ராஞ்சி: ஜார்க்கண்டில், அர்ஜுன் முண்டா தலைமையிலான, பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, சிபுசோரனின், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - ஜே.எம்.எம்., கட்சி, வாபஸ் பெற்றது. இதையடுத்து, அர்ஜுன் முண்டா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததோடு, "குதிரை பேரம்' நடப்பதை தவிர்க்கும் வகையில், சட்டசபையை கலைக்கும்படி, மாநில அமைச்சரவை சார்பில், கவர்னருக்கு பரிந்துரைத்து உள்ளார்.
திடீர் வாபஸ் :
இதனால், ஜார்கண்ட் மாநிலத்தில், எந்த நேரத்திலும், ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஜார்க்கண்ட், சட்டசபை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 82. கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 18 தொகுதிகளிலும், சிபு சோரனின், ஜே.எம்.எம்., கட்சி, 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க, 42 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு வேண்டும் என்பதால், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன், பா.ஜ., - ஜே.எம்.எம்., கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக, அர்ஜுன் முண்டாவும், சிபு சோரனின் மகன், ஹேமந்த் சோரன், துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்நிலையில், ஹேமந்த் சோரனின் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், நேற்று முன் தினம், ராஞ்சியில் நடந்தது.
"முதல்வர் பதவி தர மறுப்பு' :
இதன்பின், ஹேமந்த் சோரன் கூறியதாவது: எங்களுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 28 மாதங்கள், அர்ஜுன் முண்டா முதல்வராக இருப்பார். இதன்பின், எங்கள் கட்சியிடம், முதல்வர் பொறுப்பை, அவர் தர வேண்டும். ஒப்பந்தப்படி, அவரது பதவிக் காலம், நாளையுடன் முடிவடைகிறது. ஆனால், எங்கள் கட்சிக்கு, முதல்வர் பதவியை தர மறுக்கிறார். அதனால், அர்ஜுன் முண்டா தலைமையிலான, பா.ஜ., அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறினார்.
இந்நிலையில், ஹேமந்த் சோரன் தலைமையில், ஜே.எம்.எம்., கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், கவர்னர் செய்யது அகமதுவை, நேற்று காலை சந்தித்து, முண்டா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை, முறைப்படி அளித்தனர். இதற்கிடையே, ராஞ்சியில் நேற்று, அர்ஜுன் முண்டா தலைமையில், மாநில அமைச்சரவை நேற்று கூடி, இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது. இதில், ஜே.எம்.எம்., கட்சியை சேர்ந்த, அமைச்சர்கள் எவரும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, அர்ஜுன் முண்டா கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில், ஏழு அமைச்சர்கள் பங்கேற்றனர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையால், குறுக்கு வழியில் ஆட்சி பிடிப்பதற்கு, சில கட்சிகள் முயற்சி மேற்கொள்ளும். குதிரை பேரங்கள் நடப்பதற்கு, இது, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும். எனவே, சட்டசபையை கலைக்கும்படி, அமைச்சரவை சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக, கவர்னருக்கு பரிந்துரைத்துள்ளோம். இவ்வாறு அர்ஜுன் முண்டா கூறினார்.
இதையடுத்து, கவர்னர் செய்யது அகமதுவை சந்தித்து, சட்டசபையை கலைக்கும்படி, அமைச்சரவை எடுத்த முடிவை, மனுவாக அளித்தனர். அப்போது, முதல்வர் பதவியிலிருந்து, ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தையும், கவர்னரிடம், முதல்வர் அர்ஜுன் முண்டா அளித்தார்.
