தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களுக்கு, ஆண்டு தோறும் புதிய பஸ்கள் வழங்கப்பட்டு வந்த போதிலும், இன்னும், 10 ஆயிரம் பாடாவதி பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம், இயக்கப் படும் பஸ்களின் எண்ணிக்கை, 21 ஆயிரத்து, 989 ஆக அதிகரித்துள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, 2012ல், 3,000 புதிய பஸ்களை இயக்கியது. நடப்பாண்டில், 3,000 புதிய பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு புதிய பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், போக்குவரத்துக் கழகங்களில் செயல்பாடு, மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. தாழ்தள சொகுசு பஸ்கள், குளிர்சாதன வசதிகளை கொண்ட பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், பஸ்களை இயக்கிய போக்குவரத்துக் கழகங்கள், தற்போது ஆம்னி பஸ்களுடன் போட்டி போடுவதற்கு ஏதுவாக, மல்டி ஆக்ஸில், படுக்கை வசதி கொண்ட (சிலிப்பர்) பஸ்களை இயக்குவது குறித்து, ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இருந்த போதிலும், பாடாவதி பஸ்களின் இயக்கம் தொடர்கதையாக உள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகங்களில் தற்போது, 45 சதவீத பஸ்கள், அதாவது, 10 ஆயிரம் பஸ்கள் பாடாவதி நிலையிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.பஸ்களில் போதிய பராமரிப்பு இல்லாததால், குறிப்பிட்ட நேரத்தில் பயண தூரத்தை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது.பாதி வழியில் பழுதாகி நிற்பது, மழைக் காலத்தில் ஒழுகுவதால், மழை நீர் பஸ்சுக்குள் புகுந்து விடுதல், பராமரிப்பு இல்லாததால் சீட்டுக்கள் கிழிந்தும், உட்புறங்களில் குப்பை மாதக் கணக்கில் தேங்குதல், பான்பராக் துர்நாற்றம், இவற்றுக்கு எல்லாம் மேலாக, "குடிமகன்'கள் வாந்தி எடுப்பதை கூட அள்ளாமல் விடுதல் என, பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யூ.,) பொதுச் செயலர் அன்பழகன் கூறியதாவது:தமிழக அரசு ஆண்டுக்கு ஆண்டு புதிய பஸ்களை இயக்கிய போதிலும், தற்போது போக்குவரத்துக் கழகங்களில், 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் வரையிலான பாடாவதி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கடந்த, 1991ல் அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில், "ஆறு ஆண்டுகள் இயக்கப்பட்ட பஸ், ஏழு லட்சம் கி.மீ., தூரம் இயங்கிய பஸ்களை, கண்டம் செய்து விட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு செயல்முறைப் படுத்தப்பட வில்லை.தற்போதைய நிலவரப்படி போக்குவரத்துக் கழகங்களில், 1.36 லட்சம் தொழிலாளர்கள் பணி செய்து வரும் நிலையில், தொழில்நுட்ப பணியாளர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் பற்றாக்குறையாக உள்ளன.இதனால், தற்போது இயக்கத்தில் உள்ள பாடாவதி பஸ்களை பராமரிக்க முடியாமலும், புதிதாக இயக்கப்படும் பஸ்களின் பராமரிப்பும் சொல்லிக் கொள்ளும் படியும் இல்லாததால், புதிய பஸ் களும் விரைவில் பாடாவதி நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். எனவே, தமிழக அரசு புதிய பஸ்களை இயக்கும் நிலையில், அதற்கு தேவையான டிரைவர், கண்டக்டர், தொழில் நுட்ப பணியாளர்களையும் புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசு தலை கீழாக நின்றாலும் போக்குவரத்து துறை சீரடையாது. ஒருபுறம் அரசும், அதிகாரிகளும் அடிக்கும் கொள்ளை, மறுபுறம் தொழிற்சங்கங்கள் செய்யும் அட்டூழியம். ஒரு வாகனம் வைத்திருக்கும் தனியார் 2 ஆண்டுகளில் 3 வாகனங்களுக்கு அதிபதியாகின்றார். வாகனங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு பயணிகள் விரும்பப்படும் வகையில் நடத்துகின்றார்கள். ஆனால் அரசு வாகனங்களோ காரி உமிழும் நிலையில் உள்ளது. நடத்த முடியாதென்றால் விட்டு விடவேண்டியதுதானே. மக்கள் பணத்தை ஏன் வீணடிக்கவேண்டும். ஆனால் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இது ஒரு கற்பகதரு.
பேருந்தில் பயணிப்பவர்களும் அவை யார் பணத்திலோ வாங்கிய சொத்து என்பதுபோல் துப்புரவாக பயன்படுத்துவதில்லை. சேவை என்ற எண்ணமில்லாமல் லாபம் ஒன்ற குறிக்கோள் எனக்கருதும் அரசும் பேருந்துகளை பராமரிப்பதில்லை... பேருந்துகள் நாம் நமக்காக இயக்குபவை என்ற எண்ணம் வேண்டும். ஒவ்வொரு நாள் காலையும் சுத்தம் செய்யப்படாமல் பேருந்துகள் தங்களின் பொறுப்பற்ற மக்களுக்கான சேவையை வருத்தத்துடனே துவக்குகின்றன... மேலைநாடுகளின் சுத்தத்தை போற்றும் நாம், நம் சுற்றுப்புறங்களை எப்படி வைத்துக்கொள்கிறோம்?? பொதுச்சொத்துக்களை பராமரிப்பு என்ற எண்ணம் நம்மிடம் கொஞ்சம் கூட இல்லை.... செலவு செய்ய பணமும் தொலைக்காட்சிபெட்டியும் இருந்துவிட்டால் போதும்... நம் மக்களுக்கு வேறு எது எப்படி போனால் என்ன? மக்களின் இந்த ஒரு எண்ணம் போதாதா, அரசியல் வாதிகள் மக்களை சுரண்டுவதற்கு???
ஒரு ஒரு ஊழியரும் அவர் அவர் வேலையை தரமாக செய்தல் அரசு போக்குவரத்து கழகம் செமையாக செயல் படும்..எதனை ஓட்டுனர் அவர் இருக்காய் கூட சுத்தம் செய்யாமல் ஓடுகின்றனர் ?முதலில் சுத்தம்,வாரம்,மாதம் என பராமரிப்பு வகை paduthi ஒரு ஒரு பேருந்தும் இயக்கப்படவேண்டும்...இப்படி செய்தல் அட்டிக்கடி புதிய பேருண்டு வாங்கும் நிலை வருமா????யோசிங்கயா ...
அரசு நிர்வாகம் என்றாலே ஊழலோ ஊழல்தான் .தனியார் நிர்வாகம் பஸ்களை தூய்மையாகவும் ,புதுமை மாறாமலும் பராமரிக்கும் நிலையில், அரசு பஸ்களில் மட்டும் பாடாவதி பஸ்கள் இருக்கக் காரணம் நேர்மையற்ற நிர்வாகமும் ,முறைகேடுகளுமே ஆகும்.என்றைக்கு போக்குவரத்து கழக மேல்மட்டத்தில் லஞ்ச லாவண்யம் நடை பெறாமல் தடுக்கப்படுகிறதோ அன்றுதான் அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்படும் நிலை உருவாகும்.அரசு பஸ்கள் என்றாலே ஏதோ தர்மத்திற்கு இயக்கப்படுவது போல் இயக்கப்படுகிறதே தவிர மக்கள் நலனில் எள்ளளவு கூட அக்கறை கொண்டு இயக்கப் படவில்லை என்பதை ஆணித்தரமாக கூறலாம் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.