சென்னை :""விஸ்வரூபம் படம் வெளியாகாவிட்டால், என் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லாமல் போனால், வேறு மாநிலத்தில் குடியேறுவேன்,'' என, நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில், நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:விஸ்வரூபம் பட வெளியீட்டிற்கு, தடை நீக்கப்பட்ட பிறகும், தியேட்டர்களில் மறுபடியும் தடுக்கப்படுகிறது. இஸ்லாமியர்களில் பலர், என் ரசிகர்களாக இருக்கின்றனர். படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட, முஸ்லிம்கள் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றனர்.
ஐகோர்ட்டில், நேற்று முன்தினம் வழக்கு நடந்தபோது, "படத்திற்கு செலவிடப்பட்ட 100 கோடி ரூபாய் பணம் தான் முக்கியமா? நாட்டின் ஒற்றுமை முக்கியமில்லையா?' என, நீதிபதி கேட்டுள்ளது, எனக்கு வேதனையை தருகிறது.என் குடும்பம், பணத்தை முக்கியமாக நினைக்கும் குடும்பம் இல்லை. எந்த சூழ்நிலையிலும், என்னால் வாழ முடியும். எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம்; என் சொத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.வெற்றி, தோல்வி இரண்டையும், சமமாக பார்த்து பழக்கமாகி விட்டது. எனக்கு கிடைக்க வேண்டிய நீதி, தாமதமாவது, வருத்தமாக இருக்கிறது.
இப்படத்திற்காக எனது சொத்துக்கள் அனைத்தையும், அடமானம் வைத்துள்ளேன். இத்துடன்,மேலும் கடனும் வாங்கியுள்ளேன். வாங்கிய பணத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், உரியவர்களுக்கு திரும்ப செலுத்தா விட்டால், என் சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள, கையெழுத்துப்போட்டு கொடுத்துள்ளேன். இப்போது, படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னையால், பணம் கொடுத்தவர்கள் சொத்தை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டால், இந்த வீட்டில், நான் நின்று பேசுவது, இதுவே கடைசியாக கூட இருக்கலாம். இதுபோன்ற, இக்கட்டான நிலையை, முன்பே இரு முறை சந்தித்திருக்கிறேன். நான் வரி கட்டாமல் இருந்ததில்லை; எனக்கு தலைக்கனம், திமிர் கிடையாது.
திறமையாலும், துணிச்சலாலும், நல்ல நண்பர்களாலும் சிரமங்களிலிருந்து மீள முடிந்தது. நான் வசதியாக இல்லாத நிலை ஏற்பட்டாலும், சோறு போட ஆட்கள் இருக்கின்றனர். தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லாமல் போனால், காஷ்மீர் முதல் கேரளா வரையுள்ள மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் குடியேறுவேன். அப்படி ஒரு மாநிலம் கிடைக்கவில்லை என்றால், வெளிநாடு சென்று விடுவேன்.நான் எங்கிருந்தாலும் இந்தியனாகவே, தமிழனாகவே இருப்பேன். தமிழ் மக்கள், "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்று சொல்வர். நான் உடலையும் தமிழருக்கு தானமாக கொடுத்திருக்கிறேன். எனக்கு தமிழர்களையும், தமிழையும் ரொம்ப பிடிக்கும்.
நான் தனி மனிதன் என நினைக்க வேண்டாம். நான் விழுந்தாலும் விதையாவேன்; விதை மரமாகும்; மரத்தில் ”தந்திர பறவைகள் வந்து குடியேறும். இதன் மூலம் பெரிய சோலையாக மாறும். நான் தமிழ்நாட்டை வெறுக்கவில்லை. தமிழ்நாடு என்னை வெளியே அனுப்ப விரும்புகிறதா என்று எனக்கு தெரியவில்லை. "விஸ்வரூபம்' படத்தில், ஆப்கானில், அமெரிக்காவில் கதை நடக்கிறது. இது எப்படி இந்திய முஸ்லிம்களை கேலி செய்யும்?எனக்கு அரசியல், மதம் முக்கியமில்லை; மனித நேயம் தான் முக்கியம்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
திருக்குரான் தொடர்பான காட்சிகள் நீக்கம்:
"விஸ்வரூபம் படத்தில் திருக்குரான் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும். முஸ்லிம்களுக்கும், எங்களுக்குமிடையே எந்தவித பிரச்னையும் இல்லை,'' என, கமல்ஹாசன் தெரிவித்தார்.
நடிகர்கள் சிவகுமார், ராதாரவி, பிரசன்னா, சிம்பு, பிரபு, ராம்குமார், சூர்யா, கார்த்திக், நடிகைகள் ராதிகா, குஷ்பு, சினேகா, பூஜாகுமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, ஆரூண், எம்.பி., ஆகியோர் கமலை சந்தித்துப் பேசினர்.கமலின் அலுவலகம் முன் குவித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் மாநிலத் தலைவர் நாசர் உள்ளிட்டோர், கமலை சந்தித்த பின், "நெருடலாகத் தெரியும் படக்காட்சிகளை நீக்கிவிட்டு, படத்தைத் திரையிடுவதாக கமல் தெரிவித்துள்ளார். இதனால், இஸ்லாமிய மக்கள் இப்படம் தொடர்பாக எந்தப் பிரச்னையிலும் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.
இந்த பேச்”வார்த்தை குறித்து கமல் கூறியதாவது:படம் தொடர்பாக, முஸ்லிம்களில் ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அதை நாங்கள் சுமூகமாகப் பேசிவிட்டோம். திருக்குரான் சம்பந்தப்பட்ட காட்சிகள், புண்படுத்தும்படி இருப்பதாகவும், அவற்றை நீக்குமாறும் கூறினர்.அந்தக் காட்சிகள் நீக்கப்படும். இனி எங்களுக்கு இடையே, எந்தவிதப் பிரச்னையுமில்லை. இனி வாக்குவாதத்திற்கு இடமில்லை. முஸ்லிம் மக்கள் இடையே எங்கள் படம் குறித்து வேறுபாடுகள் இல்லை.இவ்வாறு நடிகர் கமல் கூறினார்.
விஸ்வரூபம் படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்திரஹாசன் கூறுகையில், "விஸ்வரூபம் படம் தொடர்பாக, சென்னை, ஐகோர்ட்டில் வரும் புதன்கிழமை அளிக்கப்படும் தீர்ப்பிற்குப் பிறகுதான், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கமல் என்றுமே முசுலீம்களுக்கு எதி்ரானவர் அல்ல. வழக்கமாக இந்துக்களையும் இந்து கடவுளையும்தான் வம்புக்கு இழுப்பார் , ஆனால் அப்போதெல்லாம் இதுபோன்ற பிரச்சினையை அவர் சந்தி்த்தது இல்லை காரணம் இந்துக்கள் சகிப்பத்தன்மை கொண்டவர்கள் ஆனால் அதே போன்று மற்றவரும் இருப்பார்கள் என கமல் நினைத்தது அவரது அறிவின்மை...
