இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.
கட்டாய கல்விச் சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை, 12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது.
ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில், இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ஜூன் மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது.
புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.