திருநெல்வேலி: விவசாயிகளின் கொந்தளிப்பு எரிமலையாக வெடிக்கும் என்று நெல்லையில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை சாவை தடுக்க கோரியும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும் மதிமுக சார்பில் நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன் நேற்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தலைமை வகித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:தமிழகத்தில் கடுமையான வறட்சி, பஞ்சத்தால் பண்டிகை நாட்களை கூட கொண்டாட முடியாமல் விவசாயிகள் உள்ளனர். விவசாய நிலங்கள் கட்டடங்களாக மாற்றப்பட்டு வருகிறது. கிராம மக்கள் பிழைப்பு தேடி நகர்ப்புற பகுதிகளுக்கு செல்கின்றனர். விவசாய நிலங்கள் தரிசாக காணப்படுவதால் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.தமிழகத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களும் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கை தர மறுக்கின்றன. இப்பிரச்னைகளில் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.தொடர் வறட்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதுவரை 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கை போலீசார் வறட்சியை காரணம் காட்டாமல் வேறு காரணங்களை காட்டி பதிவு செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கதக்கது. தொடர்ந்து இவ்வாறு அதிகாரிகள் செய்தால் மீண்டும் இப்பிரச்னை தொடர்பாக போராட்டங்களை நடத்துவோம்.தற்போது விவசாயிகள் மனம் வெதும்பி மிகவும் பரிதாபமாக காணப்படுகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த கட்சியும் குரல் கொடுக்காத நிலையில் நாங்கள் அவர்களின் கண்ணீரை துடைக்க கவலைகளை தீர்க்க போராட்டங்களை நடத்தி அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்.வறட்சியால் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மனிதாபிமானத்துடன் நடவடிக்கை மேற்கொண்டு தலா 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்க வேண்டும். பயிர் செய்து அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பயிரிடப்படாமல் தரிசாக காணப்படும் நிலங்களுக்கு ஏக்கருககு 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். இந்த நிதி உதவியை அளித்து விவசாயிகளை காப்பாற்ற அரசு முன் வர வேண்டும்.விவசாயிகளுக்கு பொட்டாஷ், டி.ஏ.பி, காம்பளக்ஸ் உரங்கள் மூன்று மடங்கிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் உர நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் தொடர்ந்து லாபம் ஏற்பட்டு வருகிறது.விவசாயிகளின் கண்ணீர் யாரையும் சும்மா விடாது. அனைவரையும் விரைவில் சுட்டு எரிக்கும். ஒட்டுமொத்தமாக விவசாயிகள் எழுந்தால் அந்த சக்தியை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. விவசாயிகளின் கொந்தளிப்பு எரிமலையாக வெடிக்கும். மது, இலவச திட்டங்களால் தமிழகம் தொடர்ந்து பாழாகி வருகிறது. விரைவில் இருண்ட காலம் மாறும். வெளிச்சம் வரும். நேர்மையான செயல்படும் நாங்கள் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக பாடுபடுவோம்.விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து துரோகம் செய்து விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. தமிழக அரசு மனித நேயத்துடன் செயல்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.மாவட்ட செயலாளர்கள் பெருமாள், சரவணன், ஜோயல் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் நாசரேத் துரை, நிர்வாகிகள் டாக்டர் சதன் திருமலைக்குமார், நிஜாம், குட்டி என்ற சண்முக சிதம்பரம், ராஜேந்திரன், பழனிச்சாமி, சுப்பையா, முகம்மது அலி, கல்லத்தியான், வக்கீல் அமல்ராஜ், வக்கீல் சுதர்சன், லாலாமணி, நக்கீரன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பபட்டன. போராட்டத்தின் போது வறட்சியால் பாதிக்கப்பட்டு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் பலர் குவிந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.