சென்னை: சென்னை குடிநீருக்காக வழங்கப்படும் கிருஷ்ணா நதிநீர், ஆந்திர எல்லைக்குள் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்தும்படி, அம்மாநிலத்திற்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக, தமிழகம் மற்றும் ஆந்திர தலைமைச் செயலாளர்கள் அளவிலான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஆந்திர தலைமைச் செயலாளர் மின்னி மேத்யூ ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்களுடன் இருமாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தின் தரப்பில், கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் 600 கன அடி நீர், தமிழக எல்லைக்குள் நுழையும் போது வெறும் 150 கன அடி என்ற அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில எல்லை வழியாக கிருஷ்ணா நீர் பயணிக்கும் போது, அதிக இடங்களில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் தமிழகம் மிகவும் பாதிக்கப்படுவதாக எடுத்துக்கூறப்பட்டது. இதை ஆந்திர அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், 2012-13ம் ஆண்டு ஆந்திரா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில், பாக்கி நீரான 8.24 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி வலியுறுத்தப்பட்டது. ஆந்திர தரப்பில், காளஹஸ்தி பகுதியில் தமிழகத்தின் சார்பில் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டது.
பின்னர் ஆந்திர மாநில அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தங்கள் மாநில அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், இவ்விஷயத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநில இன்ஜினியர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். இக்குழு அவ்வப்போது அளிக்கும் அறிக்கையின்படி, சென்னைக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 1983ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி., தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திரா தனது கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீருக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு டி எம் சி கொடுக்கும் வீரனத்தை வைத்துக்கொண்டு ஆடியவர்கள் வருடத்திற்கு எட்டு டி எம் சி வரை கொடுத்துகொண்டிருக்கும் கண்டலேருவின் இன்று தான் நினைவுக்கு வருகிறது.ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை- ஒன்று கர்நாடகாவின் தயவு. இன்னொன்று ஆந்திரா. சென்னைக்கு பெரிதும் உதவிக்கொண்டு இருப்பது இந்த தண்ணீர் தான். இதை யாரும் மறுக்க முடியாது.
இந்த கோரிக்கை அந்த நீரை உறிஞ்சும் ஆந்திர விவசாயிகளை சீண்டி விடுவது போன்றது.. மண்ணின் மைந்தர்களுக்கு இல்லாத உரிமையா என்று கால்வாயையே வெட்டி விட்டு விடலாம்.. ஆகவே இதை அந்த அரசிடம் ஆதாரத்துடன் வைத்து, நமக்கு வேண்டிய நீரின் அளவு கிடைக்க அதிக தண்ணீரை திறந்து விட கோரிக்கை வைத்தால் அது, அது சாமர்த்தியம்.. இதற்கு நீரை உறிஞ்சும் ஆந்திர விவசாயிகளும் ஆதரவு அளிப்பார்கள்.. இலவசத்துக்கு வீணக்கும் 22,000 கோடியில் ஒரு 100, 200 கோடிகளை, ஏன் 1000 கோடி கூட செலவழித்து, இந்த கால்வாயின் அடிப்பரப்பையும், சுவர்களையும் திருத்தி, உண்மையில் சிமெண்ட் வைத்து கட்டினால் வீணாகும் நீர் முற்றிலும் குறையும்.. அனைவருக்கும் பயன் கிடைக்கும்.. ஆனால், சண்டை போட்டு வெறுப்பை சம்பாதிப்பதும், இலவசம் கொடுத்து கமிஷன் பார்த்து காசு சம்பாதிப்பதுமே மம்மியின் பிறவிக் குணமாக உள்ளது, தமிழ்நாட்டின் சாபக்கேடு..
விஜய நகர பேரரசு காலம் தொடங்கி தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். அதனை வழியாக கொண்டுதான் 1900 ஆரம்பத்தில் திராவிடர் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைந்ததுதான் இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம் . தேசிய தலைவர்கள் செய்த தவறு அது. அதனால் அதிக பாதிப்பை அடைந்தது தமிழ்நாடு. தண்ணீருக்கு கூட கையேந்தும் நிலை .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.