ஆள்மாறாட்டம் செய்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய குற்றத்திற்காக, புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்திற்கு, இரண்டு வழக்குகளில் தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அரசியல், கல்வித் துறை வட்டாரங்களில் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த குற்றச்சாட்டும், அதன் மீதான தீர்ப்பும்."அரசியல்வாதிகள் தவறு செய்வர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவர்' என்பதை ஏற்றுக் கொண்ட பிரிவினர் கூட, இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியாமல் விழிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, முன்னாள் கல்வியமைச்சர்கள் மூவரின் கருத்துக்கள்...
தங்கம் தென்னரசு,முன்னாள் கல்வி அமைச்சர் (தி.மு.க.,)
கல்வி முறையில் அரசு வகுத்துள்ள அமைப்புகள் மீது, அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடக்கும், எந்த செயலையும் ஆதரிக்க முடியாது. இதுபோன்ற ஒரு செயலைத் தான், புதுவை கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் செய்துள்ளார்.துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என்ற கல்வி அமைப்பை வகுத்து, நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதில், குறைந்தபட்சம் மதிப்பெண் எடுத்தால் தான், மேல் வகுப்புக்கு போக முடியும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால், தேர்வுகளை என் விருப்பம் போல் பயன்படுத்தி, பட்டங்களை வாங்கிக்கொள்வேன் என, ஒருவர் நினைத்தால், அது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்ப்பதாகும்.
எனவே, புதுவை கல்வி அமைச்சராக இருந்த, கல்யாண சுந்தரம் செய்தது கொடுஞ்செயல். அவர் செய்ய முயன்ற தவறு, சமூகத்தின் மீது நடத்திய தாக்குதல்.அமைச்சராக இருப்பவர், நேர்மையாக இருக்க வேண்டும். மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும் என்பது தான், முக்கியமே தவிர, கல்வியாளராக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.தமிழகத்தின் கல்வி கண்ணை திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என, போற்றுகிறோம். ஆனால், அவர் கல்லாதவர். அவருக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரிந்ததால், மக்கள் பணியாற்றினார். இதற்கு நேர் எதிரானது கல்யாண சுந்தரத்தின் செயல்.
அரங்கநாயகம்,முன்னாள் கல்வி அமைச்சர் (தி.மு.க.,)
கல்வி என்பது அவசியமான ஒன்று தான். ஆனால், படித்தவர்கள் மட்டுமே அமைச்சராக இருக்க முடியும் என்ற சட்டம் எதுவுமில்லை. காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., போன்றவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள். படிக்கவில்லை என்பதால், இவர்களின் மக்கள் பணி என்றும் பாதித்ததில்லை.புதுவை கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஆள் மாறாட்டம் செய்து எழுதியது, மன்னிக்க முடியாத குற்றம். இதுபோன்ற குற்றத்தை செய்து, 10ம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயம், அவருக்கு ஏன் எழுந்தது என்பதும் தெரியவில்லை.பொதுத் தேர்வுகளில், இதுபோல துணிந்து குற்றம் செய்வதற்கு, சாதாரண மனிதனுக்கு தைரியம் வராது. அதிகாரத்தில் இருக்கிறோம். நம்மை யார் என்ன செய்து விடுவார்கள் என்ற தைரியத்தில், கல்வி அமைச்சராக இருப்பவர், தவறு செய்ய துணிந்துள்ளார்.இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதன் மூலம், எம்.எல்.ஏ.,வாக தொடரும் தகுதியையும், கல்யாணசுந்தரம் இழந்து விடுவார். அவருக்கு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகப்பெரிய திருப்பு முனையை, அரசியலில் ஏற்படுத்த வேண்டும்.மனசாட்சியுடன், அதிகாரத்தை பயன்படுத்தி, மக்கள் நலனை மேம்படுத்த, அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்ற அறைகூவல் இத்தீர்ப்பின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
காந்திராஜ்,புதுவை முன்னாள் கல்வி அமைச்சர் (காங்கிரஸ்)
