விக்கிரமசிங்கபுரம் : பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இதே நாளில் சுமார் 52 அடி குறைவாக இருப்பதால் வரும் கோடை காலத்தை சமாளிக்க அணையில் போதிய தண்ணீர் இருக்குமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.பாபநாசம் அணையிலிருந்து கடந்த ஆண்டு பிசான சாகுபடி பாசனத்திற்காக நவம்பர் மாதம் 15ம் தேதி அணைதிறக்கப்பட்டது. அப்போது மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 77.45 அடியாக இருந்தது. சாகுபடி பாசனத்திற்காக அணை திறக்கப்பட்ட நாளிலிருந்து மொத்தம் 137 நாட்களுக்கு தண்ணீர் தேவை என்பதால் விவசாயத்திற்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு கொண்டிருக்கிறது.இதனால் பாபநாசம் அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 61.15 அடிக்கு சென்றது. அணைக்கு விநாடிக்கு 190.63 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 704.75 கன அடி நீர் வெளியேறியது. கடந்த ஆண்டில் இதே நாளில் பாபநாசம் அணையின் நீர் மட்டம் 113.60 அடியாக இருந்தது. 156 அடி கொள்ளவு கொண்ட சேர்வலார் அணையில் கடந்த ஆண்டில் 112.50 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டில் நேற்று முன்தினம் 69.82 அடியாகவும், 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 81.64 அடியாகவும் இருந்தது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பாபநாசம் அணையின் நீர்மட்டம் 52 அடியும், சேர்வளார் அணையின் நீர்மட்டம் 43 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 12 அடியும் குறைந்துள்ளது.இந்நிலையில் நெல்லை தூத்துக்குடி இரு மாவட்டங்களிலும் சேர்ந்து சுமார் 86 ஆயிரம் ஏக்கரில் செய்யப்படும் பிசான சாகுபடி பாசனத்திற்கு வருகின்ற மார்ச் மாதம் வரை அதாவது இன்னும் 60 நாட்களுக்கு தண்ணீர் தேவை உள்ளது.தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக நாள் ஒன்றுக்கு 700 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு சுமார் 1 அடி வீதம் குறைந்து வருகிறது. பாபநாசம் அணையின் தற்போதைய நீர் மட்டம் நிலவரப்படி அணையிலிருந்து இன்னும் 35 நாட்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கலாம். நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் 35 நாட்களுக்கு சுமார் 35 அடி என்ற கணக்கில் தண்ணீர் எடுக்கப்பட்டால் அணையின் நீர் மட்டம் இன்னும் 35 நாட்களில் சுமார் 26 அடியாகிவிடும். அணையின் நீர் மட்டம் 26 அடியாகும் போது அணையை மூட வேண்டிய நிலை ஏற்படும். அதாவது மார்ச் மாதம் கடைசியில் அணை மூடப்பட வேண்டியநிலை உருவாகும். அணை மூடப்படும் போது மாவட்டத்தில் கோடை காலத்தின் தண்ணீர் தேவையை சமாளிப்பதும் கஷ்டம் தான்.இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சேர்வலார், காரையார் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பணி நிலவுகிறது. பகல் நேரங்களில் கோடை காலத்தில் அடிக்கும் வெயில்போல் அடித்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த ஆண்டில் கோடை காலம் முன்கூட்டியே துவங்கிவிடும் என்ற நிலை இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அடித்து வரும் வெயிலால் பாபநாசம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்து பல்வேறு வழிகளில் அணையின் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் வரும் கோடை காலத்தை சமாளிக்க பாபநாசம் அணையில் போதிய தண்ணீர் இருக்குமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.