புதுடில்லி:தெலுங்கானா விவகாரத்தால், ராஜினாமா கடிதங்களை அளிக்க முன்வந்த காங்கிரஸ் எம்.பி.,க்களிடம், "பேச்சு நடத்த டில்லி வாருங்கள்' என அழைத்த கட்சி மேலிடம், சந்திக்காமல் ஏமாற்றியுள்ளது. இதன் மூலம், இந்த விவகாரத்தை இன்னும் இழுத்தடிக்க காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, வலுவடைந்து வருவதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. "இந்த விவகாரத்தில், ஒரு மாதத்தில் முடிவு எடுக்கப்படும்' என, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவித்தார். ஆனால், சொன்னபடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த, தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்., எம்.பி.,க்கள், ஏழு பேர், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தனர். நேற்றுமுன்தினம், இவர்கள் ஏழு பேரும் ஐதராபாத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர். இனியும் காலதாமதம் செய்தால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், ராஜினாமா கடிதங்களையும் தயார் செய்தனர்.
லோக்சபா சபாநாயகர், மீரா குமாருக்கு முகவரி இட்டு எழுதப்பட்ட அந்த கடிதங்களை, காங்கிரஸ் தலைவர், சோனியாவிடம் அளிப்பது என, அவர்கள் முடிவெடுத்தனர்.நேற்று முன்தினம் மதியம், 12:30 மணியளவில், ராஜினாமா அறிவிப்பு, ஐதராபாத்தில் வெளியானது. அடுத்த, அரை மணி நேரத்தில், டில்லியில் இருந்து, மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வயலார் ரவியிடம் இருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது.ராஜினாமா முடிவில் தீவிரமாக இருந்த, மதுயாக்ஷி என்ற எம்.பி., யிடம் பேசிய வயலார் ரவி, "தெலுங்கானா விவகாரம் தொடர்பாக, உங்கள், ஏழு பேரிடமும் முக்கிய ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது; அவசரப்பட வேண்டாம். சோனியா சார்பில் அழைக்கிறேன்.பேச்சுவார்த்தை நடத்த, டில்லிக்கு வாருங்கள்' என, கூறியுள்ளார்.
மேலிடத் தலைவர் அழைப்பு விடுக்கிறாரே என நம்பிய, ஏழு எம்.பி.,க்களில் மூன்று பேர், டில்லிக்கு உடனடியாக கிளம்பினர். மீதமுள்ள, நான்கு எம்.பி.,க்களால் உடனடியாக கிளம்ப முடியவில்லை. அவர்கள், தங்கள் ராஜினாமா கடிதங்களை, மூன்று எம்.பி.,க்களிடம் கொடுத்து, "இந்த கடிதங்களை, கட்சி தலைமையிடம், நீங்களே அளித்து விடுங்கள்' என, கொடுத்தனர்.இதையடுத்து, பொன்னம் பிரபாகர், மதுயாக்ஷி, ராஜய்யா ஆகிய, மூன்று எம்.பி.,க்களும், நேற்று முன்தினம் இரவில் டில்லிக்கு சென்றனர்.டில்லி அடைந்த உடன், மூத்த தலைவர், வயலார் ரவியை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது தான், வயலார் ரவி, டில்லியிலேயே இல்லை என்பதும், அவர் சென்னையில் இருக்கும் விவரமும் தெரிய வந்தது."வயிற்று வலி' என கூறி, சென்னை மருத்துமனை ஒன்றில், வயலார் ரவி சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும், ஆந்திரா காங்., எம்.பி.,க்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டாமல், டில்லியிலேயே நேற்று இரவு வரை தங்கியிருந்தனர்.
தெலுங்கானா விவகாரத்தில், சொந்த கட்சி எம்.பி.,க்களை, காங்., ஏன் அலைக்கழிக்க வேண்டும் என்பது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:மன்மோகன் சிங் அரசுக்கு, இப்போதைய மிகப் பெரிய தலைவலியே, பட்ஜெட் கூட்ட தொடர் தான். எப்பாடு பட்டாவது, பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க வேண்டும். ஜனாதிபதி உரை, ரயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட் ஆகியவை நிறைவேற்றி ஆக வேண்டும்.அவற்றில் எந்த சிக்கலும் வந்து விட கூடாது. ஆகவே தான், தெலுங்கானா விவகாரத்தில், அந்த பகுதி எம்.பி.,க் களை, காங்கிரஸ் தொடர்ந்து சமாதானப்படுத்தி கொண்டே வருகிறது.கடந்த கூட்டத்தொடரில், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரம், பெரிய விவாதமாக இருந்தது. இப்போது ஏராளமான விவகாரங்கள், பார்லிமென்டில் விவாதத்திற்கும், எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கும் தயாராக உள்ள சமயத்தில், தெலுங்கானா விவகாரத்தில் தலையிட, மத்திய அரசு விரும்பவில்லை.
இந்த நேரத்தில், எம்.பி.,க்கள் ராஜினாமா செய்தால், பிரச்னை மேலும் சிக்கலாகும் என்பதால், அவர்களை இழுத்தடித்து வருகிறது.கடந்த ஆண்டு, ஜனவரி மாதம், இதே போல், தெலுங்கானா விவகாரம் தொடர்பாக, ஏழு லோக்சபா எம்.பி.,க்களும், இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்களும், ராஜினாமா கடிதங்களை அளித்தனர். ஆனால், இவர்களது ராஜினாமாவை, சபாநாயகர் மீரா குமாரும், ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியும் ஏற்கவில்லை.அதே போல், இப்போது எழுந்துள்ள நெருக்கடியையும், முடிந்த வரை காலம் தாழ்த்தி சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புது காலக்கெடு இல்லை':
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.