தனி மனிதன் ஒருவன் செய்யும் தவறுக்கு, அமைப்புகள் பலியாகாது. இதுபோலதான், முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் செய்த தவறால், கல்வித் துறை மீது, மக்கள் நம்பிக்கை இழந்து விட மாட்டார்கள்.அமைச்சராக இருந்துகொண்டு, தவறு செய்ய முயன்று, கல்யாண”ந்தரம் பிடிபட்டுள்ளார். அவர் மீது, கோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சராக இருந்தவர், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவது முறையற்றது; ஏற்கவும் முடியாது.இதேநேரத்தில், இதுபோன்ற குற்றங்கள் நிகழும்போது தான், அமைப்பு ரீதியான சீரமைப்புகளுக்கு நாம் தயாராகிறோம்.அரசியலில் கிரிமினல்கள் அதிகரித்து விட்டனர் என்கிறபோது, தேர்தல் சீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்கிறோம். டில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு மாணவி ஆளானார் என்பதால், பெண்களை பாதுகாக்கவும், வன்கொடுமைகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தண்டனைகள் குறித்து, குழு அமைத்து பரிந்துரைகள் பெறப்படுகிறது.அதேபோல, கல்யாணசுந்தரம் செய்த தவறினால், கல்வி அமைப்பை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகிறது.இந்த வரிசையில், முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரமும், கல்வித் துறையில் செய்ய வேண்டிய மாறுதல்களுக்கு, ஒரு முன் உதாரணமாகி இருக்கிறார். அவர் ஒருவர் செய்த தவறால், கல்வித் துறைக்கு களங்கம் ஏற்படாது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கல்வி அறிவு உள்ளதோ இல்லையோ பொது அறிவு இருந்த போதுமப்பா. தொழில் அமைச்சர் இன்ஜினியரிங் படிசிருக்கனுமா? அவர் என்ன ராக்கெட் விட போறார? ஒரு கம்பெனி ய நிர்வகிக்கறவர் என்ன டெக்னாலஜி இன்ஜினியரிங் அக்கவுண்ட்ஸ் என்று எல்லா பாடத்தையும் படிச்சிட்டு வந்து தா கம்பெனி ஆரம்பிகிறாரா என்ன? நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எங்கு இருந்தாலும் நல்லது தான் செய்வார்கள்
ஒம்பதாம் கிளாசே தாண்டாதவர் ஐந்து முறை முதன்மந்திர்ரியகவில்லையா? பிறகு உதயாகுமாரை போட்டுத் தள்ளிவிட்டு பற்பல டாக்டர் பட்டம் பெறவில்லையா? தன குடும்ப நலனுக்காக நடித்து சம்பாதித்த திறமைக்க்காக மெட்ரிக்குலேஷன் மட்டுமே படித்த ஒரு முதல்வருக்கு சென்னைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் தரவில்லையா? கல்யாணப் பத்திரிக்கையில் தன்னை ஒரு பட்டதாரி எனப் போட்டுக் கொள்ளத் தெரிந்த கல்யாண சுந்தரத்துக்கு இந்தக் குறுக்கு வழி தெரியாம போச்சே
நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது, என்றுமே இனி நாம் காமராஜரை போல் ஒரு அரசியல் வாதியும் காண முடியவும் இல்லை, இனியாவது ஒரு எம் எல் ஏ அல்லது மந்திரி ஆவதர்ற்கு ஒரு குறிப்பிட்ட வரைமுறை தகுதியை நிர்ணயுங்கள், எதற்கு எல்லாமோ மேலை நாடு கலாச்சாரம் வேண்டும் என்பவர்கள் இதற்க்கு ஏன் இதுவரை முடிவு இல்லை, ஒரு முறை கூட பார்லிமெண்டில், சட்டசபையில் பேச தெரியவில்லை என்ற மந்திரிகள், எம் எல் ஏ -க்கள் எதற்கு, மாதம் தோறும் அரசாங்கம் தரும் சம்பளம், இதர இலவச சொகுசுகளை ஒன்றும் செய்யாமல் ஏன் அனுபவிக்கவேண்டும், இவர்களுக்கு தான் மனசாட்சி இல்லை, படித்த பண்புள்ளவர்கள் ஏன் இந்த விளங்காத உதவாக்கரை அரசியல் சட்டத்தை மாற்றகூடாது? ஒன்றும் புரியவில்லை எப்படி இந்தியா ஒளிர்கிறது என்கிறார்கள், அல்லது இன்னும் 7 வருடத்தில் எப்படி அப்துல்கலாம் கனவு நிறைவேறும்?
தங்கம் தென்னரசு, அரங்கநாயகம் மற்றும் காந்திராஜ் பொதுவான கருத்தையே கூறியுள்ளனர். தங்கம் தென்னரசு, அமைச்சராக இருப்பவர், நேர்மையாக இருக்க வேண்டும். மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும் என்பது தான், முக்கியமே தவிர, கல்வியாளராக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை என்று கூறியுள்ளார். நேர்மை என்பது SUBJECTIVE. அது மனிதனுக்கு மனிதன் வேறுபாடும். லால் பகதூர் சாஸ்திரிக்கு எங்கோ நடந்த ரயில் விபத்துக்கு தான் பொறுப்பு ஏற்று ரயில்வே மந்திரி பதவியை ராஜினமா செய்ய முன் வந்தார். இது ஒரு பக்கம் இன்னொருபக்கம், கொடுஞ்செயல் புரிந்துவிட்டு கூட நேர்மையானவன் என்று வாதிடலாம். இதற்கு ஒரு அளவுகோல் இல்லை. பொட்டு சுரேஷை பொட்டுன்னு போட்டு தள்ளிட்டு அருவாளை கழுவியபடியே எங்களுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை, நாங்கள் அம்புதான்.....திராணி இருந்தா வில்ல புடிங்க, நாங்க நிரபராதி தான்....எனவே எங்கள் தரப்பில் நியாயம் இருக்குன்னு சொல்ற கலிகாலம் இது.
சிங்கப்பூரில் செக்யூரிட்டி முதல் சூப்பர்வைசர், மேளாலர்வரை அதற்குகான பயிற்சி பள்ளிகளில் கலந்து கொண்டுதான் பணியாற்ற முடியும், அவ்வளவு ஏன் வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு கூட படிப்பு மற்றும் பயிற்சிகள் உள்ளது அதுவும் ஒரு கல்வி தகுதிதான் ,,,,,ஆனால் நம் நாட்டில் மட்டும் தான் நாட்டை ஆள்பவர்களுக்கு எந்த கல்வி தகுதியும் இல்லை, அனுபவமும் இல்லை,,, சின்ன வயசுல பல்லு துலக்கிட்டு தான் காபி குடிக்கனும் ன்னு எங்க அப்பா சொல்வாங்க, எங்க பாட்டி சொல்லுவாங்க ஆடு மாடு எல்லாம் பல்லு துலக்கிட்டு தான் இருக்கா, இல்ல அதுங்க எல்லாம் ட்ரஸ் போட்டு கிட்டு தான் இருக்கான்னு அது போல தான் இருக்கு இவங்க பேட்டி,,,,,,

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.