சென்னை: "நடிகர் கமல் நடித்துள்ள, விஸ்வரூபம் படத்துக்கு, சரியாக பரிசீலிக்காமல், சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு, சென்சார் சான்றிதழ் வழங்குவதில், மோசடி நடக்கிறது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசின் அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார். "விஸ்வரூபம்' படத்தை, தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் திரையிட, 15, நாட்களுக்குத் தடை விதித்து, மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது: கலெக்டர்களிடமிருந்து, தியேட்டர்களுக்கு உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள், ஒரே மாதிரியாக உள்ளன. ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான, உத்தரவுகளை எப்படி பிறப்பிக்க முடியும்? எனவே, அவர்களுக்கு ஏதாவது உத்தரவு வந்திருக்க வேண்டும்.
கலெக்டர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஏதாவது ஒரு சம்பவம் நடந்ததாகவோ, அதனால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவோ கூறப்படவில்லை. தமிழகத்தில், அரசு இயந்திரங்கள் செயல் இழந்து விட்டதா?
"சினிமோட்டோகிராப்' சட்டத்தின்படி, படத்தை, மாநில அரசு தடை விதிக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முடியாது. இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை, மூன்று கமிட்டிகள் பார்த்துள்ளன. அந்தக் கமிட்டியில், ஒரு முஸ்லிம் உறுப்பினரும் உள்ளார். படத்தில், இந்திய முஸ்லிம் பற்றி எதுவும் கூறப்படவில்லை. படத்தின் கதாநாயகன், ஒரு முஸ்லிம்; அவரும் நல்லவர் தான். கேரளா, ஆந்திர மாநிலங்களில், படம் வெளியிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளாவில், முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த, மலபார் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியபின், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, மாநில அரசு தடைவிதிக்க முடியாது. சட்டம், ஒழுங்கு பிரச்னை, மாநில அரசு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு படத்தை திரையிடுவது, மத்திய அரசு சம்பந்தப்பட்டது. நடிகர் கமல், தனது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை, இப்படத்தில் முதலீடு செய்துள்ளார். படத்தை எதிர்ப்பவர்கள், 100 கோடி டெபாசிட் செய்வார்களா? இப்படத்திற்கு விதித்த தடையை நீக்கவேண்டும். இவ்வாறு, மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன் வாதாடினார்.
இதையடுத்து, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடியதாவது: பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும், என, அரசு கருதினால், தடை உத்தரவு பிறப்பிக்க முடியும். அரசுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டும், அந்தப் பகுதியில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களுக்குத்தான் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது. இப்படத்தை வெளியிட்டால், பொது மக்களுக்கு, பொதுச் சொத்துக்களுக்கு, ஆபத்து ஏற்படக் கூடும். இப்படத்துக்கு, சட்டப்படி, சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. திரைப்படங்களுக்கு, சென்சார் சான்றிதழ் வழங்குவதில், மிகப்பெரிய மோசடி நடக்கிறது. இதுகுறித்து, சிறப்புக் குழுவை நியமித்து, விசாரிக்க வேண்டும்.
சென்சார் போர்டு, சான்றிதழ் வழங்கியதில், சரியாக பரிசீலனை நடக்கவில்லை. அவர்கள் மனதை செலுத்தி, சான்றிதழ் அளித்தார்கள் என்பதற்கு, எந்த ஆவணமும் இல்லை. இந்த படத்தில், அதிக தொகையை முதலீடு செய்திருப்பதாகக் கூறுகின்றனர். ஒருவரின் உயிரை, பணத்தைக் கொண்டு மதிப்பிட முடியாது. இவ்வாறு, அட்வகேட்-ஜெனரல் வாதாடினார்.
மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் வாதாடியதாவது: அதிகாரிகள் நால்வர் அடங்கிய குழு, படத்தை பார்வையிட்டது, 13, காட்சிகளில், "கட்' செய்யப்பட்டு, பின், சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை ரத்து செய்ய முடியுமா என, மாநில உள்துறை தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு, öசுன்சுõர்போர்டு உடன்படவில்லை. படத்தில், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக, காட்சிகள் இல்லை. மத்திய அரசு சான்றிதழ் அளித்த பின், அதில் மாநில அரசு தலையிட அதிகாரமில்லை. படத்துக்கு சான்றிதழ் அளிக்கும் வரை, எந்த ஆட்சேபணையும் வரவில்லை. படத்தை திரையிடுவதில் தவறில்லை.
இவ்வாறு, மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடினார். முஸ்லிம் அமைப்புகள் சார்பில், வழக்கறிஞர் சங்கரசுப்பு, "முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில், காட்சிகள் உள்ளன' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.