சென்னை: சென்னையில், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட, முயற்சித்த, நான்கு பேர் கும்பலை கொடுங்கையூர் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து, 5 லட்ச ரூபாய் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட, ஒருவர் தப்பியோடினார். சென்னையில், கடந்த சில மாதங்களுக்கு முன், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட, வடமாநில கும்பலை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதத்தில், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து, பயங்கரவாதிகள் சிலர், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.
புழக்கம் : வங்கி தானியங்கி மையங்களிலும், போலீஸ் கமிஷனரக உணவு விடுதி உள்ளிட்ட பல இடங்களில், 500 ரூபாய் கள்ளநோட்டு புழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மக்களிடையே, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக சிறு அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, வியாசர்பாடி பகுதியில் கள்ளநோட்டுகளுடன், ஒரு கும்பல் திரிவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், கூடுதல் துணை ஆணையர் ஜெயகுமார், உதவி ஆணையர் மனோகரன் மற்றும் ஆய்வாளர்கள் குணவர்மன், சம்பத் ஆகியோர் கொண்ட தனிப்படை, மூலக்கடை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டது.
மர்ம கார் : அப்போது, கருப்பு நிற கார் ஒன்று, மாதவரத்திலிருந்து வியாசர்பாடி நோக்கி வந்தது; போலீசார் நிறுத்தச் சொல்லியும் கேட்காமல், கார் வேகமாக சென்றது. காரை போலீசார் பின் தொடர்ந்ததும், காரிலிருந்து, நான்கு பேர் கொண்ட கும்பல் இறங்கி தப்பியோடியது. அதில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, அப்தூல் இஸ்மாயில் மட்டும் போலீசில் சிக்கினார்.
தப்பியோட்டம் : அவரிடம் விசாரித்த போது, கொடுங்கையூர், சிவசங்கரன் தெருவில் வசித்த வீட்டை அடையாளம் காட்டினார். அங்கு போலீசார் சென்ற போது, முகமது ரபீக் என்பவர், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, சூட்கேசுடன் தப்பியோடினார். அந்த வீட்டிலிருந்தும், காரிலிருந்தும் மொத்தம், 5.03 லட்ச ரூபாய் கள்ள நோட்டு, அசல் பணம், 4,800 ஐ, போலீசார் பறிமுதல் செய்தனர். தகவலின் பேரில், மண்ணடியில் பதுங்கிய, அப்துல் முனாப் மற்றும் வாசிம் ராஜா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் அனைத்தும், 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்டோர், கள்ளநோட்டு மூலமாக விலையுர்ந்த கணினி, கடன் அட்டை தேய்க்கும் உபகரணம் உள்ளிட்ட சில பொருளை வாங்கியுள்ளதும் தெரியவந்து, அதுவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு : போலீசாரால் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளை, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் மூலமாக, ஆய்வு செய்து அவை கள்ளநோட்டுகள் தான், என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். தப்பியோடிய முக்கிய நபரான, முகமது ரபீக் மீது, ஏற்கனவே மோசடி மற்றும் கள்ளநோட்டு தொடர்பான பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. முகமது ரபீக் தப்பியோடிய போது, சூட்கேஸ் ஒன்றுடன் சென்றதை போலீசார் பார்த்துள்ளனர். அவனைப்பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளநோட்டுகள் தொடர்பாக பொதுமக்கள் தகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே வழக்குகள் : கைது செய்யப்பட்ட வசீம் ராஜா, 22, ஆட்டோ டிரைவராகவும், அப்துல் முனாப், 20, மற்றும், அப்துல் இஸ்மாயில்,24, எலக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். முனாப், வேலூரை சேர்ந்தவர். மற்ற இருவரும், சென்னையை சேர்ந்தவர்கள். தலைமறைவாக உள்ள ரபீக், அடிக்கடி, கோல்கட்டா சென்று வந்ததும் தெரிய வந்துள்ளது. அவர் பயன்படுத்திய காரில், அண்ணாமலை நாதர் என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஒருவர், பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த காரை வேறொருவரிடம் விற்றது தெரிய வந்தது. ரபீக் மீது, ஏற்கனவே, கள்ள நோட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.