மதுரை :""என் நண்பனாகவும், விசுவாசியாகவும் இருந்தவரை இழந்துவிட்டேன்,'' என, மதுரையில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், "பொட்டு' சுரேஷ் கொலையான சம்பவம் குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி உருக்கமாக கூறினார்.
மத்திய அமைச்சர் அழகிரிக்கு, மிக நெருக்கமானவராக வலம் வந்த, "பொட்டு' சுரேஷை, மர்ம கும்பல் நேற்று முன்தினம் இரவு, மதுரையில் வெட்டி கொலை செய்தது. சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடன், சென்னையில் இருந்து மதுரை திரும்பிய அழகிரியுடன், அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதி ஆகியோர் வந்து, சுரேஷின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, அழகிரி கண் கலங்கினார். காந்தி, கண்ணீர் விட்டு அழுதார்.பத்து நிமிடங்கள், "பொட்டு' சுரேஷ் வீட்டில் இருந்த அவர்கள், பின் கிளம்பினர். "பொட்டு' சுரேஷ் கொலை சம்பவம் தொடர்பாக அழகிரியின் கருத்தை கேட்க, நிருபர்கள் அவரை பின் தொடர்ந்தும், பேசுவதை தவிர்த்தார். காரில் கிளம்பும் போது, நிருபர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டதால், தவிர்க்க முடியாத அழகிரி, காரில் இருந்தவாறே நிருபர்களிடம் பேசினார்.""என் நண்பனும், விசுவாசியுமாக இருந்தவரை இழந்துவிட்டேன். கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்,'' என்று கூறிவிட்டு, அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் கூறாமல் கிளம்பி சென்றார்.
சாபமிட்ட உறவினர்கள்:
"பொட்டு' சுரேஷின் உடல் அருகே அழகிரி வந்தவுடன், "பொட்டு' சுரேஷ் மனைவி ரோகிணி மீனாள் மற்றும் உறவினர்கள் அழகிரியை பார்த்து, கதறினர். அவர்கள் கதறிய நிலையில் கூறியதாவது:அண்ணன் கூட நின்னு போட்டோ கூட எடுக்க மாட்டீங்களே; அவரு வந்துருக்காரு பாருங்க. உன்ன யாரு கொலை செஞ்சாங்க... கடவுள் இருந்தா அந்த ஐந்து பேரை சும்மா விடக்கூடாது. ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொன்னீங்களே... அண்ணனிடம் சொல்லணும்னு எங்கிட்ட சொன்னீங்களே! படுபாவிங்க அதுக்குள்ள முடிச்சுட்டாங்களே...இவ்வாறு, கண்ணீர் விட்டு கதறினர்.கீரைத்துறை மின் மயானத்தில் "பொட்டு' சுரேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது. அங்கும் அழகிரி, தயாநிதி பங்கேற்றனர்.
37 இடங்களில் காயம்:
மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின், "பொட்டு' சுரேஷின் உடல், நேற்று காலை, 11:30 மணிக்கு, அவரது அண்ணன் அசோக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த சுரேஷின் உடலில், 37 இடங்களில், குறிப்பாக பின்பகுதியில், அதிகமான வெட்டு விழுந்திருந்தது. தலையில் பின்பகுதி வெட்டப்பட்டு, சிறுமூளை சேதமடைந்திருந்தது.
"அட்டாக்' பாண்டியை தேடும் போலீஸ் ;வெட்டு வாங்கிய கொலையாளி எங்கே?"பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில், முன்னாள் வேளாண் விற்பனை குழுத் தலைவர், "அட்டாக்' பாண்டியின் ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில், நேரடி சாட்சியான கார் ஓட்டுனர் மணிகண்டனிடம், கொலையாளிகள் குறித்து விசாரணை நடக்கிறது.கொலை நடந்த உடனே, எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என, போலீஸ் கேட்ட போது, ""உயிர் பயத்தில் காருக்குள்ளேயே பதுங்கிக் கொண்டேன்; அதனால் தான் தகவல் சொல்ல முடியவில்லை'' என, மணிகண்டன் தெரிவித்துள்ளார். இருப்பினும், இவரிடம் விசாரணை நடக்கிறது.
