறேன் இனிமேலும் ஒன்றும் செய்ய முடியாது நாம் ஓன்று சேராவிடில் :(

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.