தமிழக சிறைகளில், கடந்த, 2012ம் ஆண்டில் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டுகளில், 3,000 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மொபைல் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க, புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள், மூன்று பெண்களுக்கான சிறப்பு சிறைகள், 12 சீர்திருத்த பள்ளிகள், ஐந்து சிறப்பு கிளை சிறைகள், ஒன்பது மாவட்ட சிறைகள், 94 கிளை சிறைகள், இரண்டு திறந்தவெளி சிறைகள் என, மொத்தம், 134 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் சராசரியாக, 5,250 தண்டனைக் கைதிகளும், 5,750 குற்றக் கைதிகள், 1,930 விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சோதனை : இந்த கைதிகள் மத்தியில், மொபைல் போன்கள், கஞ்சா உட்பட அனுமதிக்கப்படாத பொருட்களின் நடமாட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு, புகார் சென்ற போதிலும் நடவடிக்கை என்பது, ஆமை வேகத்திலேயே இருந்து வந்தது.
3,000 மொபைல் போன்கள் பறிமுதல்: இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் உளவுத்துறை, அரசுக்கு சிறைகளின் நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை மேற் கொள்ளப்பட்டது. சிறைத்துறை அதிகாரிகளின் அறிக்கையின் படி, தமிழகத்தில், 2012ல் 3,123 மொபைல் போன்கள், கஞ்சா பொட்டலங்கள், சிம்கார்டுகள், சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில், மற்ற சிறைகளை விட சென்னை புழல், மதுரை, கோவை, திருச்சி, வேலூர், சேலம், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில், அதிக அளவில் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னரும், இந்த சிறைகளில் இன்னும் மொபைல் போன்களின் நடமாட்டம் தொடர்வதும் தெரிய வந்துள்ளது. கைதிகளுக்கு தேவையான மொபைல் போன்களை, வார்டன்களே கடத்துவதும், மூன்று ஷிப்டாக பணிக்கு வரும் வார்டன்கள், அமைச்சுப் பணியாளர்கள் மொபைல் போன்களை முழுமையாக கொண்டு வராமல், ஒவ்வொரு பகுதியாக பிரித்து, உள்ளே கொண்டு வந்து, அதன் பின்னர் அவற்றை இணைத்து, கைதிகளிடம் விற்பனை செய்வதும், அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இன்றைய நிலவரப்படி, சிறைகளில் ஒரு மொபைல் போன், 5,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், சிம்கார்டு, 500 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையில், சிறை வார்டன் உட்பட அனைவருமே ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிறைகளில், மொபைல் போன்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அதிரடி வேட்டை நடத்த, சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சிறைகளில் மொபைல் போன் இனி சிக்கும் பட்சத்தில், மொபைல் போனை வைத்திருந்த கைதி மீது மட்டுமின்றி, அந்த சிறை அறையை கண்காணித்து வந்த அலுவலர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்றம் : மேலும், ஒரே சிறையில், பல ஆண்டுகளாக பணியாற்றும் ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், வார்டன்கள், அமைச்சுப்பணியாளர்கள் உள்ளிட்டவர்களை, கூண்டோடு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரவுடிகள், குண்டாஸ் கைதிகளை தொலை தூர சிறைகளுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இனி கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில், அதை வைத்திருந்த கைதியை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளியில் இருந்து மொபைல் போன், சிம்கார்டு, கஞ்சா பொட்டலங்கள் வீசப்படுகிறது. அதை கைப்பற்றும் பணி மட்டுமின்றி, தடுக்கும் பணியில், இனி கூடுதல் சிறை காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு, தடை செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்யும் அதிகாரிகள் மீது, இனி சஸ்பெண்ட் மட்டுமின்றி, டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உண்மையிலேயே நாட்டு மக்களின் மேல் அக்கறை இருந்தால், நீதிக்கு மதிப்பு அளிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் பணிபுரிபவர்களாக இருந்தால், புத்தகத்தை மட்டுமே படித்து விட்டு இதுதான் நம்முடைய வளர்ச்சி என்று நினைக்காமல், ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபடுபவர்களாக இருந்தால் அனைத்து சிறைவாசிகளுக்கும் தொலைபேசி தரவேண்டும், கொடுத்துவிட்டு அதைக் கண்கானித்தால் அனைத்து உண்மைகளும் தெரியவரும், அதை வைத்து நீதிமன்றத்தில் இவர்கள் நிரபராதிகளா அல்லது குற்றவாளியா என்பதை தீர்மானிக்கலாம் ? இதை ரகசியமாக செய்யவேண்டும், இதை விட்டுவிட்டு நடவடிக்கை எடுத்தால் யாருக்கு லாபம்? சிறை ஊழியர்களுக்கே வந்தே மாதரம்
நல்லாத்தான் இருக்கு ...இதெல்லாம் நடை பெறுமா ...கடல் எப்போ வற்றுவது மீன் எப்போ பிடிப்பது ...சிறைக்கு பொறுப்பு இருக்கும் காவலர் முதல் அதிகாரி வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அடிக்கடி இடம் மாற்றம் செய்யப்படவேண்டும் ..அதில் அரசியல் நுழையக்கூடாது...சிறைக்கைதிகளுக்கும் சிறை காவலரும் புதிய அறிமுகமாகவே இருக்கவேண்டும் ...சிறை திருந்தி வருவதற்கே ...ஆனால் அதுவே இப்போது பாதுக்காப்புடன் குற்றம் செய்ய திட்டம் தீட்டும் இடமாக உள்ளது

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.