மதுரை: நஷ்டப்படும் விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டிய, பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால், விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். புயல், வெள்ளம், வறட்சி நிலச்சரிவு, பூச்சிநோய், தீ, மின்னலால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, விவசாயிகளை காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியது. இதற்கு, மாநில அரசு 50 சதவீத மானியமும் தருகிறது.
நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளை, மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, வாழைப் பயிர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம்.
பயிர்களைப் பொறுத்து, ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகை "பிரிமீயமாக' வசூலிக்கப்படுகிறது. உத்தரவாத மகசூலின் மதிப்பு வரை, காப்பீடு செய்யலாம். மகசூலின் மீது 150 சதவீத மதிப்பு வரை காப்பீடு செய்ய விரும்புபவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்தலாம். கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விவசாயிகள், வேளாண் அலுவலர்களுக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில், இத்திட்டம் செயல்படும். ஒரு ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.78 கட்டினால், இழப்பின் போது ரூ.22ஆயிரம் கிடைக்கும். கூடுதலாக கட்டினால் ரூ.40ஆயிரம் வரை கிடைக்கும். இதுகுறித்த விழிப்புணர்வே இல்லை.
எப்படி கணக்கிடுவது: பிர்கா அளவில் எத்தனை விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர் என, கணக்கிடப்படும். அந்த பகுதியில் எவ்வளவு ஏக்கர் பயிர் இருக்கிறது என கணக்கிடப்பட்டு, டில்லியில் உள்ள வேளாண் காப்பீட்டு திட்டம் மூலம், வரிசை எண் வழங்கப்படும். இதில் ஏதாவது இரண்டு வரிசை எண் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தந்த பகுதி வேளாண்துறை, புள்ளியியல் துறைக்கு தகவல் அனுப்பப்படும். இந்த இரண்டு நிலங்களிலும் ஐந்துக்கு ஐந்து மீட்டர் குறியிட்டு, எப்போது, எந்தநாள் அறுவடைக்கு வருகிறதென தெரிந்து கொள்வர். அறுவடை நாளில் புள்ளியியல், வேளாண் துறை அலுவலர்கள் முன்னிலையில், குறியிட்ட இடத்தை அறுவடை செய்து தனியாக விளைச்சல் பார்ப்பர். அந்த விளைச்சல் தான், அந்த பிர்காவின் சராசரி விளைச்சலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, ஏக்கருக்கு 25 மூடை எனில், அது தான் சராசரி விளைச்சலாக கூறப்படும். அதற்கு கீழே விளைச்சல் இருந்தால், அதற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும். இந்தாண்டு தண்ணீரின்றி விளைச்சல் குறைந்தது. மாநிலம் முழுதுமே, இப்பிரச்னை ஏற்பட்டது. ஆனால் உரிய இழப்பீடு வழங்காமல், தவறான புள்ளி விபரங்களை தந்து, விவசாயிகளை கைவிடுவதாக, விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.
இது குறித்து, பெரியாறு பாசன திட்டக்குழு உறுப்பினர் அருள் பிரகாசம் கூறியதாவது: சில சமயங்களில் குறியிட்ட இரண்டு இடங்களில் பயிர் காய்ந்தாலோ, மாடு மேய்ந்தாலோ விவசாயிகளின் நிலை பரிதாபமாகி விடும். வேறு எங்கு நடவு செய்திருக்கிறது என, வேறு இரு இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தடவை, கிணற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகளின் நிலத்தை தவறாக தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு, 25 மூடை விளைச்சல் கிடைத்து விட்டது. ஆனால் கண்மாய், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு தண்ணீரின்றி விளைச்சல் இல்லை. எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதை, கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. வேளாண் துறை, புள்ளியியல் அலுவலர்களிடம் கேட்டால், எங்களுக்கு தெரியாது என்கின்றனர். இந்த போகத்திற்கு, வெறும் 20 நாட்கள் தண்ணீர் கொடுத்து, பொதுப்பணித்துறை எங்களை ஏமாற்றியது. மழை இன்றி, இயற்கையும் ஏமாற்றியது. கணக்கு சரியின்றி புள்ளி விவரத் துறை, விவசாயத்துறையும் ஏமாற்றின. விவசாயிகளின் கடைசி பிடிமானமே, காப்பீடு இழப்பு தான். அதிலும் கை வைத்தால், நாங்கள் எங்கே செல்வது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, காப்பீட்டின் மூலம் நஷ்டஈடு வழங்க வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.