பாலக்காடு :""காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, "பத்ம பூஷன்' விருதை, ஏற்கப் போவது இல்லை,'' என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி, அதிரடியாக அறிவித்துள்ளார்.
பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 75. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், "சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே... நெஞ்சினிலே' உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.தேசிய அளவில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, நான்கு முறை பெற்றிருந்தாலும், பத்ம விருதுகளை, இதுவரை, மத்திய அரசு தனக்கு கொடுக்கவில்லையே என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசு, நேற்று முன்தினம் இரவு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, பத்ம விருதுகளை அறிவித்தது.இதில், பின்னணி பாடகி, ஜானகிக்கும், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம், ஒட்டப்பாலத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஜானகி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த, 55 ஆண்டுகளாக, திரைத் துறையில், புகழ் பெற்ற பாடகியாக இருந்தேன்; ஆனாலும், மத்திய அரசு, என்னை அங்கீகரிக்கவில்லை. நான் பாடிய அனைத்து பாடல்களுமே, அந்தந்த மாநில ரசிகர்களால், பெரிதும் ரசிக்கப்பட்டன.என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும், மலையாள வார்த்தை உச்சரிப்பு, சரியாக இருப்பதாக, பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இவ்வளவு காலம் தாழ்த்தி, எனக்கு கிடைத்துள்ள கவுரவத்தை ஏற்க, எனக்கு மனம் வரவில்லை. பத்ம பூஷன் விருதை ஏற்க போவது இல்லை.
அதற்காக, மத்திய அரசு மீது, எனக்கு எந்த கோபமும் இல்லை; அரசு, தவறு செய்துவிட்டதாகவும் கருதவில்லை. ஆனாலும், விருதை வாங்கப் போவது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன்.இவ்வாறு ஜானகி கூறினார்.
ஜானகியின், மகன் முரளி கிருஷ்ணா கூறுகையில்,""என் தாயாருக்கு, காலம் தாழ்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது. இதை எப்படி ஏற்பது? விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை கூட, அரசு சார்பில், யாரும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை; மற்றவர்கள் கூறித் தான், தெரிந்தது,'' என்றார்.
"பத்மஸ்ரீ' விருது: ஸ்ரீதேவி பெருமிதம்:
"பத்மஸ்ரீ' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, பிரபல நடிகை ஸ்ரீதேவி, 49. கூறியதாவது:மத்திய அரசின் விருதை, அடக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மாநில மொழி ரசிகர்களும், எனக்கு அளித்த ஆதரவுக்கு, இந்த நேரத்தில், நன்றி தெரிவிக்க வேண்டியது, என் கடமை.நீண்ட இடைவெளிக்கு பின், "இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்தேன். அதற்கும், ரசிகர்களின் பாராட்டு கிடைத்தது. தற்போது, பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இந்த நேரத்தை, மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.தமிழில், 1967ல், "கந்தன் கருணை' என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, ஸ்ரீதேவி, அதற்கு பின், "16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா' உள்ளிட்ட, ஏராளமான தமிழ் படங்களிலும், "மிஸ்டர் இந்தியா, சாந்தினி, லக்மே' உள்ளிட்ட, பல இந்தி படங்களிலும், நடித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதலில் சினிமா துறைக்கு நாட்டின் உயரிய விருதுகள் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது விவாதிக்க படவேண்டும். இன்றைய சினிமா முற்றிலும் வியாபார நோக்கோடுதான் இருக்கிறது. 100 படங்களில் 90 படங்கள் கேவலமாக, சமுதய சீரழிவுக்கும், கலாச்சார சீரழிவுக்கும், குற்ற செயல் புரிவதற்கும், பெண்களை போக பொருளாக சித்தரிக்கிறது. நாம் வாழவேண்டுமானால் எத்தனை பேரை வேண்டுமானால் சாகடிக்கலாம் என்று கருத்து சொல்லும் சினிமாவுக்கு என்ன சமுக பொறுப்பு இருக்க முடியும். ஆவின் பால் வேண்டுமா, ஆரோக்கிய பால் வேண்டுமே, அமலா பால் வேண்டுமா என்று பேசும் அவலமான சினிமா. இப்படி பட்ட சினிமாவுக்கு ஏன் நாட்டின் உயரிய விருது குடுக்க வேண்டும். ஜானகி அம்மா எல்லா மொழிகளிலும் பாடி என்ன தியாகம் இந்த நாட்டிற்காக செய்தார்கள். விருது என்பது கேட்டு பெறுவது அல்ல. ஜானகி அம்மா அநேக நல்ல பாடல்கள் படி இருந்தாலும், சினிமா பாடல்களில், ஆபாச உணர்வுமிக்க முக்கல், முனகல் மிக்க பாடல்கள் இவர்தான் பாடி உள்ளார் என்னுடைய தாழ்மையான கருத்து.
இயற்கையான இசை கர்நாடக இசை மட்டுமே..,செயற்கையான திரை இசைக்கும் நிழல் சினிமா கற்பனை கலை துறை சார்தவர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி விருதுக்குரிய மரியாதையை இழக்க கூடாது. என்பதை இவர் விருது புறக்கணிப்பு நடவடிக்கை காட்டுகிறது. இவை சிறப்புக்கு உரிய பத்ம விருதுக்கு மதிப்புக்குரிய நல்ல கலை வல்லுனருக்கு கர்நாடக இசைக்கு மட்டும் வழங்க பட வேண்டும் - பூபதியார்
பசி ஏப்ப காரனுக்கும் புளி ஏப்ப காரனுக்கும் வித்தியாசம் தெரியாத காங். அரசு . மற்ற துறைகளில் தான் இப்படி என்றால் எல்லாவற்றிலுமா இப்படி ? ஒரு கலைஞனுக்கு தேவை தன் திறமைக்கான அங்கீகாரம் . அது ஜானகிக்கு மக்களிடம் உண்டு . தாமதிக்கப்பட்ட நீதி, கௌரவம் ,மருத்துவம், நிவாரணம் அனைத்துமே பயனற்றது . ஜானகியின் திறமைகள் நிராகரிக்க படவில்லை என்பதே பெரிய விஷயம் தானே (இது தனக்கு தானே சமாதான படுத்திக்கொள்ளுவது) - வீட்டில் விஷேஷங்களுக்கு ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் நல்லவனோ, கெட்டவனோ - மாப்பிள்ளைக்கு தரும் மரியாதை வேறு தானே . விருதுக்காக காத்திருப்பவர் கலைஞர் அல்ல (தனக்கு தானே விருதுகள் கொடுத்துக்கொள்ள இவர் என்ன நம்ம மஞ்சள் துண்டாரா ?) . நேரு காலத்திலிருந்தே இப்படிப்பட்ட அவமதிப்புகள் எல்லா துறைகளிலும் உண்டு . தான் வாழ பிறரை கெடு இது தான் காங். & தி.மு.க தாரக மந்திரம் ஜானகி விருதை ஏற்க மறுத்தது சால சிறந்தது . நல்ல முடிவு . அவர் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் . சந்திரகுப்தன். தோஹா , கத்தார் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.