காங்கிரஸ் தீவிரம் :
எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, ஜார்கண்ட் சட்டசபையில், 13 உறுப்பினர்கள் உள்ளனர். , ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஜே.எம்.எம்., கட்சியின் ஆதரவுடன், ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து, டில்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபையை கலைக்கும்படி, அமைச்சரவை அறிக்கை அளிக்கும் முன்பே, ஜேம்.எம்.எம்., கட்சி, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெற்று விட்டது. இதுகுறித்து, கவர்னரை சந்தித்து, கடிதம் அளித்து விட்டது. இதனால், அர்ஜுன் முண்டா தலைமையிலான அரசு, ஏற்கனவே, பெரும்பான்மையை இழந்து விட்டது. சிறுபான்மை அரசின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு, கவர்னர் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
கவர்னர் கையில் முடிவு :
ஜார்க்கண்ட் மாநில அரசியலின் எதிர்கால அரசியல் குறித்து, முடிவு எடுக்கும் பொறுப்பு, தற்போது கவர்னர் செய்யது அகமது கைக்கு வந்துள்ளது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதா, சட்டசபையை முடக்கி வைப்பதா அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினருக்கு, ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதா என, ஏதாவது ஒரு முடிவை, கவர்னர் செய்யது அகமது, விரைவில் எடுப்பார் என்று தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டான் வாழ பிறரைக் கெடுக்காதே என்பார்கள் அனால் இதுதான் அரசியல், இவர்கள் வாழ யாரைவேண்டுமானாலும் கெடுப்பார்கள், இதனால் பிரச்னை நமக்குதானே தவிர இவர்களுக்கு இல்லை, ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்று தேர்தலில் கூட்டாகப் போட்டி இட்டார்கள் பிறகு, பிரிந்தார்கள், தற்போது எந்தக் கட்சிக்காக இவர்கள் கூட்டு சேர்ந்தார்களோ அந்தக் கட்சியுடனேயே கூட்டு என்றால்? இதை மன்னிப்பது யார்? அப்படிஎன்றால் அரசியல் என்றால் என்ன? மக்களுக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள்? உண்மையைச் சொன்னால் கோபம் மட்டும் வருகிறது, தராதரம் தெரியாமல் தரக் குறைவாக எழுதுகிறார்கள் .மக்கள் என்ன பயிதியக்காரர்களா? நாடு என்பது இவர்கள் மட்டுமே வாழ்வதர்க்குதானே ? வந்தே மாதரம்
பல இரும்பு மனிதர்களைத் தன்னகத்தே வைத்துப் பெருமைப்பட்டிருந்த இந்திய ஜனநாயகம், அறுதிப்பெரும்பான்மை
என்ற மாயத்திரையைப் போர்த்திக் கொண்டு சீர்குலைந்து கிடப்பதால் ஏற்படும் தீய விளைவுகளை மக்கள் சுமந்துதான் தீரவேண்டுமா..? பதவி மோகத்தால் அமைதி அழிந்து போவதை ஜார்கண்ட் மட்டுமல்ல அனைத்து மாநில மக்களும் வேடிக்கை பார்க்கவில்லை...திடீரென ஒருநாள் விடியும்...ஜனநாயகம் மட்டுமே..வெல்லும்..சர்வாதிகாரம் என்ன வேடமிட்டாலும்
எத்தனை வெற்றி பெற்றாலும் வீழும்...
பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டே மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் சிபு சோரேன் ஆட்கள் இதனால் பாஜக ஆட்சியை தன்னிடம் ஒப்படிக்கும்படி கேட்டது. அப்போது எந்தவித ஒப்பந்தமும் ஏற்பட்டதாக சிபு சோரேன் குறிப்பிடவேயில்லை .பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் முடிவாக அவர்கள் ஏதும் சொல்ல மறுக்கும் நிலையில் பாஜக அவர்களோடு எப்படி கூட்டணியில் தொடரமுடியும்? சிபு சோரேன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளில் சி பி ஐ வேறு மிரட்டுகிறதாம்.காங்கிரசு அரசு வருவதை தடுக்க பாஜக அவருடன் கூட்டு வைத்ததும் தவறு அவர்களக்கு பதினெட்டு MLA சீட் ஜெயிக்க உதவிய மக்களின் தவறும்தான் சிபு சோரேன் கையில் ஆட்சி கிடைத்தால் அவரும் அங்கு ஆட்சி செய்த மது கொடாபோல் பல ஆயிரம் கோடி ஆட்டயப் போட்டு ஏற்கனவே அடிமட்டத்திலிருக்க்க்கும் மாநிலத்தை சோமாலியா போல் ஆக்கியிருப்பார். யாருக்கும் தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் சட்டசபையைக் கலைப்பதே நல்லது.தேர்தல் வந்தால் படு தோல்வியடையும் நிலையில் உள்ள காங்கிரஸ் இதற்கு ஒப்புக் கொள்ளாது கவர்னரும்(சயத்) காங்கிரஸ் முன்னாள் மந்திரியே...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.