இது தவறான பேச்சு வேறு மாநிலம் தேடுவேன் வேறு நாடு தேடுவேன் என்றால் ,ஏன் ஹாலிவுட் படத்தில் நடிக்க கூப்பிட்டு விட்டார்கள் என்ற தைரியத்தில் பேசுகிறாரா ஆனால் தமிழ் மக்கள் அவருக்கு கொடுத்து வைத்துள்ள இடத்தி ஒரு சதவீதம் கூட ஹாலிவுட் ரசிகர்கள் அவருக்கு தர மாட்டார்கள் ,இதற்க்கு எல்லாம் நாட்டை விட்டு போவேன் என்று சொன்னால் நாங்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறோம் விலைவாசி ஏற்றம் ,மிசாரம் இல்லை ,தொழில் நசிந்து போச்சு ,விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் வறட்சி அப்போ நாங்கள் எல்லாம் எங்கே போவது ,என்ன சின்ன புள்ளதனமான பேச்சு இது
கமல் அவர்களின் படைப்புகள் எல்லாம் அற்புதமானவை அதை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒஸ்கார் விருது மட்டுமல்ல பல விருதுகள் வாங்கிய கலைமான் அவர். இனியும் அவருக்கு விருதுகள் குவியும் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் ஒரு இஸ்லாம் சம்மந்தப்பட்டது அல்லது திருக்குர்ஆன் வசனம் சேர்ப்பது என்று வரும் பொழுது அதை நன்றாக ஆராய்ந்து திருக்குர்ஆன் வசனதைப்புரிந்து உண்மையை உரைத்தால் நல்லது திருக்குர்ஆன் வசனங்களில் முன்னதையும் பின்னதையும் விட்டுவிட்டு நடுவில் உள்ள எந்த ஒரு வசனத்தையும் எடுத்தால் அர்த்தம் மாறிவிடும் அதைத்தான் சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எடுத்துக்கொள்கின்றனர் அதன் விளைவு தான் முஸ்லிம்களின் மனம் புன்ப்படும்படியாகின்றது. மேலும் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகிய விஜய் படத்தில் ஒரு காட்சி இராக்கில் நடந்த கொலையை போல் காட்டியிருந்தார்கள். ஒரு மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் செய்த கொடுமைக்கு நாம் என்ன சொன்னோம் அந்த 6 போரையும் நாடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் கொடூரமாக கொல்ல வேண்டும். அப்பொழுது தான் அடுத்தவன் இந்த மாதிரி ஈன காரியத்தை செய்ய யோசிக்கவும் பயப்படுவான். அதை நானும் 100% ஆமோதிக்கிறேன். அப்படியிருக்கும் பொழுது இராக்கில் அமெரிக்கர்கள் செய்த அட்டுழியம் கொஞ்சநஞ்சமல்ல. எதற்காக போர் தொடுத்தார்கள்? இரசாயன ஆயுதங்களை எடுத்தார்களா? அணு ஆயுத உலைகளை கண்டெடுத்தார்களா? போதை தயாரிப்புகளை கண்டெடுத்தார்களா? பின் எதற்கு அந்த நாட்டின் மேல் போர் செய்து நாட்டையே சூறையாடினார்கள் கொள்ளையடித்தார்கள்? பெண்களை சூறையாடி படம் பிடித்து இணையதளத்தில் விட்டார்கள். இப்படிப்பட்டவர்களை கொலை செய்தது தீவிரவாதம் என்று அமெரிக்கா சித்தரித்தது. தசாவதாரத்தில் கமல் அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக கதை கருவை உருவாக்கினார் அந்த தைரியம் கண்டு பூரிப்படைகிறேன் பாராட்டுகிறேன். இல்லாத ஒன்றை ஒன்றும் கமலஹாசன் புதிதாக சித்தரித்து அமெரிக்காவிற்கு எதிராக தசாவதாரத்தில் சொல்லவில்லை. அமெரிக்காவின் குள்ளநரித்தனம் உலகம் அறியும். ஆனால் சொல்வதற்கு தைரியம் வேண்டும் அந்த கமல் அவர்களிடம் நிறையவே உண்டு. விஸ்வரூபம் எல்லா பிரச்சினைகளையும் சுமுகமாய் முடித்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
நூறு கோடி முக்கியமா ? தேச நலம் முக்கியமா ? என்ற நீதிபதியின் கேள்விக்கு தேச நலம் முக்கியம் வீடு போனால் போகட்டும் என சொன்ன சுயநலன் கருதாத கமல் அறையியலில் இடுபட்டு தமிழ் நாட்டை திராவிட கட்சிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். காமராஜருக்கு பிறகு நல்ல தலைவனை தமிழ் நாடு பெற வில்லை, வந்தவர்கள் கொள்ளை அடிப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள், அறிந்தோ அறியாமலோ ஜெயலலிதாவால் வலிய வந்த வாயுப்பை கமல் அவர்கள் நழுவ விட கூடாது உங்கள் நலனில் அக்கறை கொண்ட தமிழ் சமுதாயத்திருக்கு செலுத்தும் நன்றி கடனாக எடுத்து கொள்ளுங்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.