வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, 18 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, 6 கோடி ரூபாய்க்கு தன்னிச்சையாக விற்பனை செய்து, பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில், நான்கு அதிகாரிகள் மீது, கிரிமினல் நடவடிக்கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் மூலம், பல்வேறு மாவட்டங்களில், நிலங்கள் மொத்தமாக கையகப்படுத்தப்பட்டு, வீடு, மனைகளாக மேம்படுத்தி, ஒதுக்கீடுகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு எடுக்கப்படும் நிலங்களில், ஒரு குறிப்பிட்ட அளவு, எதிர்கால தேவைகளுக்காக ஒதுக்கி வைக்கப்படும். பல்வேறு திட்டப் பகுதிகளில், இப்படி ஒதுக்கி வைக்கப்படும் நிலங்கள், வாரிய தலைமையகத்தின் அனுமதியின்றி, அந்தந்த பகுதி அதிகாரிகளால், குறைந்த விலைக்கு மோசடியாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாரியத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பதிவுத் துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் தெரிய வந்துள்ள விவரங்கள், வாரியத்துக்கு மட்டுமல்லாது, அரசுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
அதிரடி விற்பனை : இதற்காக பத்திரப்பதிவுத் துறை மூலம் பெறப்பட்ட விவரங்கள்: கோவை, கணபதி திட்டப் பகுதியில், எதிர்கால தேவைக்காக வைக்கப்பட்ட நிலத்தில், 50 சென்ட் நிலத்தை, சதுர அடி, 151 ரூபாய் வீதத்தில், 33 லட்சம் ரூபாய்க்கு, சின்னசாமி என்பவர் பெயருக்கு, கோட்ட அதிகாரி ராமமூர்த்தி விற்பனை செய்துள்ளார். கடந்த, 2011, மே 27ம் தேதி, கணபதி பகுதிக்கான சார்பதிவாளர் அலுவலகத்தில், இதற்கான ஆவணப் பதிவு நடந்துள்ளது. இதே பகுதியில், பள்ளி பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், 49 சென்ட் நிலத்தை, சதுர அடி, 154 ரூபாய் வீதத்தில், 33 லட்சம் ரூபாய்க்கு, துரைகண்ணன் மனைவி சாரதா பெயருக்கு, கோட்ட அதிகாரி ராமமூர்த்தி விற்பனை செய்துள்ளார். இதற்கான பத்திரப் பதிவு, 2011 நவம்பர், 30ம் தேதி நடந்துள்ளது. அதே நாளில், சாரதா பெயரில் இருந்து, 15 சென்ட் நிலம், சதுர அடி, 415 ரூபாய் வீதத்தில், 27 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2011ம் ஆண்டு, இந்த விற்பனை நடந்திருந்தாலும், இது தொடர்பான ஆவணங்கள், இப்போது தான் வெளிவர துவங்கியுள்ளன.
எப்படி? : கணபதி திட்டப் பகுதியில், முறையாக ஒதுக்கீடு பெற்று, தவணைகள் செலுத்தியவர்களுக்கே, இறுதி விலை சிக்கல் காரணமாக விற்பனை பத்திரங்கள் வழங்கப்படாமல் உள்ள போது, இச் செயல் புதிராக உள்ளது.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த நிலங்களை அவற்றின் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டுக்கு மாறாக, வேறு தேவைக்கு விற்பனை செய்யும் பட்சத்தில், வாரிய நிர்வாகக் குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அப்படி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாத நிலையில், கோட்ட அதிகாரியாக இருந்தவர், தன்னிச்சையாக இந்த நிலங்களை விற்பனை செய்துள்ளார் என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வருவாய் இழப்பு : இதில் நடந்த இரண்டாவது விற்பனை மூலம், அங்கு சந்தை நிலவரப்படி, ஒரு சதுர அடி நிலத்தின் மதிப்பு, 415 ரூபாய் என்பது தெரிய வந்துள்ள நிலையில், அதை விட குறைவாக, ஒரு சதுர அடி, 154 ரூபாய் என்ற அடிப்படையில் வாரிய நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதனால், சந்தை நிலவரப்படி, 18 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், 6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வாரியத்துக்கும் பத்திரப்பதிவுத் துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகிஉள்ளது.இந்த விவகாரத்தில் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்ட, நான்கு அதிகாரிகள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வாரியம் உத்தரவிட்டுள்ளது. மற்ற திட்டப் பகுதிகளிலும், இது போன்று நடந்த மோசடிகள் குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.