திருத்தணி : போதிய மழை இல்லாதது, மின்தடை மற்றும் கரும்பு விளைச்சல் குறைவு ஆகிய காரணங்களால், ஆலை நிர்வாகம் நிர்ணயித்த, 4.50 லட்சம் டன் கரும்பு அரவை இலக்கை விட, ஒன்றரை லட்சம் டன்னை ஆலை நிர்வாகம் குறைத்து உள்ளது.
கடந்த ஆண்டை போல், இந்தாண்டும், உரிய இலக்கை எட்ட முடியாமல் நிர்வாகம் திணறி வருகிறது.
திருவாலங்காட்டில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, 278 நிரந்தர தொழிலாளர்கள், 21 அலுவலக ஊழியர்கள், 220 தினக்கூலி ஊழியர்கள் என, மொத்தம், 500 பேர் வேலை செய்து வருகின்றனர்.
2,500 டன் கரும்பு அரைப்பு
இந்த ஆலைக்கு திருத்தணி, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, சாலை அரக்கோணம், கனகம்மாசத்திரம் மற்றும் திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் இருந்து, 35 ஆயிரம் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்புகளை கொண்டு வருகின்றனர். இதில், 15 ஆயிரம் விவசாயிகள் ஆலையின் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
ஆலையில் உள்ள இயந்திரங்கள் நாள் ஒன்றுக்கு, 2,300 டன் முதல், 2,500 டன் கரும்பு வரை அரைக்கும் திறன் கொண்டவை.
இயந்திரத்தில் அடிக்கடி ஏற்படும் கோளாறு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக, தற்போது நாள் ஒன்றுக்கு, 2,000 முதல், 2,200 டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது. ஒரு டன் கரும்புக்கு, 2,250 ரூபாய் வழங்கப்படுகிறது.
பயிருக்கு கடன்
இதுதவிர, கரும்பு வெட்டுவதற்கு ஆலை நிர்வாகம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர மாநிலம் நெல்லூர், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இருந்து, கூலி ஆட்களை வரவழைத்து தேவைப்படும் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கிறது.
கரும்பு வெட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் முன்பணம், கரும்பு பயிரிடுவதற்கு, வங்கிகள் மூலம் கடனுதவி மற்றும் தேவையான உரங்கள் ஆகியவையும் ஆலை நிர்வாகம் வழங்குகிறது.
அரவை பருவம்
கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கடந்த ஆண்டு அக்.,22ம் தேதி கரும்பு அரவை துவங்கியது. 3 ஷிப்ட்டுகள் மூலம், கரும்பு அரவை செய்யப்படுகிறது. இந்தாண்டு, 4.50 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய ஆலைய நிர்வாகம் இலக்கு நிர்ணயித்தது. ஆனால், போதிய பருவமழை, மின்தடை மற்றும் கரும்பின் ஈரப்பதம் குறைவு மற்றும் விளைச்சல் குறைவால், நிர்ணயித்த இலக்கு எட்ட முடியுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
வரும் ஏப்ரல் மாதம், முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கரும்பு அரவை நிறுத்தப்படும்.
இலக்கு குறைப்பு
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பருவ மழை இல்லாததாலும், அடிக்கடி ஏற்படும் மின்தடையாலும் கரும்பு பயிருக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சாமல், அதன் ஈரப்பதம் குறைந்து உள்ளது. சில விவசாயிகளின் கிணறுகளில் தண்ணீர் வற்றியதால் கரும்பு பயிர் செய்யவில்லை.
சில விவசாயிகளிடம், விஷமிகள் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஓட்டினால், உரிய நேரத்தில் பணம் கிடைக்காது, சரியான நேரத்தில் கரும்பு வெட்டுதற்கு ஆர்டர் தரமாட்டார்கள் என, வீண் வதந்திகளை பரப்பிவிட்டு, பள்ளிப்பட்டு அருகே உள்ள ஆந்திர மாநில தனியார் சர்க்கரை ஆலை, காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் ஆலைக்கு ஓட்டுவதற்கு மறைமுகமாக செயல்படுகின்றனர்.
மேற்கண்ட காரணத்தால், இந்தாண்டு நிர்ணயித்த கரும்பு அரவையின் இலக்கு குறைந்து, தற்போது, 3 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிட்டு உள்ளோம். தற்போது, 1.68 லட்சம் டன் கரும்பு தான் அரவை செய்து உள்ளோம்.
மீதமுள்ள கரும்பு அரவையை, ஏப்ரல் முதல் வாரத்திற்குள் அரைத்து முடிக்க வேண்டும் என, உறுதியாக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.