தளி தொகுதி, இ.கம்யூ.,- எம்.எல்.ஏ., குண்டாஸில் கைது செய்யப்பட்டு, ஆறு மாதமாக சிறையில் இருப்பதால், தொகுதி வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. மலைக் கிராமங்கள் நிறைந்த, அந்த தொகுதியில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் எடுத்து, நிதி ஒதுக்கீடு பெற்று, வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என,பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, தளி சட்டசபை தொகுதி, இ.கம்யூ.,-எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராமச்சந்திரன். ஓசூர் அருகே பாலேபுரத்தில், கடந்த ஆண்டு ஜூலை, 5ம் தேதி, பெரியார், தி.க., பிரமுகர் பழனி, 47, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், எம்.எல்.ஏ., ராமச்சந்திரனை, போலீசார், குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும், ஒரு, எம்.எல்.ஏ., தொகுதிக்கு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி, அதிகாரிகள், தளி தொகுதியில், முழுமையாக வளர்ச்சிப் பணி மேற்கொண்டுள்ளனரா, அந்த பணிகள் முழுமை அடைந்துள்ளதா, என்பதை அ அறிய, எம்.எல்.ஏ., இல்லை. மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்கவில்லை. சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் தன்னுடைய தொகுதி பிரச்னை, கோரிக்கைகளை தெரிவித்தால் மட்டுமே, அந்த தொகுதிகளுக்கு, சிறப்பு நிதிகள் வழங்கப்படுகின்றன.
நிதி பெற முடியவில்லை : தற்போது, தளி தொகுதி, எம்.எல்.ஏ., சிறையில் இருப்பதால், அந்த தொகுதிக்கு, அதிகாரிகள் சிறப்பு கவனம் எடுத்து, கூடுதல் நிதி பெற்று, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. மேலும், கலெக்டர் தலைமையில் செயல்படும், மாவட்ட திட்டமிடும் கமிட்டி மூலம், ஒவ்வொரு தொகுதிக்கும், தேவையான சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட, பல பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த கமிட்டியில், எம்.எல்.ஏ., ஒரு உறுப்பினராக உள்ளார். ஆண்டுக்கு, இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூடும், இந்த கமிட்டி கூட்டத்தில், எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, தன்னுடைய தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், தேவையான கட்டமைப்பு வசதி, குடிநீர், சாலை வசதி குறித்து எடுத்துக் கூறினால் மட்டுமே, நிதி பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். தற்போது, தளி தொகுதிக்கு, மாவட்ட திட்டமிடும் கமிட்டி நிதியை கேட்டு பெற்று, வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே, மலைக் கிராமங்கள் நிறைந்த தளி தொகுதியில், வேலைவாய்ப்பு, சாலை, குடிநீர், மருத்துவம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர்.
வளர்ச்சிப்பணி மந்தம் : தற்போது, தொகுதி எம்.எல்.ஏ., வின், கண்காணிப்பும், நிதி கேட்டு பெற முடியாததாலும், தளி தொகுதி வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. இந்த தொகுதியில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், 100 கி.மீ., தொலைவில் உள்ளதால், மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு, நேரடியாக, கலெக்டர் அலுவலகம் வர முடியவில்லை.
அதிகாரிகள், நேரடியாக மலைக்கிராமங்களுக்கு, தேடிச்சென்று, தொகுதி மக்கள் பிரச்னை, கோரிக்கைகளை தீர்த்தால் மட்டுமே உண்டு. யானைகள் அட்டகாசத்தால், ஆறு மாதமாக, தளி தொகுதியில், 25 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது; ஆறு பேர் பலியாகியுள்ளனர். இந்த பிரச்னைகளை சட்டசபையில் எடுத்துக்கூறி, விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண உதவி பெற்று தரவும், யானைகளை கட்டுப்படுத்த, அரசிடம் தெரிவிக்க தொகுதி எம்.எல்.ஏ., இல்லை. அதனால், வளர்ச்சிப்பணிகள் முடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம், மலைக்கிராமங்கள் நிறைந்த, தளி தொகுதி மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என,பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.