அடையாளம் தெரிந்தது:
கொலை நடந்த பகுதியில், தெருவில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், கொலையாளிகளின் உருவம் மற்றும் அவர்கள் வந்த, "டாடா ஏஸ்' வாகன பதிவெண் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், சந்தேகத்தின் அடிப்படையில், அழகிரிக்கு, முன் நெருக்கமாக இருந்த, முன்னாள் வேளாண் விற்பனை குழுத் தலைவர், "அட்டாக்' பாண்டியையும், அவரது ஆதரவாளர்களான, மதுரை கீரைத்துறையை சேர்ந்த, சபா, கல்லூரி மாணவர் நெல்சன், ராஜபாண்டி, சந்தானம், புதூர் ராபர்ட் போன்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். "பொட்டு' சுரேஷை வெட்டும் போது, கொலையாளிகளில் ஒருவராக சந்தேகிக்கப்படும் சந்தானத்திற்கு கையில் தவறுதலாக வெட்டு விழுந்தது. அதோடு, சிந்தாமணி ரோடு ரயில்வே கேட் அருகேயுள்ள தன் வீட்டிற்கு, ரத்தம் சொட்ட சொட்ட சந்தானம் வந்ததை, அங்கிருந்த ரத்தகறையை வைத்து போலீசார் உறுதி செய்தனர். சில ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்."கொலையாளிகள் ஒரு வாரம், "பொட்டு' சுரேஷின் நடவடிக்கைகளை கண்காணித்து, இக்கொலையை செய்திருக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கழக கண்மணிகளின் பெயர்களை பாருங்கள்... பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, புல்லட் ராஜா ...இவர்களெல்லாம் திமுக அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் கூட இருந்துள்ளனர். இவர்களை என் நண்பனாகவும், விசுவாசியாகவும் இருந்தவரை இழந்துவிட்டேன் , இவர் எல்லாம் மத்திய அமைச்சர். வெக்ககேடு .இப்போது இரண்டு நாட்களாக கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்ததாக கேள்விபட்டேன். " பொட்டு " இறந்ததுக்கு வருத்தம் தெரிவித்து ( எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் )மதுரையில் ஒரு போஸ்டர் கூட ஒட்டப்படவில்லை என்றும் கேள்விப்பட்டேன். திமுகவில் த கிருஷ்ணன், ஆலடி அருணா, ராமஜெயம், பொட்டு இப்படி அகால மரணங்கள் தொடர் கதையாக தொடருகின்றன. ரவுடிகளை வளர்த்து விடுவது கழக குடும்பத்தின் கை வந்த கலை.ஒரு ரௌடியை என் நண்பன் என்கிறார் ஒரு அமைச்சர் ,. மதுரை மக்கள் சிந்திக்க வேண்டும். .
ஒரு ரௌடியை தனது நண்பன் என்று பறை சாற்றுபவன் எப்படி இருப்பான்? நண்பனை சொல் உன்னை சொல்கிறேன் என்று பழமொழி உண்டு. இவரை போன்றோரை மத்திய அமைச்சராக வைத்திருக்கும் மன்மோகன் இது பற்றியாவது கரிசனம் கொள்வாரா? அல்லது வழக்கம் போல் கருணாநிதி மிரட்டலுக்கு அடி பணிவாரா? எல்லாம் காலத்தின் கோலம்? மக்கள் தமது விதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.எவளவு பணம் சம்பாதித்தாலும் போகும்போது ஒரு நயா பைசாவை கூட எடுத்து செல்ல முடியாது. பணத்தை மற்றுமே குறிக்கோளாக கொண்டு செயல் படுவோர் சிந்திக்க
ஒருவர் நல்லவரோ, கேட்டவரோ.. இறந்தவரை பற்றி பேச மனமில்லை. அவர் உடலைக் கண்டு அழகிரி அவர்கள் கண்கலங்கியதும், அவர் மனைவி அழுததும், சுரேஷ் அவர்கள் அழகிரி குடும்பத்துடன் எந்த அளவிற்கு இணைந்திருந்தார் என்பதற்கான சாட்சி... மக்களுக்கு நல்லது செய்தீர்களோ அல்லவோ, அந்த குடும்பத்திற்கு ஏதோ நல்லது செய்துள்ளீர்கள்... அதனால்தான் வந்தது கண்ணீர்...
ஹார்லிக்ஸ் ரொம்ப கெட்டியாப் போனாலும் ஆபத்துதான் .... அதைக் கரைத்துக் குடிக்க கத்தி போடுவார்கள் .... அதனால ஹார்லிக்ஸ் கொஞ்சநாள் பார்லிமெண்டு வாசல்லயே உட்கார்ந்துகிடுறது / படுத்துக்கிடுறது நல்லது.... யாராவது கேட்டா "மக்கள் நலனை முன்னிட்டு" -ன்னு தமிழ்-லையே சொல்லிக்கலாம். ஹிந்திக்காரனுக்குப் புரியாட்டி அது அவனோட தப்பு

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.