"டிவி' முன் பொழுதை கழித்து, பண்டிகைகளை பகல் கனவாய் கழித்து வரும், இந்த தலைமுறைக்கு, நம் பாரம்பரியத்தை கூட, நினைவூட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு வகையில் வேதனையான விஷயம் என்றாலும், நிகழ்வுகளை முன்வைக்கும் போது, இதைப் படித்தாவது, பாரம்பரியத்தை அறிந்து கொண்டால், சந்தோஷம் தானே!
கிராமங்களிலும் நுழைந்த "டிவி', நம் கலாசாரத்தை கரையானாய் கரைத்ததன் விளைவு, மாட்டு பொங்கல் பண்டிக்கைக்கும் "ஆட்டோகிராப்' பட்டம் சூட்ட வேண்டிய கட்டாயம்.
இதோ கிராமங்கள் தொலைத்த இந்த பொங்கல் பண்டிகை குறித்து ஒரு நினைவூட்டல்:காலை முதல் மாலை வரை தொடரும் மாடுகளின் வழக்கமான மேய்ச்சல் முறை, பொங்கல் அன்று மாறுபடும். அறுவடை முடிந்த புஞ்சை நிலத்தில், காலையில் மட்டும் மேய்ச்சலுக்காக மாடுகள் அவிழ்த்துவிடப்படும். மதியம், அறுவடை முடிந்ததால், அரை, குறை தழும்பலில் நிற்கும் கண்மாயில், மாடுகளுக்கு "காக்கா குளியல்' நடக்கும். கரையேறிய பின், வண்ண பொட்டிட்டு, கொம்புகளில் சொட்ட, சொட்ட விளக்கு எண்ணெய் காப்பு நடக்கும்.
கதம்ப மாலைகள், மாடுகளின் கழுத்தை கட்டிக் கொள்ளும். அவற்றை ருசிக்க முயன்று, முடியாத விரக்தியில் மாடுகள் மவுனமாகும். இன்னும் சிலர், தன் கட்சி செல்வாக்கை காட்ட, மாடுகளின் கொம்புகளில், கட்சிக் கொடிகளின் வண்ணம் தீட்டி, மாடுகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயல்வர்.வீடுகளுக்கு மாடுகளை அழைத்துச் செல்லும் விவசாயி, கதிரவனுக்கு பூஜை செய்து, மாடுகளுக்கு பொங்கல் படைப்பார். அந்த சமையத்தில் பொங்கல் பொங்கும் போது, அந்த வீட்டார் மட்டுமின்றி, எதிர் வீட்டாரும் சேர்ந்து குலவையிடுவர். பூஜை முடிந்த கையோடு, தான் எந்த கட்சியில் இருக்கிறோம் என்பதே தெரியாமல், பல்வேறு கட்சிகளின் வண்ணங்களை சுமந்த மாடுகள், ஊர் பொது திடலில் கூட்டணி அமைத்து, நிற்கும். "வெட்டிய கரும்பு, வேட்டி, துண்டு, பணம் படைத்தவராய் இருந்தால், சிறு பணமுடிப்பு,' போன்றவற்றை, மாட்டின் கழுத்தில் கட்டிவிடுவார் உரிமையாளர். சிலர், தங்களுக்கு பிடித்தமான மாடுகளுக்கு, வேட்டி, துண்டு கட்டி, மரியாதை செய்வதும் நடப்பதுண்டு. அதுவரை அடியும், உதையும் வாங்கிய மாடுகள், பொங்கலன்று உரிமையாளர் காட்டும் பாசத்தில், ஆனந்த கண்ணீர் வடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றை விரட்டி விடுவர்.
ஒரே நேரத்தில் ஓடும் மாடுகளை, இளைஞர் பட்டாளம் பின்தொடர்ந்து ஓடும். மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள பரிசுகளை அவிழ்ப்பவருக்கு, பொருட்கள் சொந்தமாகும். மாடுகளுடன் மந்தை ஓட்டம் நடத்திய இளைஞர்கள், பரிசுகள் கிடைத்த மகிழ்ச்சியை ஒயிலாட்டம் ஆடி வெளிப்படுத்துவர். இரவில், ஊருக்கு ஏற்றார் போல், நாடகமோ, கரகாட்டமோ நடக்கும். இது தான், 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் நடந்த மாட்டு பொங்கல்
தற்போது, கிராமங்களை யே காணவில்லை; பிறகு எங்கே மாட்டு பொங்கலை பார்ப்பது? வயல்வெளிகள், ரியல் எஸ்டேட் ஆக மாறிய பின், விவசாயம் குறைந்தது. டிராக்டர் வந்த பின் மாடுகள் குறைந்தது. மாடுகள் குறைந்ததால், மனித உழைப்பு குறைந்தது. நம் பாரம்பரியமும் குறைந்து வருகிறது. அழுத்தமான இந்த "ஆட்டோகிராப்', பாரம்பரியத்தை தொலைத்த நமக்கு ஆறுதல் தரட்டும்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மூன்று வேளை சாப்பிடும் பழக்கம் நம்மிடம் உண்டு. மறந்துவிடகூடாது. உணவு உற்பத்தியை பராமரிக்க வேண்டும். உற்பத்தி விலை நிர்ணயம், செலவழிக்கும் விலைவாசி கட்டுப்பாடு இரண்டும் ஒரே புள்ளியில் முன்னேற வேண்டும். அரசாங்கம் இதை செய்ய வேண்டும். படித்தவர்கள் அரசியல் வர வேண்டும். இந்தியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர் எத்ததனை பேர்?
எல்லோரும் சந்தை பொருளாதரத்திற்கு மாறிய பின், விவசாயி மட்டும் மாறக்கூடாது என்ற அரசியல். விவசாய பொருட்களுக்கு மார்க்கெட் நிலைப்படி விலைகிடைக்காதது போன்றவை இது போன்ற நிலைக்கு காரணம். மற்ற வேலைகளைவிட நல்ல கூலியும் விளையும் கிடைத்தால் விவசாயம் வளரும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் கண்மாய்களும், குளங்களும் பராமரிப்பின்றி போனதும் ஒரு காரணம்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.