மதுரை: பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை தடுக்க, பெண்மையை போற்றும் வகையில், மதுரை காந்தி மியூசியத்தில் நேற்று தினமலர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வாசகர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏராளமான வாசகர்கள், டில்லியில் பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த மாணவி மற்றும் இதுவரை பாலியல் கொடுமையால் பலியான பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்றினர். பூக்கள் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
"பெண்மையை காப்போம்' என்ற தலைப்பில், மதுரை போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசியதாவது:
உலகில் ஆக்கத்தின் அஸ்திவாரம் பெண். பெண் சார்ந்த உறவுப் பெயர்கள் அனைத்துமே மூன்றெழுத்தில் தான் உள்ளது. ஆனால் இந்தியாவில் 35 சதவீத பெண்கள், பாலியல் நிர்ப்பந்தத்திற்கும், 46 சதவீத பெண்கள் வன்முறை சீண்டலுக்கும் ஆளாகின்றனர். பெண்மை புனிதத்திற்கு சமம். அதை நன்கு அறிந்தவர், புரிந்து கொண்டவர், பெண்மையை போற்றுவர்.
ஆண், பெண் வேறுபாடுகளைக் களைந்து சமத்துவம், சகோதரத்துவத்தோடு, மாண்போடு வழிநடத்தவே, சட்டங்கள் வலியுறுத்துகின்றன. வீட்டில் பெண் வளர்ந்தால், ஒளி கிடைக்கிறது என்று அர்த்தம். ஆனால் படிக்கின்ற காலத்தில் காதலில் அரும்பி காணாமல் போகின்றனர். 18 வயதுக்குட்பட்ட பெண்ணை, திருமணம் செய்தால் பத்தாண்டு சிறைத் தண்டனை.
திருமணமான பெண்கள், வரதட்சணை கொடுமையால் "ஸ்டவ்' வெடிப்புகள் அரங்கேற்றியதை, வரதட்சணை கொடுமைச் சட்டம் தடுத்து நிறுத்தியது. சங்க காலத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் கடமைகள் வரையறுக்கப்பட்டன. ஆனால் பெண்களையே விற்கத் துணிந்து, பாலியல் நிகழ்வுகள் நடந்தபோது, பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாக போலீசை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ, நாங்கள் தயாராக இருக்கிறோம். கருவறை முதல் கல்லறை வரை, பெண்ணின் பங்கு அனைத்திலும் உள்ளது. நம் பெண்கள் தேசத்திற்கு பெரிதும் சேவை செய்கின்றனர். தாய்மையின் தனிச் சிறப்பை போற்றுவோம், என்றார்.
சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியை ரேணுகாதேவி: பாலியல் வன்முறையால் பெண் பாதிக்கப்படும் போது, சுற்றியுள்ளவர்களின் அக்கினி நாக்குகளுக்குப் பயந்தே, பிரச்னைகளை வெளிக் கொண்டுவர பயப்படுகின்றனர். பாலியல் வன்முறைக்கு அவர்கள் மட்டுமே காரணமா அல்லது வளர்ப்பும் ஒரு காரணமா? நமக்குள் இருக்கவேண்டிய மனிதநேயத்தை தொலைத்துவிட்டோம். இளம் தலைமுறைக்கும் கற்றுத் தர மறந்து விட்டோம். சொர்க்கம் விண்ணிலா இருக்கிறது? பிறருக்கு செய்யும் மனிதநேயத்தில் தான் இருக்கிறது. இளம் குற்றவாளிகள், பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கப் பெறாதவர்கள் தான், என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கினறன. குழந்தைகளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருகிறோம். கூடி வாழ்வதை கற்றுத் தந்தோமா, மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுக்க கற்றுத் தந்தோமா?
சமுதாய குற்றங்கள் அதிகரிப்பதற்கு மது தான் முக்கியக் காரணம். தவறான ஒத்த ரசனை உள்ளவர்களை, கூட்டாளிகளாக்குவது தான் சமுதாய சீரழிவுக்கு காரணம். வீட்டிற்குள் பெற்றோரின் அன்புப் பிடியை மீறி தவறு செய்ய முடியாது. கல்வி வளாகத்திற்குள் ஆசிரியர்களின் கண்டிப்பை மீறி தவறு நடக்காது. தவறான நட்பு வட்டாரம் தான், சமுதாய குற்றமாக மாறுகிறது. எனவே, நட்பை தேர்ந்தெடுப்பதும், முக்கியம் என்றார்.
துவக்க உரை நிகழ்த்திய, மதுரை சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன் பேசியதாவது: சமூக பொறுப்புணர்வோடு இந்த நிகழ்ச்சியை தினமலர் நடத்துகிறது. கார்கில் போரில் பலியானவர்களுக்கு, சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சியை இங்கே நடத்தினோம். பாலியல் வன்முறைகள் இனி நடக்க கூடாது என்பதற்கு இந்த நிகழ்ச்சி துவக்கமாக அமைய வேண்டும். பாலியல் வன்முறையை ஆய்வு செய்யும் போது, 94.2 சதவீதம், தெரிந்த நபர்கள் மூலமே நடக்கிறது. கல்வி நிலையமோ, அலுவலகமோ, பாதுகாப்பான நான்கு சுவர்களுக்குள் தான் பாலியல் வன்முறை அதிகம் நடக்கிறது, என்றார். தொடர்ந்து "பெண்ணினம் காப்போம்' என்ற தலைப்பில், உறுதிமொழி வாசித்தார்.
கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவில், உதவி கமிஷனர் ராஜாமணி, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மதுரை அனிதா ஸ்டோர்ஸ் சார்பில், அஞ்சலி செலுத்த வந்தோருக்கு பூக்கள் வழங்கப்பட்டன. குடிநீருக்கு, மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.