கர்நாடக மாநில, பா.ஜ.,வில் நாளுக்கு நாள், குழப்பங்களும், குளறுபடிகளும் தீவிரமாகி வருகின்றன. ஆனாலும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பா.ஜ., அரசுக்கு, எந்த ஆபத்தும் ஏற்படாது என, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ராஜினாமா:கர்நாடகாவில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இந்த அரசில் இடம் பெற்றிருந்த இரண்டு அமைச்சர்கள் உட்பட, 13 எம்.எல்.ஏ.,க்கள், சமீபத்தில் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் எல்லாம், பா.ஜ., முன்னாள் முதல்வரும், "கர்நாடக ஜனதா கட்சி' என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளவருமான, எடியூரப்பாவின் ஆதரவாளர்கள்.பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 13 பேர் ராஜினாமா செய்ததால், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்படலாம்; அவரை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் பரத்வாஜ் உத்தரவிடலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.இந்த சூழ்நிலையில், கர்நாடக, பா.ஜ., முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், நேற்று முன் தினம் இரவு, டில்லி வந்தார். பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜ்நாத்சிங் இல்லத்திற்கு நேற்று காலை சென்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, கர்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்து, அவருடன் ஆலோசனை நடத்தினார்.இதன்பின், நிருபர்களைச் சந்தித்த, பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங், ""கர்நாடக பா.ஜ.,வில், குழப்பம் எதுவும் இல்லை; மாநில அரசுக்கும், எந்த நெருக்கடியும் இல்லை,'' என்றார்.முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், "கர்நாடகாவில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் விலகியதாக கூறப்படுகிறது. அதுபோல் நடக்கவில்லை. உண்மைக்கு மாறான செய்தி அது. எந்த ஒரு எம்.எல்.ஏ., வும், இதுவரை ராஜினாமா செய்யவில்லை,'' என்றார்.
இந்நிலையில், கர்நாடக அரசியல் குழப்பங்கள் குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:கர்நாடக சட்டசபையில், மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 225. பா.ஜ.,வுக்கு, 117 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். இவர்களில், 13 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளதால், சட்டசபையில், பா.ஜ.,வின் பலம், 104 ஆக குறைந்துள்ளது. காங்கிரசுக்கு, 71 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு, 26 எம்.எல்.ஏ.,க்களும், சுயேட்சை எம்.எல். ஏ.,க்கள் ஏழு பேரும் உள்ளனர்.சமீபத்தில், ராஜினாமா செய்த, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 13 பேரும், தங்களின் ராஜினாமா கடிதங்களை, முதலில், இ-மெயில் மூலமாக, சபாநாயகருக்கு அனுப்பினர். பின், இவர்களில், 12 பேர், முறையான ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்; மற்றொருவர் இன்னும் கொடுக்கவில்லை. ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளவர்களை, கர்நாடக சட்டசபை சபாநாயகர் இன்று சந்திக்கிறார். அப்போது, அவர்களிடம், கடிதங்கள் குறித்து, சில விபரங்களை கேட்க உள்ளார்.பா.ஜ.,விலிருந்து முன்னாள் முதல்வர், எடியூரப்பா வெளியேறியது முதல், கர்நாடக மாநில அரசியலில் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில், இரண்டு அமைச்சர்கள் உட்பட, 13எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால், ஜெகதீஷ் ஷெட்டர் அரசுக்கு ஆபத்து உருவாகி உள்ளதாக, ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஷெட்டர் அரசை கவிழ்க்கும் நடவடிக்கையில், யாரும் ஈடுபடவில்லை; காப்பாற்றும் வேலையிலும் யாரும் அக்கறை காட்டவும் இல்லை. அதற்கு காரணம், ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசின் பதவி காலம், வரும், ஏப்ரல் மாதத்துடன், முடிவடைகிறது. முடிவடையப் போகும் ஒரு அரசை, யாரும் கவிழ்க்க முடியாது.அதேநேரத்தில், கர்நாடகாவின் தற்போதைய அரசியல் குழப்பங்களை எல்லாம், காங்கிரஸ் மிகுந்த கவனமாக கவனித்து வருகிறது. மாநில அரசை கவிழ்க்க, காங்கிரஸ் தயாராக இல்லை. அதிக ஓட்டு வங்கியைக் கொண்ட, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். அவரது தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தால், அந்த சமூகத்தினரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என, காங்கிரஸ் நினைக்கிறது.எனவே, இப்போதைய குழப்பங்களை வைத்து, ஜெகதீஷ் ஷெட்டர் அரசு கவிழும் என்றோ, காப்பாற்றப்படும் என்றோ பேசுவது அர்த்தமற்றது.இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
தகுதி நீக்கம் செய்ய கோரி மனு:கர்நாடக சட்டசபை சபாநாயகர் போப்பையாவை சந்தித்து மனு கொடுப்பதற்காக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் ஆறு பேர், நேற்று விதான் சவுதா சென்றனர். சபாநாயகர் அங்கில்லாததால், சட்டசபை செயலாளர் ஓம்பிரகாஷ், அவர்களின் மனுவை பெற்றுக் கொண்டார்.மனுவில், "முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக இருக்கும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 12 பேரை (ராஜினாமா கடிதம் கொடுத்தவர்கள்) தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் கட்சிக்கு விரோதமாக நடந்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டிருந்தனர். இதற்கிடையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில்,""பா.ஜ., அரசை கவிழ்ப்பது எனது நோக்கமல்ல. பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் சிலர், தாங்களாகவே விருப்பப்பட்டு என் கட்சியில் சேர்கின்றனர்,'' என்றார்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தேவ கெளடா கட்சியுடன் கூட்டணி வைத்தத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சிக்கு கர்நாடகாவில் கேடு காலம் ஆரம்பித்து விட்டது. இதை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வராவிட்டால், ஜென்மத்தில் கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. பாஜக தலைமை சிந்தித்து எடியுரப்பாவை திரும்பி கொண்டு வந்தால் தான் இது முடிவுக்கு வரும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.