கோவை:""குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர், சமூகத்தின் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், வழக்கு விசாரணையை சந்தித்துதான் ஆக வேண்டும்,'' என, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப ரோடு வசதிகள் பெரியளவில் மேம்படுத்தப்படவில்லை. இதனால் விபத்துக்கள் பெருகி வருகின்றன. 2012ல் அதிவேகமாக வாகனம் ஓட்டியது, மது போதையில் வாகனம் ஓட்டிய காரணங்களுக்காக, 3 லட்சத்து 78,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சிக்கியவர்களிடம் இருந்து, 6.39 கோடி ரூபாய் அபராதம் வசூலானது. 2011ல் 3 லட்சத்து 65,750 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 6.22 கோடி ரூபாய் அபராதம் வசூலானது. 2011ல் 1,126 சாலை விபத்துக்கள் நடந்தன.
இதில் 1,058 பேர் காயமடைந்தனர்; 259 பேர் பலியானார்கள். 2012ல் பதிவான 1,128 ரோடு விபத்துக்களில் 1,009 பேர் காயமடைந்தனர்; 270 பேர் பலியானார்கள்.
எவ்வளவு அபராதம் விதித்தாலும், மீண்டும் அதே தவறு தொடரும் அவல நிலையையே, இந்த புள்ளி விபரம் கூறுகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதே பல விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது.
"நடப்பு ஆண்டில் இந்நிலை தொடர்வதை தடுக்க, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருவதாகவும், சிக்குபவர் சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும்' என்றும், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
இந்திய விமானப்படை நிர்வாகவியல் கல்லூரியில் நேற்று நடந்த சாலை பாதுகாப்பு வார துவக்க விழாவில்,
கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேசியதாவது:
கோவை நகரில் ஐந்து லட்சம் வாகனங்கள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இது ஐந்து மடங்கு அதிகம்.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, ரோடுகள் அகலப்படுத்தப்படவில்லை. ஆகவே ஒவ்வொருவரும் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலமும், சுய ஒழுக்கமுடன் வாழ்வதன் மூலமும் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் ஏற்படுத்தும் விபத்துக்களால், அவர்கள் மட்டுமல்லாமல் எந்த பாவமும் செய்யாத பிறரும் பாதிக்கப்படுகின்றனர்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம், இதற்கு முன் ஆயிரம் ரூபாய் "ஸ்பாட் பைன்' அபராதம் வசூலிக்கப்பட்டது.
அபராதம் செலுத்துபவர்கள், மீண்டும் அதே தவறை செய்ய வாய்ப்புள்ளது என்பதால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை இன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விட்டோம்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர், சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவராக இருந்தாலும் வழக்கு விசாரணையை சந்தித்துதான் ஆக வேண்டும். சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால், இதுபோன்ற வழக்கு கெடுபிடிகளில் சிக்க வேண்டியதில்லை.
மனப்பான்மை மாற்றங்களால் பெரிய மாறுதல்களை கொண்டு வர முடியும். எதிர்கால சமுதாயம் வகுப்பறைகளில் இருந்து துவங்குவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேசினார்.
கோவை விமானப்படை நிர்வாகவியல் கல்லூரி கமாண்டன்ட், ஏர்கமாடோர் மேனன் பேசுகையில், ""அன்னையர் தினம், தந்தையர் தினம் ஆகியவற்றை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகிறோம்.
சாலை பாதுகாப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒரு வாரத்தையே ஒதுக்கி விடுகிறோம். இந்திய ரோடுகளில் தினமும் 370 பேர் விபத்துக்களுக்கு பலியாகின்றனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,'' என்றார்.
விமானப்படை பள்ளி முதல்வர் ஜெயஸ்ரீ மற்றும் விமானப்படை வீரர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, இலவச வாகன பரிசோதனை, இலவச மாசு பரிசோதனை, குழந்தைகளுக்கான ஓவிய போட்டிகள், கட்டுரை, குவிஸ் போட்டிகள், பெண்களுக்கான ரங்கோலி போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.