புதுடில்லி: மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து, ஒன்பதாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், மானிய விலை காஸ் சிலிண்டரின் விலையை, 100 ரூபாய் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, ஆறாக குறைத்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மானியமில்லாத சிலிண்டருக்கு, 900 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருப்பதால், நடுத்தர குடும்ப மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இது தொடர்பாக, சில முக்கிய யோசனைகளை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து ஒன்பதாக அதிகரித்து, அறிவிப்பு வெளியிடலாம். இதனால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, கடும் நிதி இழப்பு ஏற்படும். இதை ஈடுகட்டுவதற்காக, மானிய விலை சிலிண்டரின் விலையை, 100 ரூபாய் வரை அதிகரிக்கலாம். இரண்டு தவணைகளில், இந்த விலை உயர்வை செயல்படுத்தலாம். இது, இந்த நிதியாண்டுக்கான விலை உயர்வு. அடுத்த நிதியாண்டிலிருந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, காஸ் சிலிண்டரின் விலையை, 50 ரூபாய் உயர்த்தலாம். எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு செய்யும் வரை, இந்த விலை உயர்வை தொடரலாம்.
டீசல் விலையும்
டீசல் விலையை, வரும் மார்ச் மாதத்துக்குள், லிட்டருக்கு, 4.50 ரூபாய் வரை உயர்த்தலாம். இந்த விலை உயர்வை, ஒரே தவணையில் உயர்த்தலாம் அல்லது மாதம் தோறும், 1.50 ரூபாய் உயர்த்தலாம். அடுத்த நிதியாண்டு துவக்கமான, ஏப்ரல் முதல், இழப்பை ஈடு செய்யும் வரை, மாதம் தோறும், 1 ரூபாய் வரை உயர்த்தலாம். மண்ணெண்ணெய் விலையை, இந்த நிதியாண்டு இறுதிக்குள், மாதம் தோறும், 35 பைசா வரை, உயர்த்தலாம். இவ்வாறு பெட்ரோலிய அமைச்சகம், மத்திய அமைச்சரவைக்கு யோசனை தெரிவித்துள்ளது. ஆனாலும், இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை பரிசீலித்த பின்பே, இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.