விழாக்களில், முதல்வர் ஜெயலலிதா பேசினால், அதில் ஒரு குட்டிக்கதை, தவறாமல் இடம்பெற்று விடும். சட்டசபையில் பேசும்போதும், குட்டிக் கதைகளை கூறுவார். கதையின் மூலம், கருத்தை விளக்கினால், அது மக்களை கவரும் என்பதால், இந்த பாணியை, அவர் கடைபிடித்து வருகிறார்.
அவரது பாணியை, அப்படியே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அவர் கூறியதாவது:
கதை கேட்டு சிரித்த முதல்வர் :
ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், தமிழகத்தில் இருந்து, டில்லி சென்று கொண்டிருக்கிறது. அதில் சென்ற, ஒரு குரூப், வழியில், ஒரு ஸ்டேஷனில், தவறி இறங்கிவிட்டது. "குரூப் கேப்டன்' நிதானம் இல்லாமல், கூட வந்தவர்களின் தலையை தட்டுகிறார்; நாக்கை துருத்தி, கடிக்கிறார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று, அடுத்த ரயில் எப்போது வரும் என கேட்க, "மாலை 6:00 மணிக்கு வரும்' என்கிறார்.
"அப்படியா' என கேட்டுவிட்டு, பக்கத்தில் ஒரு, "ரவுண்டு' போய் வருகிறார். இப்படியே, ஐந்து ரவுண்டு போகிறது. மீண்டும், ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்க, "இனிமே, இரவு 9:00 மணிக்கு, கூட்ஸ் ரயில் தான் வரும். ஆமாம்... நீங்க, எங்க தான் போகணும்?' என, ஸ்டேஷன் மாஸ்டர் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு, "தண்டவாளத்தை, கடக்க வேண்டும்' என, கேப்டன் கூற, "அட... கொடுமையே...' என, ஸ்டேஷன் மாஸ்டர் தலையில் அடித்துக் கொண்டார். இந்த களேபரத்தில், 29 பேரில், 4 பேரை காணாமல் தேட, அவர்களோ, எக்ஸ்பிரஸ் ரயிலில், புத்திசாலித்தனமாக பயணிப்பது, பின்னர் தெரிந்தது. நாக்கில் வந்ததை எல்லாம், மைக்கில் பேசி வரும் நாக்கு கடி நாராயணன், கோர்ட்டுகளுக்கு நடையாய் நடக்கிறார்.
நிருபர்கள், வாய் வழியே கேள்வி கேட்டால், கை வழியே பதில் சொல்லும் பழக்கத்தை கொண்ட, வைகை கரை வாத்து, முன் ஜாமினுக்கு, முண்டி அடிக்கிறது. என்னதான் முண்டி அடித்தாலும், அது போய் சேரும் இடம், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது. அவரை நினைக்கும்போது, "உன்னைப் பார்த்து, இந்த உலகம் சிரிக்கிறது; உன்னைப் பார்த்து, உன் நிழலும் வெறுக்கிறது' என்ற எம்.ஜி.ஆர்., பாடல் தான், நினைவுக்கு வருகிறது,என,எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்தை நக்கலடித்துப்பேசி விஜயபாஸ்கர், கதை கூறினார். இந்த கதையை கேட்டு, முதல்வர் ஜெயலலிதா, சிரித்துக்கொண்டே இருந்தார். இதனால், மீதமுள்ள நாட்களிலும், பட்ஜெட் கூட்டத் தொடர்களிலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், பல குட்டிக் கதைகளுடன், சட்டசபைக்கு வருவர் என்பது உறுதியாகிவிட்டது .-நமது நிருபர்-
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், "தர்ணா' : சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சி, எம்.எல்.ஏ.,க்களிடை@ய, சட்டசபையில் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சட்டசபையில், நடந்த விவாதம்:
செழியன் - தி.மு.க., : பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய முக்கிய அறிவிப்புகள், திட்டங்களை, கவர்னர் உரையில் எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால், இதுபோன்ற எந்த அறிவிப்புகளும், கவர்னர் உரையில் இடம்பெறாதது, ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
பன்னீர்செல்வம் - நிதியமைச்சர்: காவிரி டெல்டா விவசாயிகளைப் பற்றி பேச, தி.மு.க.,விற்கு, எந்த அருகதையும், தகுதியும் கிடையாது. காவிரி இறுதி தீர்ப்பு, 2007ல் வெளியானது. அந்த தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, அப்போதில் இருந்தே, ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் நீங்கள், இந்த பிரச்னைக்காக, என்ன செய்தீர்கள்? இந்த பிரச்னையில், இம்மாதம், 20ம் தேதிக்குள், மத்திய அரசிதழில், தீர்ப்பை வெளியிட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, முதல்வர் ஜெயலலிதா தான், காரணகர்த்தா. இந்த பிரச்னைக்காக, ஒரு சிறு துரும்பைக் கூட, தி.மு.க., கிள்ளிப் போடவில்லை. எனவே, டெல்டா விவசாயிகளைப் பற்றி பேச, உங்களுக்கு அருகதையும், தகுதியும் கிடையாது.
செழியன்: நான், காவிரி டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., எனக்கு பேச உரிமை இருக்கிறது.
ஸ்டாலின் - தி.மு.க.,: காவிரி டெல்டா பிரச்னையை பேச, தி.மு.க.,விற்கு தகுதி இல்லை என, கூறுகிறார். உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறதோ, அதைவிட அதிகமான தகுதி, எங்களுக்கு உள்ளது.
வைத்திலிங்கம் - வீட்டு வசதித் துறை அமைச்சர்: கோடி, கோடியாய் கொள்ளை அடிக்க, தொலை தொடர்புத் துறை தான், எங்களுக்கு வேண்டும் என, போராடி, கேட்டு வாங்கிய நீங்கள், காவிரி டெல்டா பிரச்னைக்காக, எங்களுக்கு பதவி வேண்டாம் என, ஏன் கூறவில்லை? காவிரி பிரச்னையில், தி.மு.க., மாபெரும் துரோகம் இழைத்துள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.
தி.மு.க., திடீர் தர்ணா :
இதைத் தொடர்ந்து, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடையே, கடும் வாக்குவாதம் நடந்தது. ""அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை, சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். இல்லை எனில், இங்கேயே தர்ணா நடத்த வேண்டிய நிலை ஏற்படும்,'' என, ஸ்டாலின் கூறினார். சபையில், கடும் கூச்சல், குழப்பம் நிலவிக் கொண்டிருந்த போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கம் தென்னரசு, ஜெ.அன்பழகன், கம்பம் ராமகிருஷ்ணன்
உள்ளிட்ட, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், வேகமாக சபாநாயகர் இருக்கையின் இடதுபுறத்தில், கீழே அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே, சம்பந்தபட்ட, எம்.எல்.ஏ.,க்களை, சபையில் இருந்து வெளியேற்ற, சபாநாயகர் உத்தரவிட்டார். ஐந்து எம்.எல்.ஏ.,க்களையும், சபைக் காவலர்கள் வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சபையில் இருந்து, வெளிநடப்பு செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.