சென்னை:பல்லாவரம் ஏரியில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால், அப்பகுதியின் நிலத்தடி நீர், பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்து காணப்படுகிறது. "ஏரியில் குப்பை கொட்ட கூடாது' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், "வேங்கட மங்கலத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவங்கும் வரை, வேறு வழியில்லை' என, நகராட்சி அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.
சுடுகாட்டில்...
பல்லாவரம் நகராட்சிக்கு
உட்பட்ட பகுதிகளுக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கிய, பல்லாவரம் பெரிய ஏரி, 513 ஏக்கர் பரப்பளவும், 2.2 கோடி கன அடி கொள்ளளவும் கொண்டதாக இருந்தது.
கடந்த, 1991ம் ஆண்டுக்கு பின், ஆக்கிரமிப்பில் சிக்கிய ஏரி, தற்போது, 100 ஏக்கருக்கும் குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட, 42 வார்டு களில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பை, குரோம்பேட்டை
மற்றும் பல்லாவரத்தில் இருந்த காலி மனைகளில் கொட்டப்பட்டு வந்தது.
அப்பகுதிகளில் குடியிருப்புகள் வந்தவுடன், பல்லாவரம் ஏரியை ஒட்டியுள்ள கணபதிபுரம் சுடுகாட்டில், 1996ம் ஆண்டு முதல், குப்பை
கொட்டப்பட்டு வந்தது.
ஏரியில் குப்பை
சுடுகாடு முழுவதும், குப்பையால் நிரம்பியதும், அருகில் இருக்கும், பல்லாவரம் பெரிய ஏரிக்கு, குப்பை தள்ளப்பட்டது. நாளடைவில், ஏரியிலேயே, குப்பை கொட்டும் வழக்கம் துவங்கியது.
ஏறத்தாழ, கடந்த 15 ஆண்டுகளாக, தொடர்ந்து இவ்வாறு குப்பை கொட்டப்படுவதால், ரேடியல் சாலையால், இரண்டாக பிரிந்த பல்லாவரம் ஏரியின் ஒரு பகுதி முழுவதும், தற்போது, குப்பையால் நிரம்பி
காணப்படுகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவு, பசுமை தீர்ப்பாயத்தின் கண்டிப்பு என, பல்வேறு நீதி அமைப்புகளின் உத்தரவுகளையும் மீறி, பல்லாவரம் ஏரியில், நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பையை கொட்டி வருகிறது.
இதற்கு, "வேறு இடம் இல்லாததால், எங்களுக்கு எந்த வழியும் இல்லை' என்பது மட்டுமே, நகராட்சி அதிகாரிகளின் பதில். விளைவு, பல்லாவரம் ஏரி, தற்போது மீட்க முடியாத அளவுக்கு படுமோசமாகி விட்டது.
வேங்கடமங்கலம் திட்டம்
ஏரியில் குப்பை கொட்டுவதை நிறுத்த, வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்க, உரக்கிடங்கு திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2008ல், இதற்காக தீட்டப்பட்ட திட்டம், இன்னமும் இழுத்து கொண்டிருக்கிறது. வேங்கடமங்கலத்தில் உரம் தயாரிப்பு, மக்காத
குப்பையை பள்ளத்தில் கொட்டி நிரப்புவது என, முதலில் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்திய நிறுவனம், சொந்த காரணங்களுக்காக, பணியை பாதியில் நிறுத்தியதால், நகராட்சி அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மாற்று திட்டம் தற்போது, எக்ஸ்.எல்., இன்ப்ரா என்ற நிறுவனத்திடம், மறு ஒப்பந்தம் செய்யப் பட்டு உள்ளது. இந்நிறுவனம், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.இதற்கு திட்ட மாறுதல், ஒப்புதல், அரசு துறைகள் அனுமதி என, பல்வேறு நடைமுறை
சிக்கல்கள் இருப்பதால், வேங்கட மங்கலத்திற்கு குப்பையை கொண்டு செல்லும் திட்டம், மேலும் இழுபறிக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "வேங்கடமங்கலம் திட்டத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி மட்டுமே பெற வேண்டும். விரைவில் பெற்று, பணிகளை துவக்கி, ஓராண்டிற்குள், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவோம்' என்றனர்.
மேலும், "இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், பல்லாவரம் ஏரியில் உள்ள குப்பையை, வேங்கடமங்கலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை, ஏரியில் குப்பை கொட்டுவதை தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை' என்றனர்.
ஏரியை மீட்பது சாத்தியமா?
பல்லாவரம் நகராட்சியில், தினசரி, 100 டன் குப்பை சேகரமாகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஏரியில் குப்பை கொட்டப்படுகிறது.
மக்கிய குப்பை மற்றும் தீ வைத்து எரித்த குப்பை போக, தற்போது, ஏரியில் குறைந்தபட்சம், மூன்று லட்சம் டன் குப்பை இருக்கும் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ""பல்லாவரம் ஏரி குப்பையை அப்புறப்படுத்துவது சவாலான விஷயம் தான். அரசு முழு முயற்சி எடுத்தால், ஏரியை மீட்க முடியும். இந்த முயற்சியை இன்னும் சில ஆண்டுகள் கழித்து எடுத்தால், ஏரியை மீட்பது சாத்தியப்படாது,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.