பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைக்கும் விதமாக, அறிமுகம் செய்யப்பட்ட, தத்தெடுக்கும் திட்டத்தால், நடப்பு கல்வியாண்டில், இரு பொதுத்தேர்விலும் தோல்வியடைபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியுள்ளது. பல மாணவர்களை தத்தெடுத்த ஆசிரியர்கள் அவர்களை, தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைத்து, கல்வி போதித்து வருகின்றனர்.
திட்டங்கள் மற்றும் அதிக நிதியால் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது என்பதை உணர்ந்த, தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஜூன் மாதம், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது.அதுதான், தத்தெடுக்கும் திட்டம். இத்திட்டத்தின் மூலம் கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை (வீக் ஸ்டூடன்ஸ்), பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பிரித்து, "தத்து' எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அந்த மாணவர் தேர்ச்சி பெற வைக்கும் பொறுப்பு, தத்தெடுத்த ஆசிரியர்களை
சார்ந்ததாகும். சில மாதங்களுக்கு முன் நடந்த காலண்டு தேர்வு மூலம், கற்றல்
திறன் குறைவாக உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அப்படி கண்டறியப்பட்ட,
பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்பு மாணவர்கள், அந்தந்த பள்ளி ஆசிரியர்களின்
பொறுப்பில் சரிவிகிதமாக பிரிக்கப்பட்டு, தத்து கொடுக்கப்பட்டனர். அந்த
மாணவர்கள் மீது, பொறுப்பேற்ற ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதன்மூலம் நடந்த அரையாண்டு தேர்வில், கற்றல் திறன் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கைவெகுவாக குறைந்துள்ளது. ஆயினும் பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறமுடியாத அளவுக்கு, கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆகையால், விரைவில் பொதுத்தேர்வு வரவுள்ள நிலையில், "தத்தெடுப்பு' திட்டத்தை ஆசிரியர்கள் மத்தியில் கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.அதன்படி தத்து கொடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களை பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவைக்கும் பொறுப்பும், அவர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. பல
Advertisement
மாணவர்களை தத்தெடுத்த ஆசிரியர்கள் அவர்களை, தீவிர கண்காணிப்பு வளையத்தில்
வைத்து, கல்வி போதித்து வருகின்றனர்.ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள்
அடிக்கடி தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்தி வருகின்றனர். ஆகையால் இந்த ஆண்டு,
பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட
வெகுவாக குறையும் சூழல் உருவாகியுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் தனிக்கவனம் : முதல்வர்ஜெயலலிதாவின், ஸ்ரீரங்கம் தொகுதியில், தத்தெடுப்பு திட்டத்தை தீவிரப்படுத்தி, தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற வேண்டும் என்பதற்காக, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.இதற்காக தொகுதியில் உள்ள தத்து திட்ட ஆசிரியர்களுடன், கல்வித்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். முதல்வரின் தொகுதி என்பதால், பள்ளிக்கல்வித்துறை, இங்கு, 100 சதவீத தேர்ச்சியை கொண்டு வரவேண்டும் என, கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -