கடந்த பொதுத் தேர்வில், மின்வெட்டு பிரச்னை கடுமையாக எதிரொலித்தது. ஜெனரேட்டர்களை வைத்துக்கொண்டு, தேர்வை நடத்தி கல்வித்துறை சமாளித்தபோதும், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல், விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், மின்வெட்டு பிரச்னை எதிரொலித்தது. இந்த ஆண்டு, விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்விலும், பிரச்னை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்கான எந்த முன்னேற்பாடுகளும், இதுவரை கல்வித்துறையிலோ, தேர்வுத்துறையிலோ துவங்கவில்லை.
கடந்த பொதுத்தேர்வில், மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க, ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம் எனவும், அதற்கான செலவை, பின்னர் அரசே தரும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெரிய பள்ளிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. பள்ளியில் இருந்த ஜெனரேட்டர்களை வைத்து, பள்ளி நிர்வாகங்கள், சமாளித்தன. ஆனால், பெரும்பான்மை பள்ளிகளில், பாதிப்புகள் ஏற்பட்டன.மின்வெட்டு பிரச்னை, விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் எதிரொலித்தது. மின்சாரம் இல்லாமல், பல்வேறு இன்னல்களுக்கு இடையே, ஆசிரியர்கள், விடைத்தாள்களை திருத்தினர்.
வாடகைக்கு ஜெனரேட்டர்களை வாங்கி, தேர்வுகளை நடத்திய பள்ளி நிர்வாகிகள் பலருக்கு, இதுவரை அந்தப் பணத்தை அரசு, திரும்ப தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் பொதுத்தேர்வை நினைத்து, பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கலங்கிப்போய் உள்ளனர்.சென்னையைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற பகுதிகளில், கடுமையான மின்வெட்டு இருந்து வருகிறது. "இந்த ஆண்டு இறுதிக்குள், மின் பிரச்னை தீர்ந்துவிடும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதில் இருந்து, மார்ச், ஏப்ரலுக்குள் மின் பிரச்னை தீராது என்பது உறுதியாகி உள்ளது.கிராமங்களில், ஒரு நாளைக்கு, 15 மணி நேரம் முதல் 17 மணி நேரம் வரை, மின்வெட்டு இருந்து வருகிறது. இரவில், மாணவ, மாணவியர் படிக்க முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் 10 தேதிக்குப்பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கு, இப்போது இருந்தே, தீவிரமாக தயாராக வேண்டிய நிலையில், மாணவ, மாணவியர் உள்ளனர். ஆனால், மின்வெட்டு பிரச்னை, மாணவர்களை, பாடாய் படுத்தி வருகிறது.
இந்த ஆண்டாவது, முன்கூட்டியே இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து, தேவையான முன் ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம், நடேசன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:கடந்த தேர்வின்போது, ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்தேன். 2 மாதங்களுக்கு பயன்படுத்திய வகையில், 75 ஆயிரம் ரூபாய், "பில்' வந்தது. "பில்'லை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் கேட்டுப்பார்த்தேன். இன்றைய தேதிவரை, எனக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. கேட்டு, கேட்டுப்பார்த்து வெறுத்துவிட்டேன்.வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியபின், செலவுத்தொகையை அரசே வழங்கும் என்ற அறிவிப்பு, அறிவிப்போடு நின்றுவிட்டது. இந்த ஆண்டும், மின்வெட்டு பிரச்னை அதிகமாக உள்ளது. டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்தால், சமாளிக்க முடியாது என்பதால், 7 லட்சம் ரூபாய் செலவு செய்து, 850 கே.வி., திறன்கொண்ட ஜெனரேட்டரை வாங்கி, நிறுவிவிட்டேன்.அரசுப் பள்ளிகளுக்கு, எப்படியாவது ஜெனரேட்டர் கொண்டு வருகின்றனர். அதேபோல், தனியார் பள்ளி மையங்களுக்கும், அரசே ஜெனரேட்டரை வழங்கி, பிரச்னையை தீர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில்,""தேர்வுக்கு, இன்னும் பல நாட்கள் உள்ளன. தேர்வு நெருங்கும்போது, இந்த விவகாரம் குறித்து விவாதித்து, ஒரு முடிவை எடுப்போம்,'' என, தெரிவித்தனர். தேர்வுக்கு இன்னும், 6 மாதங்கள் இருப்பதுபோல், கல்வித்துறையும், தேர்வுத்துறையும் மெத்தனமாக இருந்தால், மாணவ, மாணவியரை பெரிதும் பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வெயிலில் இருக்குரவனுக்குதான் நிழலோட அருமை தெரியும் .. இதுதான் அவரது பாலிசி.... எது குடுத்தாலும் நல்லா காயப் போட்டு குடுத்தா அத சட்டுன்னு மறக்க மாட்டாங்க ? தண்ணி , மின்சாரம், விவசாய இழப்பீடு, மாணவர்களுக்கு மின்சாரம், விவசாயிகளுக்கு மின்சாரம் ....எல்லாம் வரும் .... ஆனால் மரியன் கூறுவதுபோல காலத்தோடு வராது ......
இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு நாட்களுக்கு முன் வந்த ஒரு செய்தியை குறுப்பிட விரும்புகிறேன்
Courtesy The Times of India Mumbai :
More Power in State: The Ratnagiri Gas and Power Private Limited (RGPPL) recently commissioned a cargo
ship "LNG Pioneer" at its jetty near Dabhol plant which can carry 138000 cubic meters of liquified natural gas
from Russia. This can ensure 24x7 power supply in state in summer: TNN
அரசு பள்ளிகளுக்கு ஜெனரேட்டார் வாங்கி கொடுக்கட்டும்தனியார் பள்ளிகளுக்கு athai எப்படி கொள்ளை அடித்து வாங்க வேண்டுமென நன்றாக தெரியும்75000 ரூபாய் இல்லாத குறையை ஏழு லட்சம் செலவு செய்து தீர்க்க தனியார் பள்ளிகளுக்கு வழி உண்டுமாணவனுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து தீட்டினால் பெற்றோர் கதறிக்கொண்டு கட்ட மாட்டார்களா ?/உங்களுக்கு தெரியாத வழி முறைகளா ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.